புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாள் விழா ஓட்டேரியில் பெரியார் மருத்துவ குழுமத்தின் மருத்துவ முகாம்

viduthalai
2 Min Read

புரசை, ஏப்.17- வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரசை சிவ சண்முக புரம் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நல்வாழ்வு மன்றத்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.கார்த்திக் ஒருங்கிணைப்பில் பெரியார் மருத்துவரணியின் இயக்குநர் இரா.கவுதமன் வழிகாட்டுதலின்படி மருத்துவ முகாம் நடைபெற்றது.

வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சரான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அரசாணையாக வெளியிடப்பட்ட சமத்துவ நாள் உறுதிமொழியை,  வழக்குரைஞர் சு.குமாரதேவன் வாசிக்க அனைவரும்  சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமினை,  திராவிடர் கழகத் துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடங்கி வைத்தார். அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி,  காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை, சென்னை கிழக்கு மாவட்ட மேனாள் இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், 99ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் பரிதி இளம் சுருதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில்
மருத்துவ முகாம்

பெரியார் மருத்துவக் குழுவினர் மருத்துவர் ராஜேஸ்வரி, வீ.கா.ரா. பெரியார் செல்வி, செவிலியர்கள் ஆக்னஸ், உமா மற்றும் சந்தியா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் உள்ள ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி மாத்திரைகளை வழங்கினர். இந்த மருத்துவ முகாமில், ஆண்கள், பெண்கள்,  குழந்தைகள் என 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அம்பேத்கர் மக்கள் நல்வாழ்வு மன்ற தலைவர் நீலகண்டன் ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

ஓட்டேரி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி பாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் த.பரிதின், பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், கொளத்தூர் ராசேந்திரன், கோபாலகிருஷ்ணன், கண்மணி துரை, திராவிடர் மாணவர் கழக தலைவர் சஞ்சய், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இளவரசி, க.நித்தியகுமார், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *