அரசிதழில் பெயர் திருத்தம் மாற்றத்திற்கான இணைய வழி சேவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 

viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.17 பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும்  என்று பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (16.4.2025) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

பெயர் மாற்றம்

பொதுமக்களிடம் இருந்து அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்கள், உரிய ஆவணங்கள், வெளியீட்டுக் கட்டணம் ஆகியவை இணையவழியில் பெறப்பட்டு, இணைய வழியிலேயே சரிபார்க்கப்பட்டு உரிய அதிகாரியால் ஆணை பிறப்பிக்கப்படும். முதன்முறையாக விரைவுத்துலங்கல் குறியீடு (QR Code) அங்கீகார வசதியுடன் அரசிதழில் வெளியிடப்படும். இதற்கான மென்பொருள், மின் ஆளுமை முகமை (TneGA) மூலம் உருவாக்கப்படும். இந்த சேவை வரும் ஜூலை மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

பொதுமக்கள் புகார் அளிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மய்யம்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை, ஏப்.17 ஊழல் தடுப்பு மற்றும் கையூட்டு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மய்யம் அமைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். பேரவையில் நேற்று (16.4.2025) மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு:

* சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் கட்டடம் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ரூ.55 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் இளைஞர்களின் நலன் கருதி, கூடுதலாக சென்னை, அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் ஒரு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மய்யம் தொடங்கப்படும்.

* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அவ்வியக்ககத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு இ-ஆபிஸ் திட்டத்தின் மூலம் தேவையான மூலதனச் செலவுகள் மேற்கொள்ளப்படும்.

* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் ஒரு கருவி வீதம் 46 குரல் பதிவு செய்யும் கருவிகள் ரூ.6.32 லட்சத்தில் வழங்கப்படும்.

* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் புலன் விசாரணை அலுவலர்களுக்கு 144 மடிக்கணினிகள் ரூ.99 லட்சத்தில் வழங்கப்படும்.

* ஊழல் தடுப்பு மற்றும் கையூட்டு தொடர்பாக பொதுமக்கள் தடையின்றி கட்டணமில்லா தொலைபேசி மூலம் எளிதாக புகார் அளிக்க ஏதுவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மய்யம் முதலமைச்சரின் முகவரி துறையின் கீழ் ரூ.53.75 லட்சத்தில் அமைக்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *