மொழித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா கண்டனம்
சென்னை, ஏப்.17 –தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்ட 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களில் ஹிந்தி பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மொழித் திணிப்புக்கு எதிரான தமிழ்நாடு, கேரளா கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹிந்தி தலைப்புகள்
ஒன்றிய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சிலின் (என்சி இஆர்டி) புதிய பாடப் புத்தகங்களில் ஆங்கில வழி பாடங்களுக்கு ஹிந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ‘ஹனிசக்கிள்’ ‘ஹனி கோம்ப்’ என்று இருந்த நிலையில் தற்போது ‘பூர்வி’ என பெயரிடப் பட்டுள்ளது. இதேபோல் 1ஆம் வகுப்பு புத்தகம் ‘மிருதங்’ 2ஆம் வகுப்பு ‘சந்தூர்’ கணித புத்தகம் ‘கணித பிரகாஷ்’ அறிவியல் புத்தகம் ‘ஜிக்யாசா’, சமூக அறிவியல் ‘சமாஜ்கா அத்யாயன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் மொழியியல் பன் முகத் தன்மையை மதிக்காத கலாச்சாரத் திணிப்பு நடந்ததாக தென் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த மாற்றங்களை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்கின்றன.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தனது எக்ஸ் தளப் பதிவில்: ‘‘இது அரசமைப்பு சட்டத்துக்கும், ஆட்சி மொழிகள் சட்டத்துக்கும் எதிரானது எனக் கண்டித்துள்ளார். ‘திராவிட மண்’ ஹிந்தி திணிப்புக்கு எதிராக சத்தமாக எதிரொலிப்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இதே விவகாரம் தொடர்பாக, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்: “அனைத்து ஆங்கில தலைப்புகளும் ஹிந்தியில் மாற்றப்பட்டுள்ளன. இப்போது ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் பதில்கள் ஹிந்தியில் வருகின்றன. நாள்தோறும் ஹிந்தித் திணிப்பு நடக்கிறது” என ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார்.
கேரளாவின் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி: NCERT இன் இந்த முடிவு, பன்முகத்தன்மையை அழிக்கும் கலாச்சாரத் திணிப்பு என கண்டித்தார். அவர், “ஒன்றிய அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.