சென்னை, ஏப்.16- சட்டமன்றத்தில் 15.4.2025 அன்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ண முரளி (கடையநல்லூர்) பேசினார்.
அப்போது அவர், ‘எச்.அய்.வி தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது:–
தமிழ்நாட்டில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 908 பேருக்கு எச்.அய்.வி. பாதிப்பு உள்ளது. 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மய்யங்கள் மூலம்
எச்.அய்.வி. தொற்றாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1 லட்சத்து 41 ஆயிரத்து 341 எச்.அய்.வி. தொற்றாளர்கள் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எச்.அய்.வி. தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி மருத்துவ செலவுக்காக மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ரூ.5 கோடி வைப்பு நிதி கொடுத்தார். அது தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது.
எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 7,618 குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுக்காக 1.81 கோடி செல விடப்பட்டு உள்ளது. எச்.அய்.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வடசென்னை பேசின்பாலம் நெரிசலை குறைக்க நடவடிக்கை
அமைச்சர் எ.வ.வேலு உறுதி
சென்னை, ஏப்.16- சென்னை மக்களை, நகரின் மய்யப் பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய பகுதியாக பேசின்பாலம் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. சில நேரங்களில் மணிக்கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது உண்டு.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் (பொம்பூர்), பேசின் பாலத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. வியாசர்பாடியில் இருந்து சென்டிரல், பிராட்வே நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் பேசின் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். எனவே பேசின் பாலத்தை அகலப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, பேசின் பாலம் மிகவும் பிரசித்தி பெற்ற பாலம். அந்த பாலம் நெரிசலான பகுதிதான். அந்த பாலத்தை விரிவுபடுத்தலாமா? அல்லது புதிய பாலம் கட்டலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து, சாத்தியக்கூறு இருந்தால் இந்த ஆண்டே பணிகள் தொடங்கப்படும் என்றார்.