ஊட்டி, ஏப்.13- தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கையால் ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மய்யத்தில் 11.4.2025 அன்று நடந்தது. கல்லூரி முதல்வர் நா.ராமலட்சுமி வரவேற்றார்.
அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் முன்னிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். பின்னர் அவர் பேசியதாவது:
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங் களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார்.
கடந்த வாரம் அவர் ஊட்டிக்கு வந்து, சென்னை திரும்பியவுடன் மற்ற மாவட்டங்களை விட ஊட்டியில் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த அளவுக்கு மக்கள் அன்போடு இருக்கிறார்கள். கடந்த நிதிநிலை அறிக்கை தாக்களின் போது 32 மாவட்ட பிரதிநிதிகள் தங்கள் மாவட்டத்தில் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கேட்டனர். அவற்றில் முதலமைச்சர் 10 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார். அதில் முதலாவதாக குன்னூரில் தான் கல்லூரி அமையும் என்று கூறினார்.
எடுத்துக்காட்டு
நேற்று வரை நீங்கள் மாணவர்கள், இன்று பட்டதாரிகள். திருமணத்தின் போது மாணவிகளுக்கு பெற்றோர் சீர்வரிசை கொடுத்து அனுப்புவார்கள். ஆனால், எத்தனை சீர்வரிசை கொடுத்தாலும் இந்த பட்டப் படிப்புக்கு இணையாகாது. இதுதான் உங்களை உயர்த்தும். ஒரு குடும்பத்தில் பெண் ஒருவர் படித்தால், அந்த சமூகம் உயரும், அதன் மூலம் நாடும் உயரும்.
இன்று பெண்கள் விண்வெளி வரை பயணம் செய்ய ஆரம்பித்து விட்டனர். தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள முதல் பட்டதாரிக்கு திமுக அரசு கூடுதல் மதிப்பெண் கொடுத்து உயர் கல்வியில் சேர்த்தது. நான் அரசு பள்ளியில் படித்து, பட்டதாரியாகி இன்று அமைச்சராக இருக்கிறேன். ஒரு குடிசையில் பிறந்து வளர்ந்தாலும் கூட கடைக்கோடி மகனும் உயர்வான் என்பதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு.
உயர் கல்வித்துறையில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. நான் ‘முதல்வர் திட்டம்’,‘புதுமைப் பெண் திட்டம்’ போன்றவை பெண்கள் படிப்பதற்கு உறுதுணையாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே ஊட்டியில் தான் அதிக மாணவிகள் உதவித்தொகை பெறுகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊட்டியில் பேசும் போது, ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்று கூறினார். அதன்படியே இப்போது வென்று காட்டியிருக்கிறார். ஆளுநருக்கு கடிவாளம் போட்டுள்ளார். ஆளுநரின் கடமை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.