ஆ…ளுநரே… ஆ…ளுநரே…

Viduthalai
3 Min Read

தமிழ்நாடு அரசியல் பல திருப்பங்களைக் கண்டுள்ளது. பல ஆளுநர்களையும் முதலமைச்சர்களையும் கண்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கலாச்சாரம், பன்பாடு, மொழி, மற்றும் இம்மண்ணிற்கே உரிய பழக்க வழக்கங்களுக்கு எதிராக ஒரு நபர் தொடர்ந்து முக்கிய பதவியில் அமர்ந்துகொண்டு தனது செயல்களால் தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கு நேர்ந்துள்ளதே என்று தெரிந்தும் தனது செயல்பாடுகளை

தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார் ஆளுநர் ரவி…
நாகாலாந்தில் ஆதிக்க முயற்சி
நாகாலாந்து முதலமைச்சர் நெய்ஃபியு ரியோவின் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்டு மாநில அரசை மிரட்டினார் அவரது அத்து மீறும் செயல்பாடு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு அரசின் சுயாட்சியை பாதித்து, நாகாலாந்து அரசியலில் புயலை கிளப்பினார். NDPP கட்சியும் அவரை கடுமையாக விமர்சித்தது.

போராளிகளின் கோபம்
NSCN (I-M) போராளிகள், ரவியை அமைதிப் பேச்சு இடைத்தரகரிலிருந்து நீக்க வேண்டும் என கோரினர். 2015 பிரேம்வொர்க் ஒப்பந்தத்தை திரித்து, நாகா மக்களின்கோரிக்கைகளை புறக்கணித்ததாக குற்றம்சாட்டினர். ரவியின் பிடிவாதமும், தவறான அணுகுமுறையும் அமைதிப் பேச்சுவார்த்தையை தடைபடுத்தியது. இதனால், நாகா மக்களிடையே அவருக்கு எதிரான கோபம் பற்றி எரிந்தது
கோஹிமா மக்களுக்கு ரவியின் பிரிவு நிம்மதி!
ரவி தமிழ்நாட்டுக்கு ஆளுநராக மாற்றப்பட்டதால் நாகாலாந்து மக்கள் ஆசுவாசம் அடைந்தனர் கோஹிமா பத்திரிகையாளர் மன்றம் அவரது வழியனுப்பு விழாவை புறக்கணித்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ரவியின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், அவரது பதவி மாற்றத்தை கொண்டாடினர் நாகாலாந்து அரசியலில் அவரது தலையீடு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது4.

தமிழ்நாட்டில் சர்ச்சைப் பேச்சு
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ரவி, ஸநாதனம் மற்றும் வேத மரபை புகழ்ந்து பேசினார். திராவிடம், கம்யூனிசம் தோல்வியடைந்ததாகவும், ஜாதியை ஆங்கிலேயர்கள் உருவாக்கியதாகவும் திராவிடம் என்பது அசிங்கமான வார்த்தை என்பது போலப் பேசி அடிக்கடி தமிழர் விரோதி என்பதை காட்டிக்கொண்டே இருந்தார்.
சமத்துவ அருள்நெறி வள்ளலாரை ஸநாதனத்தின் ஒளி என்று கதைவிட்டார். ஸநாதனக் கொள்கையை ஒழித்து, அதன் மீது சமத்துவ கோட்டை கட்டிய அய்யா வைகுண்டரையும் ஸநாதன வட்டத்திற்குள் திணிக்க அவ்வப்போது கதைவிட்டார்.
திராவிட மொழி இலக்கணம் தந்து தமிழுக்காக தன்னுடைய மண்ணை விட்டு மாட மாளிகைகளத் துறந்து பல ஆயிரம் மைல் தூரம் கடல் கடந்து தமிழ்நாடு வந்து, ஒவ்வொரு கிராமமாக சென்று அவர்கள் சாப்பிடும் கூழையும் கஞ்சியையும் குடித்து அவர்கள் பேசும் மொழியின் அருமையை அறிந்து தமிழைப் போற்றிய கார்டுவெல், ஜி யூ போப் போன்ற மொழியியல் மேதைகளை கொச்சையாகப் பேசினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தையே பாடக்கூடாது என்று நேரடியாக கூறினால் பிரச்சினை வரும் என்று தேசிய கீதம் முதலில் பாடு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிக்கோ என்று பல ஆண்டுகளாக இருக்கும் தமிழ்நாட்டின் மரபை எதிர்த்தார். இது தவறு என்று சுட்டிக்காட்டினால் தேசத்துரோகி என்று பொது மேடையில் பேசினார். இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதுஅவரது பேச்சு அரசியல் சட்டத்திற்கு எதிராக இருந்ததாக பலரும் விமர்சித்தனர்.

உச்சநீதிமன்றம் ரவியை பதம் பார்த்தது
ரவியின் அரசியல் சட்ட மீறல்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பை வழங்கியது. மசோதாக்களை தாமதப் படுத்தியதும், ஆளுநர் பதவியை தவறாக பயன்படுத்தியதும் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. சட்டவிரோதமாக செயல்படுகிறோமோ என்று தெரிந்துமே ஒரு நபர் முக்கியப் பதவியில் அமர்ந்துகொண்டு தொடர்ந்து அரசிற்கு நெருக்கடிகொடுக்கும் வேலையைச் செய்துவருகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *