5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ரூ.1000 கோடி முதலீட்டில் டிக்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை, ஏப்.10  சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-2025-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு 2024-2025-ஆம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.

தமிழ்நாடு இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த 2021 மே மாதம் முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டு, ரூ.10,14,368 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்

 கடந்த 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மின்னணு நுகர் பொருட்கள், விளக்குகள் மற்றும் கைபேசி சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசானிக், TCL டெக்னாலஜீஸ், ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கிவருகிறது. இந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசின் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் இடையே நேற்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் முன்னிலையில புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது, டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் வச்சானி, துணைத் தலைவர் ப்ருத்வி வச்சானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *