சென்னை,ஏப்.10– “‘நீட்’ விலக்குப் பெற தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம்” என்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தலைவர்கள் உறுதிபடக் கூறினர்.
தமிழ்நாடு அரசு வெற்றி பெறும்!
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி தீர்மானத்தை வரவேற்றுப் பேசியதுடன், நீட் தேர்வு முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினர். பின்னர், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும், சட்டப் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர். அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்த சட்டமுன்வடிவுகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த சட்டரீதியான நடவடிக்கைகளால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த நீட் விலக்கு தொடர்பான வழக்கிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
பின்னர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் முன்மொழியப் பெற்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நன்றியுரை ஆற்றினார்.
கலந்துகொண்ட தலைவர்கள்
இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அய்.பரந்தாமன், மருத்து வர் நா.எழிலன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் செ.ராஜேஷ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிந்தனை செல்வன் மற்றும் எஸ்.எஸ். பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.இராமச்சந்திரன், கே.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாலி, சின்னதுரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார், பூமிநாதன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, ப.அப்துல் சமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தி. வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.