துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்!

Viduthalai
1 Min Read

“ஒன்றிய அரசு ‘நீட்’ விலக்குக்கு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேவைப்படின் புது வழக்குத் தொடர சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து சட்ட மன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானத்தை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் முன்மொழிந்தார். அத்தீர்மானம் வருமாறு:

தீர்மானம்
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு “நீட்” தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இந்தவகையில், “நீட்” தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தா லோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *