சென்னை,ஏப்.7- சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மய்யங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை நிலை விளையாட்டு மய்யத்தில் சேர விருப்பமுள்ள 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கு ஏப்.30ஆம் தேதி கடைசி நாள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மய்யங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இம் முதன்மை நிலை விளையாட்டு மய்யங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 5.4.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை நிலை விளையாட்டு மய்யத்தில் சேர விருப்பமுள்ள 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளில் சேர விரும்பும் 13 வயதுக்க்குட்பட்ட மாணவ, மாணவிகள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கு ஏப்.30ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மய்ய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம்.
முதன்மை நிலை விளையாட்டு மய்யத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற மே 2ஆம் தேதி அன்று காலை 7 மணியளவில் நடைபெற இருப்பதால் இணையம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.