சென்னை, ஏப்.7- சென்னையில் மெட்ராஸ் – அய் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் – அய் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது சென்னையில் மெட்ராஸ்-அய் எனப்படும் கண் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ்-அய் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சென்னையில் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ்-அய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் யஷ்வந்த் ஆர்.ராஜகோபால் கூறியதாவது:-
மழை மற்றும் வெயில் காலத்தில் காலநிலை மாறும்போது மெட்ராஸ்-அய் பாதிப்பு பரவுகிறது. அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் இது ஏற்படுகிறது. தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
நோய் பாதிப்பு ஏற்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது. தொடுதல் மூலமாகவே பரவும். மெட்ராஸ்-அய் தொண்டை மற்றும் கண் ஆகிய 2 உறுப்புகளையும் பாதிக்கும். 10 முதல் 14 நாட்களில் இதுதானாகவே சரியாகிவிடும். இதை தடுக்க கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிவது, சத்தான உணவுகளை எடுத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்
மெட்ராஸ்-அய் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. சிலர் கண்களுக்கு தாய்ப்பால் ஊற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்து அதை பயன்படுத்துகி றார்கள். அவ்வாறு செய்தால் பாதிப்பு அதிகரித்துவிடும்.
கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும். தற்போது பள்ளி மாணவர்கள் மூலம் அதிகமாக பரவுகிறது. எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பது அவசியம். மெட்ராஸ் – அய் பாதிப்பு அறிகுறி தெரியும் பட்சத்தில் அவர்களை உடனடியாகவீட்டிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.