நீலகிரி, ஏப்.7 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றும், வக்பு வாரிய திருத்த சட் டத்தை எதிர்த்து தி.மு.க.சார்பில் உச்சநீதி மன்றத்தில் இன்று (7.4.2025) வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் ஊட்டி யில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை திறப்பு
மருத்துவமனை திறப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக 5.4.2025 அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிசென்றார்.
நேற்று (6.4.2025) காலையில் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புதிதாக ரூ.353 கோடியில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப் புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பார்வையிட்டார். அத்துடன் அங்கு நடந்த பழங்குடியினரின் நடனத்தை கண்டு ரசித்தார். இதையடுத்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரசு சார்பில் நடந்த விழாவில்
15 ஆயிரத்து 634 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் ரூ.727 கோடியில் முடிவுற்ற வளர்ச்சி பணி களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தும், புதிய வளர்ச்சி பணிகளுக்கு அடிக் கல் நாட்டியும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தொகுதிகள் எண்ணிக்கை குறைப்பு
நாங்கள் உழைப்பது இந்தியா முழுவதுமான சமூகநீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி மதநல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்தியல்களை வென்றெடுப்பதற்காகத்தான் அதனால் தான் நம்முடைய தி.மு.க. எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எடுத்து வைக்கும் வாதங்கள் இந்தியா வையே காப்பாற்றுவதாக அமைந்திருக்கிறது.
இதைப்பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள்?. தமிழ் நாட்டின் நாடாளுமன்றத் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மிகப்பெரிய சதி நடக்க இருப்பதை முதன் முதலில் உணர்ந்து அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடுதான். இது தொடர்பாக அனைத்துக்கட் சிக்கூட்டத்தை கூட்டினேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இது போல பாதிக்கப்படுகின்ற மாநிலங்கள் எல்லாவற்றையும் இணைத்து சென்னையில் ஒருகூட்டம் கூட்டப்பட்டது. ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 22 கட்சிகள் அந்தகூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தின் முடிவின்படி, அகில இந்தியா முழுமைக்குமான கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திருக்கி றோம். அந்த குழுவின் சார்பில், பிரதமர் மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறோம். பிரதமர் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்.
அச்சத்தை போக்க வேண்டும்
நான் நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால் பிரதமர் மோடி பங்கேற்கும் ராமேசுவரம் விழாவில் என்னால் பங்கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை நான் அவருக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். இந்தக் கூட்டத்தின் மூலமாக பிரதமர் மோடியை நான் கேட்கவிரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுடைய தொகுதி சதவீதம் குறையாது என்கிற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்க வேண்டும். அதற்கான அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ வெறும் தொகுதியின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது நம்முடைய அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்கால நலன்கள் பற்றிய கவலை.
வக்பு வாரிய திருந்த சட்ட திருத்தத்தை நள்ளிரவு 2 மணிக்கு ஒன்றிய பா.ஜனதா அரசு அனைத்து எதிர்கட்சிகளுடன் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி இருக்கிறார்கள்.
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு மக்களவையில் ஆ ராசா எம்.பியும் மாநிலங்கள் அவையில் திருச்சி சிவா எம்.பி.யும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினர். ஆனால் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டுமே மாநிலங்களவையில் பேசினார்.
அதுவும் அ.தி.மு.க. எதிர்க்கிறதா?, ஆதரிக்கிறதா? என்று கூட அவர் சொல்லவில்லை. கிரிக்கெட்டில் ‘டக் அவுட்’ ஆகும் பேட்ஸ்மேன் கூட ஒரு நிமிடத்திற்கு மேலாக களத்தில் இருப்பார். ஆனால் அ.தி.மு.க. அதுகுறித்து ஒரு நிமி டம் கூட பேசவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட அன்று காலை யிலேயே சட்டமன்றத்துக்கு கருப்பு பட்டை அணிந்து கொண்டு வந்து எதிர்ப்பைப் பதிவு செய் தோம்.
உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு
அது மட்டுமல்ல. தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறேன். நாளை (7.4.2025) நம்முடைய துணைப்பொதுச் செய லாளர் ஆராசா மூலம் வழக்கு தொடுக் கப்படும். தமிழ்நாடு நீட் விலக்கு சட்ட மசோதாவை ஒன்றிய பா.ஜனதா அரசு நிராகரித்து இருக்கிறது. இதை சட்டமன்றத்தில் நான் அறிவித்துவிட்டு அடுத்தகட்ட சட்ட, அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்க வருகிற 9-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறேன். ஆனால், எதிர்க்கட்சித்தலை வர் பழனிசாமி என்ன செய்கிறார்?.
நீட்’ தேர்வால் மாணவ, மாணவிகள் பலியானதற்கு தி.மு.க. மீது குற்றம் சொல்லி, அறிக்கை விடுகிறார். நான் கேட்கிறேன். தி.மு.க. ஆட்சி யில் இருக்கும்போது தமிழ் நாட்டில் நீட் இருந்ததா? இல்லை. கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த வரை ‘நீட்’ இல்லை. இவ்வளவு ஏன்? ஜெயலலிதா இருந்தவரை கூட நீட்டைத் தமிழ்நாட்டுக் குள்ளே அனுமதிக்கவில்லை.
அவர் மறைவுக்கு பிறகு தான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுக்கு பாதம் தாங்கிகளாக இருந்து இதை அனுமதித்தார்கள். இதுதான் உண்மை.
ஏன் நிபந்தனை விதிக்கவில்லை
இப்போது நான் கேட்பது கூட்டணியில் இருந்தபோதும், கூட் டணியாக தேர்தலைச் சந்தித்தபோதும் நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் நீங்கள் பா.ஜனதாவிடம் நிபந்தனை விதிக்கவில்லை? ஆனால், நம்முடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூலமாக”இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தெளி வாக சொன்னார் நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்று தேர்தலில் உறுதிமொழி அளித்தார்.நாங்கள் சொல்ல வைத்தோம். இப்போது ‘நீட்’ ரகசியத்தை சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி மட்டும் ஒன்றியத்தில் அமைந்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவுடன் கூட்டணி இருக்கிறது. இல்லை என்று மாற்றி மாற்றி பேசுகின்ற உங்களுக்கு தான் இந்த மேடையில் இருந்து சவால் விடுகிறேன். தமிழ்நாட்டு மாணவர்கள் மேல் உங்களுக்கு துளியாவது அக் கறை இருந்தால், பா.ஜனதாவுடன் கூட் டணிக்கு போவதற்கு முன்னால், “நீட் விலக்கு தந்தால்தான் கூட்டணி!” என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா?.
மக்கள் மேல் நம்பிக்கை
எங்களைப்பொறுத்தவரையில் மக்களான உங்கள் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கையால் சொல்கிறேன். சங்க காலத்து உரம்பெற்று. குடியாட்சி காலத்தில் கோலோச்சும் தமிழ்நாட்டை எத்தகைய அரசியல் சூழ்ச்சிகளும் வீழ்த்திட முடியாது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீழ்த்தவும் விட மாட்டான். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
6 அறிவிப்புகள்
விழாவில், ஊட்டியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மய்யம்” அமைக்கப்படும். நீலகிரி மாவட்டம் முழுக்க இருக்கின்ற இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கின்ற வகையில், “எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்” எனும் சுற்றுலா முறை ரூ.5 கோடி செலவில், 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப் படும். ஊட்டியில் சுற்றுலா காலங் களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ரூ.20 கோடி செலவில் கார் நிறுத்தும் வசதி அமைக்கப்படும் என 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
முன்னதாக இந்தவிழாவில் பங்கேற்கவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர். அவர்களது நடன நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்வையிட்டார்.