அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவர்கள் மீதா?

viduthalai
3 Min Read

நாடாளுமன்றத்தில் வக்ப் மசோதா நிறைவேற்றப்பட்ட பின் ஆர்.எஸ்.எஸின் அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவ நிறுவனங்களின் மீது என்று தெரிகிறது.
ஆர்எஸ்எஸின் ஒரு கட்டுரையில், நாடாளுமன்றத்தில் வக்ப் (திருத்த) மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின், கிறிஸ்தவர்களால் நிர்வாகிக்கப்படும் நிலத்தின் மீது நரேந்திர மோடி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளது.

“இந்தியாவில் யாரிடம் அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்ப் போர்டு விவாதம்” என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸின் ஆர்கனைசர் இணைய தளத்தில் வெளி வந்துள்ள கட்டுரையில்,

கத்தோலிக்க நிறுவனங்களின் நில உடைமை 7 கோடி எக்டேர் என்று குறிப்பிட்டு அதை “மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளர்” என்று கூறுகிறது.
வக்ப் (திருத்த) மசோதா, வக்ப் சொத்துக்களை ஒழுங்குபடுத்தவும் சர்ச்சைகளைத் தீர்க்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரங்களை வழங்க 1995 வக்ப் சட்டத்தில் விரிவான மாற்றங்களை முன்மொழிகிறது. ஒரு வக்ப் சொத்து என்பது ஒரு முஸ்லிமால் மதம், கல்வி மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக வழங்கப்படும் அறக்கட்டளை ஆகும், மற்றும் வக்ப் வாரியங்களால் நிர்வகிக்கப்படும் நிலத்தின் மீது அரசாங்கம் கட்டுப்பாட்டைப் பெற வழிவகுக்கிறது
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ‘தி ஆர்கனைசர்’’ கத்தோலிக்க திருச்சபையை நோக்கிய அதே போன்ற நடவடிக்கைக்களைத் தொடங்கி உள்ளதாக கட்டுரை தீட்டி உள்ளது.

“அரசாங்க தகவல் படி, பிப்ரவரி 2021 நிலவரப்படி, சுமார் 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தை உடை மையாகக் கொண்டுள்ளது… வக்ப் வாரியம் பல்வேறு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க நிலப் பகுதிகளை உடைமையாகக் கொண்டிருந்தாலும், அது இந்தியாவில் கிறிஸ்தவ நிறுவனங்களின் நிலங்களுக்கு இணையாக உள்ளது” என்று ஆர்கனைசர் குறிப்பிட்டுள்ளது.

“அறிக்கைகளின்படி, இந்தியாவின் கிறிஸ்தவ நிறுவனங்கள் நாடு முழுவதும் சுமார் 7 கோடி எக்டேர் (17.29 கோடி ஏக்கர்) நிலத்தை உடைமையாக கொண்டுள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20,000 கோடி, இது திருச்சபையை இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு முக்கிய பங்காளியாக்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளது – ஆர்.எஸ்.எஸ். இணையதளம்.

ஆர்எஸ்எஸ்., பாஜக – மக்களுக்கு ஆசை காட்டி மற்றும் மிரட்டி பயமுறுத்தி, மக்களை மத மாற்றம் செய்வதை கிறிஸ்தவ மிஷனரிகள் இலக்காக கொண்டிருந்தனர் என்று கூறுகின்றன.

கிறிஸ்தவ நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான நிலம் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தது என்று கட்டுரை கூறுகிறது, அவற்றில் பல “சந்தேகத்திற்குரிய வழிமுறைகள்” மூலம் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு போய்ச் சேர்ந்ததாகவும் கூறுகிறது

அதே போல் கிறிஸ்தவ நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை கைப்பற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்கனைசர் எழுதியுள்ளது.

கிறிஸ்தவ நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் பலரால் ஆக்ரமிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.

இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதா போலவே கிறிஸ்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலத்தையும் பறிக்க முன்னேற்பாடுகளோடு ஆர்.எஸ்.எஸ் களமிறங்கி உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸின் நரித்தந்திரங்களை அறிந்தவர்களுக்கு – இந்த அணுகுமுறை ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபி அரசியலில் குதித்து, ஆட்சி அதிகாரத்தைக் கைபற்றியதன் நோக்கமே, இந்தியாவில் ஓர் ஹிந்து ராஜ்ஜியத்தை உருவாக்கவே தான்! அதற்குத் தடையாக உள்ள மதங்களைக் கபளீகரம் செய்வதே அதன் அழுத்தமான திட்டமும் – திமிரும் ஆகும்.

ஒடிசாவில் தொழு நோயாளிகளுக்குக் குடும்பத்துடன் தொண்டூழியம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்பவரும், இரண்டு மகன்களும் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த போது பஜ்ரங்தளைச் சேர்ந்த (ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவுதான்) தாராசிங் மற்றும் அவனின் கூட்டாளிகளால் ஈவு இரக்கமின்றி எரித்துக் கொலை செய்யப்படவில்லையா? (22.1.1999).

தாராசிங் மற்றும் 12 பேர்களுக்கும் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கவில்லையா? வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ஒரு பொறுப்பான பதவியில் அன்று உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, பஜ்ரங்தள் அமைப்பினர் மிகவும் நல்லவர்கள், அவர்கள் பாதிரியாரையும், அவரது பிள்ளைகளையும் கொன்றிருக்க மாட்டார்கள் என்று பொறுப்பற்ற முறையில் கருத்துத் தெரிவிக்கவில்லையா?

அமர்த்தியா சென்னுக்கும் அன்னை தெரசாவுக்கும் நோபல் பரிசு கிடைக்கப் பெற்றது கிறிஸ்தவ சதி என்று கூறியது வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால்தானே!
மீண்டும் கூறுகிறோம். பிஜேபி ஆட்சியின் நோக்கம் மக்கள் வளர்ச்சிக்கானதல்ல – ஹிந்து ராஷ்டிரம் அமைப்பதே – அதற்கு முன் மற்ற மதங்களைத் தரை மட்டமாக்குவதே!

மத எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் உறுதியாக ஒன்று சேரட்டும் – ஹிட்லரின் பாசிசத்தை இந்தியாவில் முறியடிக்கட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *