விருதுநகரில் பழனியப்பன்-நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்தம்பி, மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்புக்கொண்டார். அவ்வியக்கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்துடன் படித்ததோடு, சுற்றுவட்டாரத்தில் இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்புஉணர்வு பெற்றார்.
28.05.1944 அன்று தந்தை பெரியார் தலைமையில் பரமேசுவரி அம்மாளைச் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்
தந்தை பெரியார் மீது பேரன்பு கொண்ட ஆசைத்தம்பி தன்னுடைய ஒவ்வொரு இல்லவிழாவிற்கும் தந்தை பெரியாரை அழைக்காமல் இருக்கமாட்டார். மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தார். வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார். தனியரசு என்ற இதழை சிறப்பாக நடத்தினார்.
திராவிடக் கொள்கையில் தீவிரமான ஈடுபாடுகொண்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி மறைந்த நாள் இன்று.