இக்கட்டுரையாளரான திரு. மே.து.ராசுகுமார் அவர்கள் சிறந்த முற்போக்கு எழுத்தாளர். நடுநிலைப் பார்வையோடு எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை என்ற தகுதி பெற வேண்டிய அவரது இந்த கட்டுரை நமது வாசகர்கள் சிந்தனைக்காக இங்கு வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சிறந்த மாத ஏடுகளில் ஒன்றான, முற்போக்கு இதழான ‘காக்கைச் சிறகினிலே’ ஏப்ரல் (2025) இதழில் வெளிவந்துள்ளது.
ஊன்றிப் படித்து சிந்தித்து பார்க்கவும். – ஆசிரியர்
பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர் மே.து.ராசுகுமார்
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட மிகுதியான தனிநபர் தாக்குதல்கள் தற்போது அவர் மேல் தொடுக்கப்பட்டு வருகின்றன.
1. பெரியார் கன்னடியர்
2. தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பகையானவர்
3. தமிழர் உரிமைகளைப் பறிக்கவே திராவிடம் என்பதை முன்னிறுத்தினார்
4. பெண்களைத் துய்க்கும் பொருளாக இழிவுபடுத்தினார்
5. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று தாழ்த்திப் பேசினார்
6. தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கவில்லை
என்பன போன்ற குற்றச்சாட்டுகள் இப்போது பெரியாரைப் பற்றி எழுப்பப்படுகின்றன. காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகித் தனி இயக்கம் கண்ட நாளிலிருந்து பெரியார் எதிர்கொண்ட தாக்குதல்கள் பல. அவற்றையெல்லாம் எதிர்த்து நின்றுதான் பெரியார் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். தமிழர்களைத் தலைநிமிரச் செய்தார்.
வெளிப்படையாகவே துணிச்சலுடன் தனது பரப்புரைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தவர் பெரியார். அப்போதெல்லாம் பெரியார் மேல் இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளும் எந்தக் கட்டத்திலும் எழுந்ததாகத் தெரியவில்லை. கருத்தளவிலும் கொள்கை நிலையிலும் அரசியல் சார்பிலும் சமூகப் பார்வையிலும் தத்துவக் கோட்பாடுகளிலும் போராட்டப் போக்குகளிலும் முரண்பட்டுப் பேசியோரும் எழுதியோரும் இயங்கியோரும் பெரியார் காலத்தில் இருக்கத்தான் செய்தார்கள். அவர் மறைந்து அய்ம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பார்ப்பனர், இந்துச் சமயப் பித்தர், கடவுள் பற்றாளர், மக்களைக் கீழ்ப்படுத்திய மேல்நிலையினர், மாற்று அரசியல் இயக்கத்தினர் எனப் பெரியாரோடு பகைமை கொண்டோர் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் பெரியாரை ஏற்காவிடினும், அவரது செயல்பாடுகளில் உள்நோக்கம் கண்டதாகத் தெரியவில்லை. ஆனால், இன்று பெரியார் குறித்து எழுப்பப்படும் அய்யங்கள் அல்லது வினாக்கள் உள்நோக்கம் கொண்டவையாக அமைந்திருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
1. பார்ப்பனர்
2. இந்துப் பித்தர்
3. அடித்தள மக்களை மேலேற்ற மறுப்போர்
4. உண்மையான தமிழ்த் தேசியரில் சிலர்
5. அரசியலுக்காக மட்டுமே தேசியம் பேசும் சீமான்
போன்றோரிடமிருந்து பெரியார் மறுப்புக் குரல்கள் இப்போது மேலோங்கி எழுகின்றன. இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில், தமிழ்த் தேசியர்களில் சிலரும் சீமான் குழுவினரும் மட்டும்தான் இத்தகைய பெரியார் இழிவுப் பரப்பலில், பொய்மைகளைப் புனைந்துரைத்து வருகின்றனர். இவர்களில் சீமான் தமிழ்த் தேசியப் போர்வையில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளதால், அவரது பரப்புரையின் பகுதியாக நாள்தோறும் வெவ்வேறு சொற்களில் பெரியாரைத் தரம் தாழ்த்தித் தூற்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். தன்னுடைய இழிவுப் பணிகளைத் தானாக சீமான் மேற்கொண்டு வருவதாலோ அல்லது அவருக்குத் தந்த பணிகளைச் செம்மையாகச் செய்துவருவதாலோ, பிற பெரியார் எதிர்ப்பாளர்களின் நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி வருகின்றன. இதனால்தான், தமிழ்த் தேசியர் சிலரும் பாரதிய ஜனதாக் கட்சியினரும், மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் சீமானது வெறுப்பு அரசியலுக்கு அவ்வப்போது முட்டுக்கொடுத்து ஏற்பளித்து வருகின்றனர். இதைப் போன்று, சீமானும் பா.ஜ.க.வினரின் அடிப்படையான இந்துத்துவ அரசியலுக்கு அவ்வப்போது வெளிப்படையாகவே இணக்கம் காட்டிவருகிறார்.
பெரியார் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு முழுமையாக முறியடிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கூறவேண்டும். கேரள, ஆந்திர, கன்னடப் பகுதிகள் சில சென்னை மாமாநிலத்தில் இணைந்திருந்தபோது பெரியார் கொண்டாடிய ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற எதிர்பார்ப்பு நிலைப்பாடு முன்னது. மொழிவழி மாநிலங்கள் அமைந்து, தமிழ் மொழி பேசுகின்ற தனி மாநிலம் உருவான பின்னர் பெரியார் தனது முந்தைய நிலைப்பாடுகளைத் தயக்கமில்லாமல் மாற்றிக்கொண்டு, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற புதிய முழக்கத்தினை ஏற்றுக்கொண்டுவிட்டார்.
இன்னும் சொல்லப்போனால், தொடக்கத்தில் பெரியார் முன்னெடுத்தது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம்தான். திணிப்பு இந்தியை எதிர்த்து, 100 பேர், 42 நாள்கள் திருச்சியிலிருந்து நடைபயணமாக 11-09-1938 அன்று சென்னை வந்து சேர்ந்தபோது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று அறிவித்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டப் பின்னணியில் தளைப்படுத்தப்பட்டு பெல்லாரி சிறையில் இருந்தபோதுதான், கி.ஆ.பெ. விசுவநாதன் போன்றோரின் வேண்டுகோளினை ஏற்று நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெரியார் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, 1938 டிசம்பர் 29-31 ஆகிய நாள்களில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டின் தலைமையுரையிலும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தனது எதிர்பார்ப்பினைப் பெரியார் உறுதி செய்துவிட்டார். பெரியார் சிறையில் இருந்தபோது எழுதித் தந்த தலைமையுரை இது.
பெரியார் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், சென்னையிலுள்ள செட்டிநாடு மாளிகையில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட நீதிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்தான் அனைவரது வேண்டுகோளினையும் ஏற்று, அன்றைய சென்னை மாமாநிலத்தின் அமைவையும் கணக்கில் கொண்டு ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற புதிய முழக்கத்தினைப் பெரியார் ஒப்புக்கொண்டார்.
இதனையொட்டி, ‘குடிஅரசு’ இதழின் முகப்பில், 1939 டிசம்பர் திங்களிலிருந்து ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற சொற்கள் இடம் பெற்றுவந்தன. அடுத்து, 1949 மே திங்களில் திராவிட நாட்டின் அரசமைப்புச் சட்டம் என்ற பெயரில் வரைவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகள் திராவிட நாட்டில் அடங்கியிருக்குமென்றும், மாநிலங்கள் தனியாகப் பிரிந்து செல்லும் உரிமை உடையன என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். திராவிட நாடு என்ற ஒன்றியத்துள்ளும். தமிழ்நாட்டின் தனியுரிமை கைவிடப்படவில்லை.
1956 நவம்பர் முதல் நாள் மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னர், நவம்பர் 5ஆம் நாள் திருச்சியில் கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் மீண்டும் உயிர்பெற்றது. இதனையடுத்து, ‘விடுதலை’ இதழ் முகப்பிலும் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்பதற்கு மாற்றாக, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் மாற்றி அமைக்கப்பட்டது.
பெரியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்தபோதுதான் 05-05-1960ஆம் நாள் தமிழ்நாடு நீங்கலான இந்திய ஒன்றிய வரைபடத்தினை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. பெரியாரும் தளைப்படுத்தப்பட்டார். பின்னர் தனது உயிர்மூச்சு இருக்கும் வரை, பெரியாரின் செயல்பாடுகள் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதாகவே நீடித்திருந்தன. அவரது உயிர்மூச்சு நிற்பதற்கு முன்னர் தனது பிறந்த நாள் செய்தியிலும், சென்னை தியாகராயநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்த்திய இறுதிப் பேருரையிலும் தனித் தமிழ்நாடு வேண்டுகோளினையே அவர் நடுவப்படுத்தியிருந்தார்.
அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தனது திராவிட நாடு வேண்டுகோளினைக் கைவிடுவதற்குப் பல்லாண்டுகள் முன்னரே பெரியார் திராவிட நாட்டுக்கு மாறாகத் தனித் தமிழ்நாட்டினை முன்மொழிந்து விட்டார் என்பதுதான் வரலாறு.
இவற்றால், பெரியார் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர், கன்னடியர் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் மக்களிடையே எப்போதும் எடுபடவில்லை. பெரியாரின் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை மறைக்கவும் ஜாதி மறுப்பு, சமய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு, தமிழ்த் தேசியம் போன்றவற்றிலான பெரும் பங்களிப்பினைக் குறைக்கவும் பகையாளர்களால் எப்போதும் முடியவில்லை.
இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நிர்மலா சீதாராமன் போன்றோர் மக்களிடையே மதிப்பு ஏதும் கொண்டோர் இல்லை. நுட்ப முன்னேற்றத்தினால் வளர்ந்திருக்கும் ஊடகங்கள் வாயிலாகவே அவர்கள் தங்களது தாக்குதல்களைப் பெரிதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களிடையே சென்று பரப்புரை செய்யுமளவுக்கான ஈர்ப்பு ஆற்றல் அவர்களுக்கு அமையவில்லை. நாம் தமிழர் கட்சியினரோ, பா.ஜ.க.வினரோ மக்களைத் திரட்டும் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. இவர்களுக்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே இருளில் கிடந்த தமிழகத்தின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று பெரியார் தனது கருத்துக்களை விதைத்துவிட்டார். அவரது இயக்கத்தினரான திராவிடர் கழகத்தினரும் பணிகளைத் தொடர்கின்றனர். அய்யா ஆனைமுத்து அவர்கள் தொடங்கித் தற்போது வாலாசா வல்லவன் தலைமையில் இயங்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலை ராசேந்திரன், கொளத்தூர் மணி ஆகியோரது தலைமையில் செயல்படும் பெரியார் திராவிடர் கழகம், கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான பெரியார் இயக்கம் போன்றவையும் பெரியாருடைய பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இவையன்றி, திருமுருகன் காந்தி தலைமையிலான மே 17 இயக்கம் போன்ற பல அமைப்புகள் பெரியார் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பெரியார் இயக்கம் பிளவுபட்டுப் பல்வேறு பெயர்களில் செயல்பட்டுவந்தாலும், அரசியலுக்கு அப்பால் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் எடுத்துக்காட்டுகளாகப் பலரும் விளங்குகின்றனர் என்பதையும் புறக்கணித்துவிட முடியாது.
இதனால்தான், பெரியார் வெறுப்புக் கருத்துக்களை முன்வைத்துச் செல்வாக்குப் பெறப் பகையாளர்களால் முடியவில்லை. இந்தக் கருத்துக்களையெல்லாம் பெரியாருக்கு முன்னரே சித்தர், வள்ளலார், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் கூறிவிட்டதாகக் குரல் எழுப்புகின்றனர். இவற்றில் உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், இவற்றையெல்லாம் முன்னெடுத்துப் பெரியார் இயங்கியதையும் இயக்கம் கண்டதையும் மறுப்பார் எவருமில்லை. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளெல்லாம் பயணம் செய்து தனது கொள்கைகளைப் பரப்புரை செய்ததில்தான் பெரியாரின் பங்களிப்புத் தனித்து மேலோங்குகிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து ஏறக்குறைய அய்ம்பது ஆண்டுகள் பணியாற்றிய பெரியாரின் பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிட இயலாத நிலைதான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வேறு எதையும் எடுத்துப் பெரியாரைத் தாழ்த்த முடியாது என்ற நிலையில், தற்போது பெண்களை வரையற்ற துய்த்தலுக்குப் பெரியார் பரிந்துரைத்து இழிவுபடுத்தியுள்ளார் என்பதாகவும், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று தாழ்வுபடுத்தியுள்ளதாகவும் பொய்யுரைத்துத் தமிழரிடையே செல்வாக்குப் பெறமுடியும் என்று சிலர் நம்புகின்றனர்.
கடவுளர் புராணங்களில் நிகழ்வதாகப் பார்ப்பனர் கற்பித்துக் கூறியிருக்கும் கட்டுக் கதைகளில் உள்ளவற்றையே பெரியார் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை மறைத்துவிடுகின்றனர். தாய், மகள், உடன்பிறந்தார் என்னும் வேறுபாடின்றி இன்பம் பெறுவதாகக் காட்டப்படும் புராணங்களையே பெரியார் எடுத்துக்காட்டியுள்ளார். முன் பின் கூறியவற்றை மறைத்து, அவை பெரியார் கருத்துக்கள் போன்று காட்டப்படுகின்றன. மகளிர் உறவுகளுக்குள் உறவுகொள்ளலாம் எனப் பெரியார் மொழிந்ததாகச் சீமான் போன்றோர் பிதற்றி வருகின்றனர்.
உலகெங்குமுள்ள பெண்ணியலாளர்களே வியக்கும் வண்ணம் மகளிர் மாண்புகளையும் உரிமைகளையும் பெருமைகளையும் சிறப்புக்களையும் விளக்கிப் ‘பெண் விடுதலை’ என்ற பெயரில் நூல் வகுத்த பெரியார், பெண்களைச் சிறுமைப்படுத்துவதாகப் பேசவும் துணிந்துள்ளனர்.
தமிழ் காட்டுமிராண்டி நிலையில் இருந்தபோது பேசிய மொழியாகவே தொடரக்கூடாது, நீடிக்கக்கூடாது என்னும் பொருளில் பெரியார் பேசியதைப் பிரித்தெடுத்துக்கொண்டு, தமிழைத் தாழ்த்திவிட்டதாகச் சீமான் பேசி வருகிறார். சீமானுக்குத் துணையாக அண்ணாமலை நிற்கிறார். இப்போது நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் நிலை தவறிப் பேசும் அளவிற்கு இது சென்றுவிட்டது.
எழுத்திலும் பேச்சிலும் தனக்குப் பிடிக்காதவற்றை வன்மையுடன் தாக்கிப் பேசுவதும், பிடித்ததை வற்புறுத்தி வலியுறுத்துவதும் பெரியார் இயல்புதான். ஆனால், பெரியார் கூற்றுகளின் முழுமையைப் புரிந்துகொள்ளாமல், எந்தச் சூழலில், எதற்காகச் சொல்லப்பட்டது என்பவற்றை மறைத்து, பெரியாரின் கருத்துக்களுக்கு முரணாக எடுத்துரைப்பது நேர்மையான போக்கல்ல. மேலும், தான் கூறியவை அனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப் பார்த்து உண்மை இருப்பதாக நம்பினால் மட்டுமே அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டுமெனப் பெரியார் தனது உரைகளிலும் எழுத்துக்களிலும் தெளிவாகச் சொல்வதையும் இவர்கள் மறந்துவிடுகின்றனர்.
பெண் இழிவு, தமிழ்த் தாழ்வு ஆகியன பற்றிப் பெரியார் கூறியதாகக் கற்பித்துச் சொல்லப்படும் கூற்றுகளுக்கான சான்றுகளைக் கேட்டால் மழுப்பலாகவே விளக்கங்கள் வெளிவருகின்றன. பெரியார் படைப்புகள் முழுமையாகக் கிடைக்காமல் மறைக்கப்பட்டுவிட்டன
பெரியார் படைப்புகளை இன்னும் நாட்டுடைமை ஆக்கவில்லை என்றெல்லாம் திக்குத் திருப்பும் முயற்சிகள் நடக்கின்றன. தி.மு.க. பிரிந்தபோது அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் குறித்துப் பெரியார் எழுதிய மற்றும் பேசிய இழிவுரைகள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதால்தான் பெரியார் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று சில தமிழ்த் தேசியர்களும் சீமான் போன்றோரும் குறை கூறிவருகின்றனர். இதனால்தான், பெரியார் கூறியதாகச் சொல்லப்படும் கருத்துகளுக்கான சான்றுகளைத் தர முடியவில்லை என்று சீமான் கூறுகிறார். இதற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றைச் சீமானுக்குத் தரப்போவதாகவும் அண்ணாமலை அறிவிக்கிறார்.
பெண் இழிவு, தமிழ்த் தாழ்வு குறித்துப் பெரியார் கூறியதாக எடுத்தாளப்படும் கருத்துக்களைப் பெற முடிந்தபோது, அவற்றுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. முழு பகுதிகளும் கிடைப்பதால்தானே, அதிலிருந்து வேண்டியவற்றை எடுக்க முடியும். எங்கிருந்து இந்தப் பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்தார்களோ அங்கேயே இவற்றுக்கான முழுமையான விளக்கங்களும் விரிவுரைகளும் இருக்கின்றன என்பதை மறந்துவிடுகின்றனர். இதைப்போன்று அண்ணாமலையிடம் சான்றுகள் இருக்கின்றன என்றால், அவை யாவும் பொதுவெளியில் இருப்பதாகத்தானே ஆகிறது. உண்மை நிலை இப்படியிருக்க, சீமான் ஓடி ஒளிவதற்கான பின்புலம் யாது?
வேறொன்றுமில்லை. சீமானுடைய புனைவுகள் எல்லாம் கற்பனைகள் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான், தப்பிக்கக் காரணிகளைத் தேடுகிறார்.
உலக வரலாற்றில் பெரியார் தொடங்கிவைத்த முறையொன்று தனித்துவமாக இன்றும் நீடித்து வருகிறது எனலாம். எழுத்துக்களுக்கு மேலாக, பொதுக்கூட்டங்களில் பெரியார் பேசியனவெல்லாம் பெரும்பாலும் ‘குடிஅரசு,’ ‘விடுதலை’ போன்ற அவர்களது இதழ்களில் முழுமையாகவோ, வேண்டியளவோ வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நடைமுறையினைத் தி.மு.க.வும் தொடர்ந்தது. அண்ணாவின் சொற்பொழிவுகள் ‘நம் நாடு’ நாளிதழில் முழுமையாக வெளிவந்தன. கலைஞரின் எழுத்துக்களோடு, சொற்பொழிவுகளும் ‘முரசொலி‘யில் பதிவு பெற்றன.
சோவியத் ஒன்றியத்திலும் இந்த நடைமுறை பின்னர் ஏற்பட்டது. குருச்சேவ், பிரெஷ்னேவ் போன்றோரது சொற்பொழிவுகளை ‘பிராவ்தா‘வும் ‘இசுவெசுதியா‘வும் வெளியிட்டன. கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோ எழுத்துக்களுடன், பேச்சுக்களெல்லாம் ‘கிரன்மா‘வில் அச்சுருப்பெற்றன.
இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, தி.க. மற்றும் தி.மு.க. ஆகியன இந்த நடைமுறையை, கொள்கை மற்றும் அரசியல் பரப்புரையாக இன்று வரை தொடர்ந்து வருகின்றன. இந்திய ஒன்றியத்தில், பிற மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளாக இருப்பவையும் இதனைப் பரவலாகப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
எனவே. பெரியாரது எழுத்துக்களோடு உரைகளும் பெரிதும் மறைந்துவிடவில்லை என்று கூறிவிட முடியும். இவையெல்லாம் கல்வெட்டுகள் போல, ‘குடிஅரசு,’ ‘விடுதலை’ போன்ற நாளேடுகளில் எளிதில் கிடைக்குமாறு காணக் கிடைக்கின்றன. இவற்றில் தாக்குதல்களும் இருக்கும், தாங்கிப் பிடித்தலும் இருக்கும். ஆனால், எதையும் பெரியார் இயக்கத்தினர் மறைத்து வைக்கவில்லை. இவற்றில் பெரும்பாலானவை நூல்களாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அரசு ஆவணங்கள் போன்றோ, மறைவுக் குறிப்புகள் போன்றோ, இவற்றையெல்லாம் அலுவலக அறைகளுக்குள் அல்லது பெட்டிகளுக்குள் அவர்கள் பூட்டி வைத்திருக்கவில்லை.
பெரியாரின் படைப்புகள் சிலவற்றை மறைத்துவிட்டார்கள் என்ற கூற்றில் எத்தகைய உண்மையும் இல்லை. கொள்கை மற்றும் கருத்துக்களில் மக்கள் தெளிவு பெறுவதற்காக வேண்டியவற்றையெல்லாம், பகுத்தறிவுப் பரப்பலுக்கும், சீர்திருத்தச் சிறப்புகளுக்கும் சமூக மாறுதல்களுக்கும் பயனாகும் பொருட்டு. திராவிட இயக்கத்தினர் வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.
தி.மு.க. பிரிந்தபோது அண்ணா, கலைஞர் பற்றிப் பெரியார் எழுதியவற்றையும் பேசியவற்றையும் மறைத்துவிட எவரும் நினைப்பதாகத் தெரியவில்லை. பெரியார் பற்றாளர்களைப் பொறுத்துத் தி.மு.க. எதிர்ப்பு நிலை இப்போது இல்லை. அதனால், அன்றைய கருத்துக்கள் பல இன்று பொருத்தமற்றதாக இருப்பதால் அவற்றை வெளியிடவில்லை. ஆனால், இவை குறித்த பதிவுகளை எவரும் மறைத்துவிடவில்லை; அழித்துவிடவுமில்லை.
இவற்றை சீமானோ, அண்ணாமலையோ அல்லது வேறு ஒருவரோ வேண்டியவாறு வெளியிட எத்தகைய தடையும் இருக்கவில்லை.
இவை யாவும் ‘விடுதலை’ அலுவலகத்திலும் அண்ணா அறிவாலய நூலகத்திலும் காக்கப்பட்டு வருகின்றன. இவையன்றி, பெரியார் பற்றாளர்கள், திராவிட இயக்கத்தினர் என நூற்றுக்கணக்கானோர் பெரியார் எழுத்து மற்றும் பேச்சு ஆவணங்களாக அமையும் ‘குடிஅரசு,’ ‘விடுதலை’ போன்ற இதழ்களைப் பொன்னைக் காப்பது போலக் காத்து வருகின்றனர் என்பதையும் நோக்க வேண்டும்.
இவ்வாறு பொதுவெளியில் வேண்டியவாறு கிடைக்கின்ற படைப்புகளை உள்நோக்குடன் மறைத்துவிட்டதாகப் பெரியார் மறுப்பாளர்கள் புலம்பித் திரிகின்றனர்.
அண்ணா, கலைஞர் போன்றோரைத் தாக்கி எழுதப்பட்டவை வெளியில் கிடைத்திடக்கூடாது என்பதற்காகத்தான் பெரியார் படைப்புகள் நாட்டுடைமையாகவில்லை என்பதிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
அண்ணா படைப்புகள் பல்லாண்டுகளுக்கு முன்னரே நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன. உரிமைத் தொகையில்லாமல், கலைஞர் படைப்புகளும் தற்போது காப்புரிமை நீக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும், பெரியார் குறித்து மறுப்பாகப் பேசியவையும் எழுதியவையும் சேர்ந்துதான் பொதுவெளிக்கு வந்துள்ளன. காந்தியார், நேரு, காமராசர், ராஜாஜி, பொதுவுடைமையினர் போன்றோரைப் பற்றிய தாக்குதல்களும் கருத்துக்களும் இவற்றில் அடங்கும். இவற்றைத் தி.மு.க.வினர் இப்போதைக்கு நூலாக்காமல் இருப்பதால், வெளியிடத் தடையிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
பாரதியில் தொடங்கி, பாரதிதாசன் உள்ளிட்டு, அண்ணாவிலிருந்து கலைஞர் வரை பலரது படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டபோது, பெரியாரது எழுத்துக்கள் மட்டும் ஏன் காப்புரிமை கொண்டதாக இருக்கவேண்டும் என்ற வினா இந்த இடத்தில் எழுவது இயல்புதான்.
இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவரது படைப்புகளுக்கான காப்புரிமை அவரது வாழ்நாள் முழுமைக்கும் இருக்கும். மேலும், அவர் மறைந்த பின்னரும் அடுத்த ஆண்டிலிருந்து அறுபது ஆண்டுகள் வரை தொடர்ந்து நீடித்திருக்கும். இந்த வகையில் 24-12-1973 அன்று மறைந்த பெரியாரது படைப்புகளின் காப்புரிமை 2033ஆம் ஆண்டின் இறுதி வரை நீடித்திருக்கும். தற்போது சட்டப்படியான காப்புரிமை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் இருக்கிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் பி.ஓ.எல். பட்டப் படிப்பு பயின்றபோது (1965-1968), எனக்கு இளவலாக இளம் அறிவியல் படித்தவர் வாழப்பாடி வி. சுகுமார் அவர்கள். பெரியார் இயக்கம் குறித்து என்னுடைய தொடக்க அறிதல்களுக்கு அடித்தளமிட்டவர் தோழர் சுகுமார்தான். பின்னர் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளராகவும் அவர் பணியாற்றினார். அவரது மூத்த மகன் சு. பகுத்தறிவு-சுமதி ஆகியோர் மணவிழா 24-01-1999 அன்று ஆசிரியர் க. வீரமணி அவர்களது தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. மணவிழா என்றாலும் திராவிடர் கழக மாநாடு போலத்தான் அது இருந்தது. அதில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நான் பேசும்போது, மார்க்சு, எங்கல்சு, லெனின் ஆகியோரின் படைப்புகள், தொகுப்பு நூல்களாகக் கால வரிசையில் வந்திருப்பது போன்று, பெரியார் படைப்புகள் அனைத்தையும் கால வரிசையில் வெளியிடவேண்டும் என எனது விருப்பத்தினை வேண்டுகோளாகத் தெரிவித்தேன். அப்போது சோவியத் நாட்டில் இருந்து வெளிவரும் பல நூல்களில், ‘மேற்கோள் குறிப்புடன் பயன்படுத்துவது வரவேற்கப்படுகிறது’ (Acknowledgement of reproduction will be appreciated) என்னும் பொருளில் சொற்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதனைச் சுட்டிக்காட்டி, அறிவுப் பகிர்தலுக்குக் காப்புரிமை ஏதும் இல்லை, பெரியார் படைப்புகளுக்கும் காப்புரிமை தனியே இல்லையென நினைக்கிறேன் என்றும் கூறினேன்.
இதனை மறுக்காத ஆசிரியர் அவர்கள், பெரியார் படைப்புகள் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.
வாக்கு வங்கிக் களத்தில் இயங்காமல், கருத்துக் களத்தில் மட்டும் இயங்கிய பெரியாரது படைப்புகளைப் பிறர் பதிப்பிக்கும்போது, அடிப்படைக் கருத்துகளும் நடுவப் பொருளும் மாறுபடும் வகையில் வெட்டியும் ஒட்டியும் வெளியிடும் வாய்ப்புகள் இருந்தன. இதனால்தான், பெரியாரது படைப்புகளை நாட்டுடைமையாக்குவதற்கு ஆர்வம் காட்டப்படவில்லை. இருப்பினும், ஆர்வம் கொண்டோர் வெளியிடத் தடையும் செய்யப்படவில்லை என்று கூற முடியும்.
பெரியார் காலத்திலேயே அவரது ஒப்புதல் பெற்று, ஆனைமுத்து அய்யா அவர்கள் ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற பெயரில் மூன்று தொகுதிகளை 2200 பக்கங்களாகப் பொருள் அடிப்படையில் தொகுத்து 1974இல் வெளியிட்டார். இவை மீண்டும் விரிவான குறிப்புகளுடனும் விவரங்களுடனும் திருத்தப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பெற்று 15-12-2009இல் 20 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. திராவிடர் கழகத்தின் சார்பில் ‘பெரியார் களஞ்சியம்’ தொகுப்புகள் பல்வேறு பொருள்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை 42 தொகுதிகள் வந்துள்ளன.
‘குடிஅரசு 1925 பெரியாரின் எழுத்தும் பேச்சும்’ எனத் தலைப்பிட்டு, கொளத்தூர் தா.செ. மணி மற்றும் விடுதலை ராசேந்திரன் ஆகியோரது முயற்சியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 2010இல் 27 தொகுதிகள் வெளியிடப்பட்டன.
பேராசிரியர் நன்னன் அவர்கள் ‘பெரியார் கணினி’ என்னும் தலைப்பில் 1136 பக்கங்கள் கொண்ட தொகுப்பினை 2016இல் வெளியிட்டுள்ளார். பெரியார் பற்றாளர் பசு. கவுதமன் அவர்களது தொகுப்பில் ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’ என்னும் தலைப்பில் நியூ செஞ்சுரி நூல் நிறுவன வெளியீடாக 5 தொகுதிகள் 2017இல் முதலாம் பதிப்பாக வெளிவந்தன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியரும் தந்தை பெரியார் இருக்கையின் இயக்குநருமான பேரா. இரா. சுப்பிரமணி அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில் வந்த இதழியல் தொடர்பான பெரியாரின் கட்டுரைகளைத் தொகுத்து 800 பக்கங்களில் விடியல் பதிப்பகத்தின் வழியாக 2022இல் பதிப்பித்துள்ளார். மேலும், இவரது தொகுப்பில் ‘இதழியல் களத்தில் பெரியார்’ என்னும் தலைப்பில் 1936 முதல் 1973 வரை ‘விடுதலை‘யில் வெளியான இதழ்கள் தொடர்பான பெரியாரின் எழுத்துக்கள் 1500 பக்கங்களில் கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் வெளியிட அணியமாகியுள்ளன. ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழில் வெளியான பெரியாரின் எழுத்துக்கள் எஸ்.வி. ராசதுரை மற்றும் வ. கீதா ஆகியோரால் தொகுக்கப்பட்டு நூலாக அச்சிடப்பட்டுள்ளன.
இவையல்லாமல், ‘பெரியார் அன்றும் இன்றும்’ என 2017இல் கோவை விடியல் பதிப்பகம் தொகுப்பு நூல் ஒன்றினைத் தந்துள்ளது. இவையின்றி வேறு சில வெளியீட்டு முயற்சிகளும் இருக்கலாம். பெரியார் காலத்திலிருந்தே. அவரது உரை அல்லது எழுத்தினைச் சிறு வெளியீடுகளாக ஆங்காங்கே இயக்கத்தினர் வெளியிடும் வழக்கம் பரவலாக இருந்தது. ஒருபுறம் காப்புரிமை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பெரியார் எழுத்துக்களும் பேச்சுக்களும் வெவ்வேறு வழிகளில் நூல் வடிவம் பெற்றுக்கொண்டுதான் இருந்தன – இருக்கின்றன. இவ்வாறு பதிப்பித்தோர் பலரும் காப்புரிமை கொண்டது எனக் குறித்து வந்திருப்பதையும் இங்கு வியப்புடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. காப்புரிமை ஒருபுறம் இருந்தாலும், வெளியிடும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை என்பதுதான் இதன் பொருளாகும்.
பெரியாரது படைப்புகளின் காப்புரிமை குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் வீரமணி அவர்களால் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. நீதியர் கே. சந்துரு அவர்கள் 27-07-2009 அன்று அளித்த தீர்ப்பில், பெரியாருடைய எழுத்துக்கள் மக்களுக்கு உரியவை என்ற பொருளில் தீர்ப்பினை வழங்கியுள்ளார். இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்தத் தீர்வு அல்லது தீர்ப்பு சட்டத்துக்கு முற்றிலும் முரணாகத்தான் அமைந்திருந்தது. பின்னர், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டிலும் பெரியார் படைப்புகளுக்கான காப்புரிமை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனை நீதிமன்றத்தின் கருத்து என்று கருதுவதைவிட, சமூகத்தின் கருத்து அல்லது மக்களின் எதிர்பார்ப்பு அல்லது பற்றாளர்களின் உரிமை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
காந்தியார், அம்பேத்கர், நேரு, தாகூர் போன்றோர் படைப்புகள்கூட இத்தகைய பெருமையையும் சிறப்பையும் பெறவில்லை என்பதை இங்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை. உண்மையில் தாகூரின் படைப்புகளுக்கான காப்புரிமையை நீடிக்கவேண்டும் என்பதால்தான், மறைந்த பின் 50 ஆண்டுகள் என்ற வரையறை 60 ஆண்டுகள் என மாற்றியமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் காப்புரிமைச் சட்டம் 50 ஆண்டுகளைத்தான் வரையறையாகக் கொண்டிருக்கிறது என்பதையும் இங்குச் சுட்டிக்காட்டலாம்.
ஆனால், பெரியார் உயிரிழக்கும் முன்னரும் பின்னரும் அவரது படைப்புகள் யாவும் மக்களுக்கு உரியனவாகவே இருந்தன – இருக்கின்றன. இந்த நிலைமைகளில், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசும் சீமான், அண்ணாமலை போன்றோர், பெரியார் படைப்புகள் மறைக்கப்பட்டதால்தான் தங்களால் உரிய சான்றுகளைத் தர முடியவில்லை என்று கூறுவது உண்மை அல்ல என்பது உறுதியாகிறது.
அவர்கள் சுட்டிக்காட்டும் பெண் இழிவு, தமிழ்த் தாழ்வு ஆகியன குறித்துப் பெரியார் பேசியதாகக் கூறுவதை மறுக்க வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை. தன்னுடைய வாழ்நாளில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் எழுதியும் பேசியும் வந்த பெரியார், பெண்மை குறித்தும் தமிழ் மொழி குறித்தும் எழுதியவை பலவாகப் பரந்து கிடக்கின்றன. பெரியார் படைப்புகளின் தொகுப்புகளில் பெண், மொழி ஆகிய தலைப்புகளில் தனித்தனியான தொகுதிகளே பல பக்கங்களாக வந்திருக்கின்றன.
பெண் மற்றும் தமிழ் மொழி குறித்துப் பெரியார் முன்னரும் பின்னரும் என்னென்ன பேசியிருக்கிறார் என்ற விவரங்களை அந்தப் பதிவுகளில் இருந்தே தெரிந்துகொள்ள இயலும்.
பெரியாரை வெறுப்போர் எடுத்துக்காட்டும் பெண்மை மற்றும் தமிழ் மொழி குறித்த அந்தக் கூற்றுகளுக்கு முன்னரும் பின்னரும் பெரியார் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பார்த்தாலே உண்மைகள் தெரிந்துவிடும்.
“உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காகத் தாய், அக்காள், தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னதாகக் கூறிய சீமான், இன்று வரை சான்றுகள் எதையும் தரவில்லை. இது தொடர்பாகச் சிலர் தந்த சான்றுகளான, ‘விடுதலை’ 11-05-1953 நாளிட்ட இதழ், வேறொருவர் பெரியார் கூறியதாக எழுதிய மேற்கோள் ஆகியன உண்மையானவையாக இருக்கவில்லை.
22-06-1971இல் மேட்டுப்பாளையம் நகரில், ‘பகுத்தறிவாளர் மன்ற‘த்தினைத் தொடக்கி வைத்துப் பெரியார் ஆற்றிய உரை, 1971ஆம் ஆண்டிலேயே ‘சிந்தனையும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
‘‘நான் சொல்வதை நம்பாதீர்கள்..உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக்கொள்ள வேண்டும். மற்றும் எந்த காரியம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்ய வேண்டும்’’ என்று தொடங்கிய பெரியார், புராணங்களில் உள்ள கடவுளர்களின் உடலுறவு அவலங்களை விவரித்திருக்கிறார். இது ‘விடுதலை’ ஏட்டிலும் வந்திருக்கும். இது குறித்த தெளிவான பதிவினை முகநூலில் மேட்டுப்பாளையம் தோழர் வீ. வெள்ளிங்கிரி அவர்கள் தந்திருக்கிறார்.
வேறு பல இடங்களிலும் இந்தப் புராண அவலங்களைப் பெரியார் பேசியிருக்கலாம். கடவுளர் கதைகளை மறைத்துவிட்டு, பெண்களைப் பெரியார் இழிவாகப் பேசினார் என்று சீமான் உண்மைக்கு மாறாகப் பழித்துரைத்துவருகிறார்.
தமிழ் மொழி குறித்துப் பெரியாருடைய கருத்துகள் எப்போதுமே மொழிக்கு எதிரானதாக, தமிழர்களுக்கு மாறானதாக இருந்ததில்லை. அறிவுறுத்தலாகக் கடுஞ்சொற்கள் வந்திருக்கலாம். ஆக்கத்தின் பாற்பட்டதாகவே அவை அமைந்திருக்கின்றன. அவருடைய நிலைப்பாடு அடுத்தடுத்த காலங்களில் மேலும் செழுமை பெற்றிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
பெரியார் எழுதியவை, பேசியவை என அனைத்தும் பொதுவெளியில் எளிதில் பெறத்தக்கனவாகவே இருக்கின்றன. எவரும் பூட்டி மறைக்கவில்லை. பெரியாரின் கருத்துக்களை முன்வைத்து, முரண்படவும் மறுத்துப் பேசவும் மாற்றுக் கூறவும் கலந்துரையாடவும் உள்ள உரிமைகளை எவரும் புறக்கணிக்கவில்லை. நேரிடையாகக் கருத்துப் போர் நடத்தலாம். திரித்துப் பேசித் திக்குத் திருப்ப முயற்சிக்க வேண்டியதில்லை. இன்றைய அரசியல், சமூகப் பின்புலத்தில் பெரியாரின் வேண்டல் நீடிக்கிறது என்பதையே எதிராளர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’
(ஏப்ரல், 2025)