இதில் எதை மனிதகுலம் பின்பற்ற முடியும்?
(பகுத்தறிவாளர் கேள்விகள்)
1. காட்டிலிருந்து சீதை கவர்ந்து செல்லப்பட்டு இராவணனின் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டு, மீட்கப்பட்டு இராமனிடம் வந்து சேர்ந்த பிறகு, ஓர் உலர் சலவையாளரின் உரையாடலை வைத்து, ‘‘ ‘அக்னி பரீட்சை’ – (தீயில் குதித்து) உன் கற்பை நிரூபித்துப் பிறகு என்னிடம் வா’’ என்று தீக்குளிக்கச் சொன்னார் இராமன் என்ற கதை இன்றைய நடைமுறைக்கு ஏற்குமா?
சீதையை வழிபடும் இன்றைய பெண்கள் பின்பற்ற முடியுமா?
இராமன் செயலை நியாயப்படுத்த முடியுமா?
2. ‘கடவுள் அவதாரமான’ இராமனுக்கு சீதையின் கற்பு கெட்டு விட்டதா – (இல்லையா) என்று அறியும் சக்தி இல்லாமலா போகும்? முன்பே ‘கற்பிழந்து, இந்திரனின் இச்சையால், கவுதம முனிவரால் (இதிகாசப்படி) ‘சபிக்கப்பட்டப் பெண் (அகலிகை) இராமனின் கால்பட்டவுடன் எழுந்து வணங்கினார் என்கிறபோது, சீதை கற்புபற்றி தீயில் தான் குளித்து நிரூபிக்க வேண்டும் என்பது என்ற கொடுஞ்செயல் எதற்கு?
3. கடவுள் அவதாரமான வீர தீர பராக்கிரம இராமன் (!) வாலியுடன் யுத்தம் செய்த போது, வாலி – சுக்ரீவன் சண்டையில் மரத்திற்குப் பின்னால் ஒளிந்து நின்று, அம்பு எய்திக் கொன்றதை– எந்த ‘சுத்த வீரனாவது’ ஏற்பானா? ஏற்க முடியுமா? (அது ஒழுக்கமா?)
(இராஜாஜி எழுதிய இராமாயணப் புத்தகத்தில் இதற்கு விளக்கம் தர இயலாமல் ‘வாசகர்கள் மன்னிக்க’ என்று எழுதும் நிலை ஏற்பட்டது என்பதை மறைக்கலாமா?)
4. சீதையை – அவரது ‘கற்பு’ மீது மீண்டும் சந்தேகமுற்று பிறக்கப் போகும் குழந்தை பற்றிய அய்யத்தை முன்னிறுத்தி காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வந்த ‘ஒழுக்கம்’ பின்பற்றத்தக்கதா? சட்டமோ, நியாயமோ இதனை ஏற்குமா?
5. தனது அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்த வீபிஷணனை ஆழ்வார் என்று ஆசீர்வதித்த இராமனின் சகோதர ‘மித்ரதுரோகத்தை’ போற்றுவதனாலேயே, நாட்டில் துரோகம் வளர வாய்ப்பேற்பட்டது என்று சிந்தனையாளர் வ.ரா. என்ற வ.இராமசாமி (அய்யங்கார்) தனது ‘கோதைத் தீவு’ நூலில் எழுதியுள்ளார். அதைமறுக்க முடியுமா?
சிந்திப்பீர்! சிந்திப்பீர்!! சிந்திப்பீர்களாக!!!