வக்பு சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்

viduthalai
2 Min Read

கருப்பு பட்டை அணிந்து உறுப்பினர்கள் வருகை

சென்னை, ஏப்.4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு பட்டை அணிந்து, ஒன்றிய அரசின் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் நேற்று (3.4.2025) முழக்கமிட்டார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பேசியதற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசியதாவது:-

மு.க. ஸ்டாலின் முழக்கம்

வக்பு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் பெரும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கருத்தில் கொள்ளாமல், இந்தியா முழுவதும் இந்த மசோதாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கருதாமல், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசு தனது கணைகளை தொடுக்கிறது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அரசமைப்பு சட் டத்தை நன்றாக அறிந்தவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். இந்த அவையும் எள்முனையளவும் ஏற்றுக்கொள்ளாது. எனவே வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி நான் கூறும் வரிகளை எம். எல்.ஏ.க்கள் திரும்பக் கூறுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்பேசினார்.

முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திரும்பப் பெறு, திரும்பப்பெறு, வக்புசட்டத்திருத்த முன்வடிவை திரும்பப்பெறு” என்று 3 முறை முழக்க மிட்டார். அதை தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி களின் உறுப்பினர்கள் மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வழி மொழிந்து கைகளை உயர்த் தியபடி திரும்ப கூறி முழக்கமிட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் இந்த முழக்கத் தில் கலந்துகொள்ளாமல் அதை கவனித்தபடி இருந்தனர்.

வக்பு சட்டத்திருத்த மசோதாவை கண்டிக்கும் வகையில் சட்டப் பேரவைக்கு நேற்று (3.4.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். சட்டப் பேரவைக்கு ஆளும் கட்சியினரே கருப்புப்பட்டை அணிந்து வந்ததும், முதலமைச்சர் முழக்கமிட்டு, அதை மற்ற எம்.எல்.ஏ.க்கள் வழிமொழிந்து பதில் முழக்கமிட்ட சம்பவங்கள், தமிழ்நாடு சட்டப் பேரவையில் புதுமையாக பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *