தன் தந்தையின் சொந்த ஊருக்கு (இந்தியாவுக்கு) வர விரும்புவதாக கூறிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து பார்த்த போது இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு சுவாரசியமான பதில் அளித்தார்.
விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2ஆவது அமெரிக்க வீரர் என்ற சாதனையை 59 வயதான சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். வில்மோருடன் விண்வெளியில் 286 நாட்களை அவர் கழித்தார். சுனிதா வில்லியம்ஸ் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். இதன் மூலம் விண்வெளியில் அதிக நேரம் நடந்த முதல் பெண் என்ற சாதனை படைத்து உள்ளார். ஒட்டு மொத்தமாக அதிக நேரம் விண்வெளியில் நடந்தவர்கள் பட்டியலில் 4ஆம் இடம் பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலை மேலே பயணித்தபோது வில் மோர் சில அற்புதமான ஒளிப்படங்களை எடுத்தார். இமயமலை இந்தியாவுக்குள் வழிந்தோடுவதுபோல் ஒரு வியத்தகு காட்சியை தந்தது.
இந்தியாவை விண்வெளியில் இருந்து பார்த்தபோது மும்பையில் இருந்து குஜராத் வரை இரவில் ஒளிர்ந்த மின் விளக்குகள் இரவையும் பகலாக மாற்றியது போன்று பிரமாண்டமாக காட்சி அளித்தன. ஒரு நாள் நான் எனது தந்தையின் சொந்த ஊருக்கு (குஜராத் மாநிலம்) வர விரும்புகிறேன். அங்குள்ள மக்களுடன் விண்வெளி ஆய்வு பற்றிய என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்.
இந்தியா ஒரு சிறந்த நாடு. விண்வெளிக்கு செல்ல இருக்கும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை நினைத்து பெருமிதம்கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சுனிதா வில்லியம்சின் தந்தை தீபக் பாண்ட்யா குஜராத்தை சேர்ந்தவர், 1958ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். டாக்டரான அவர் ஓகியோவின் கிளீவ்லேண்டில் பயிற்சி பெற்றார். அங்கு சுலோவேனியாவை சேர்ந்த உர்சுலின் போனியை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் சுனிதா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.