உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த பிரதம்யாதவ் என்பவர் தன் மனைவியுடன் தனிமையில் இருந்தபோது, அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுத்த வீடியோ காட்சிகளை, முகநூல் இணையதளத்தில் பதிவிட்டதுடன், தன் நெருங்கிய உறவினர்களுக்கும் அனுப்பினார்.
அதை அறிந்த அந்தப் பெண், தன் கணவர்மீது வழக்கு தொடர்ந்தார். தகவல் தொழில்நுட்ப சட்டம் -67இன் கீழ் பிரதம்யாதவ் மீது வழக்கு தொடரப்பட்டது.
தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிரதம்யாதவ் வழக்கு தொடர்ந்தார். அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வினோத் பிறப்பித்த உத்தரவு:
ஒரு பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக, அந்த பெண்ணின் உரிமைதாரராக கணவர் ஆகி விட முடியாது. அந்த பெண்ணின் தனிப்பட்ட உரிமையை எந்த காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.
மனைவியுடன் வைத்திருந்த நெருக்கமான உறவைப் படம் பிடித்து, பிறருக்குக் காட்டியபோதே திருமண சட்டத்தின் முக்கிய அம்சமான, திருமணத்தின் தனித்துவத்தை அந்த ஆண் காப்பாற்றவில்லை என்பது தெளிவாகிறது.
மனைவி என்பவர், கணவனின் விருப்பப்படி செயல்படக் கூடிய நபர் இல்லை. அந்தப் பெண்ணுக்கு என தனிப்பட்ட உரிமைகள், ஆசைகள் இருக்கும். அவை மதிக்கப்பட வேண்டும் எனவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்கு, தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்
அந்த வழக்கின் விசாரணை நடந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘‘கணவரும். மனைவியும் எதிர்காலத்தில் சமாதானமாக செல்ல வாய்ப்பு உள்ளது. இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டவர்கள்.
கணவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு – 67இன் கீழ் வழக்கு தொடர முடியாது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு வழக்குரைஞர், ‘சட்டப்படி திருமணம் செய்தார் என்பதற்காக அந்த பெண்ணின் தனி உரிமையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை இணையத்தில் பதிவிட்டது தவறு’ என வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து ஒரு பெண்ணை திருமணம் செய்ததாலேயே கணவர், அப்பெண்ணின் உரிமைதாரராக முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓர் அரிய தீர்ப்பு – வரவேற்கப்பட வேண்டிய சிறந்த தீர்ப்பாகும்.
அதுவும் தந்தை பெரியார் கண்ணோட்டத்தில், ஒருகுதி குதித்து, கரஒலி எழுப்பிப் பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு.
பெண்கள் மனித சக்தியின் சரி பகுதியாகும். இதைப்பற்றி தந்தை பெரியார் கூறுகிறார்.
‘பெண் அடிமை என்பது மனித சமூக இழிவு என்று நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய சமூகம் பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்துகொண்டே வருகின்றது’ (‘குடிஅரசு’ 24.1.1940) என்ற தந்தை பெரியார் தம் கூற்றினை எண்ணிப் பார்க்க வேண்டும்.
‘ஓர் ஆணுக்குச் சமையற்காரி ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்துக்குப் பிள்ளை விளைவிக்கும் பண்ணை – ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய – அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்’’ (‘குடிஅரசு’ 21.7.1946) என்று உண்மை நிலவரத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியவரும் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியாரே!
சம்பந்தப்பட்ட வழக்கில் கணவன் என்ற ஆணவம் பிடித்த ஆண் தன் மனைவியுடன் தனிமையில் இருந்த நிலையை இரகசியமாகப் படம் பிடித்து தம் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறான் என்றால் எத்தகைய அநாகரிகம்!
தன் மனைவி என்ற அன்பும், நேசமும், பாசமும் இருந்தால் இத்தகைய இழிவான செயலில் ஈடுபடுவானா?
‘பொட்டச்சி’ என்று ஒரு பெண்ணைப் பார்த்துச் சொல் லுவதில் உள்ள அலட்சியத்தை இதோடு இணைத்துப் பார்த்தால்தான் பெண்களின் மீதான அவல நிலை புரிய வரும்.
இந்த வழக்கில் கணவன் செய்திருந்த அதே செயலை அவன் மனைவி செய்திருந்தால், இந்தச் சமுதாயம் எப்படி எல்லாம் பேசும்! ஏன் பெண்களே எப்படி எல்லாம் வக்கிரமாகக் காறி உமிழுவார்கள்.
இந்த வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் ‘ஒரு பெண்ணை திருமணம் செய்ததாலேயே, கணவர் அப்பெண்ணின் உரிமைதாரராக முடியாது!’’ என்ற வரிகள் கண்களில் ஒத்திக் கொள்ளத்தக்க பொன்னெழுத்துகள் என்பதில் அய்யமில்லை.
துணிவாக தன் கணவன்மீது காவல்துறையிடம் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!