சென்னை, ஏப்.3- குரூப்-1 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடப்பாண்டுக்கான குரூப்-1, 1ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, 28 துணை ஆட்சியர்கள், 7 காவல்துறை துணை கண்காணிப்பாளர், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர்கள், 3 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள், 6 தொழிலாளர் உதவி ஆணையர்கள் என குரூப்-1 பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும், குரூப்-1ஏ பதவிகளில் வரும் 2 வனத்துறை உதவி பாதுகாவலர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 72 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். சமர்ப்பித்த விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கான முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில், ஜூன் மாதம் 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
முதல்நிலைத் தேர்வு மொத்தம் 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் கேட்கப்பட உள்ளது. இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் தேர்வர்கள், அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வை 750 மதிப்பெண்ணுக்கும், அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வை 100 மதிப்பெண்ணுக்கும் எதிர்கொள்வார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியாக அந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.