கவிஞர் கலி.பூங்குன்றன்
‘இஸ்ரோ’ என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாகும். இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமையாகும்.
இதில் 16,000 ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். 41 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) செலவில் செயல்பட்டு வருகிறது.
இதன் முதன்மையான நோக்கம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய் வதும், அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவது மாகும்.
* சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
* செவ்வாய்க் கோளிற்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது.
* குறைந்த செலவில் ராக்கெட்டுகளை ஏவும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும், அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.
இந்த அறிவியல் நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடிய எஸ்.சோம்நாத் என்பவர் மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பானினி சமஸ்கிருத மற்றும் வேதப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றியிருப்பது உரையல்ல – ஒரு குப்பைத் தொட்டி!
இதோ அவர் பேசுகிறார்:
“அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்களே. ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக அறிவியல் எனப் பலவற்றிலும் வேதங்களே முன்னோடி.
ஆரம்ப காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு எழுத்துரு இல்லாமல் பேச்சு வழக்கு மட்டுமே இருந்ததால், அதில் சொல்லப்பட்ட அறிவியல் அபகரிக்கப்பட்டு, மேற்குலகின் தத்துவங்கள் போல் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னாளில் தேவநாகரி எழுத்துரு வந்தபின்னர் சமஸ்கிருத அறிவு செழித்தோங்கியது.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளமானவை. வானியல், மருத்துவம், அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் வானூர்தி அறிவியல் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. இதற்கு சூர்ய சித்தாந்தமே உதாரணம். என் கல்விப் பருவத்தில்தான் சூரிய குடும்பம், கால அளவு மற்றும் பூமியின் அளவு மற்றும் சுற்றளவு பற்றிப் பேசும் சமஸ்கிருத புத்தகத்தால் ஈர்க்கப்பட்டே அது தொடர்பாகப் படித்தேன்” என்று அவர் கூறியுள்ளார். (இவர் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டதன் பின்னணி புரிகிறதா?)
‘இஸ்ரோ’ என்ற உயர்மட்ட விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடியவர் இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார் என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது?
‘பித்தாபிறை சூடிப் பெருமானே!’ என்பது சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட தேவாரப் பாடலாகும்.
சந்திரனை சிவபெருமான் தலையில் சூடியிருக் கிறானாம்.
இதனை அறிவியல் ஏற்றுக் கொள்கிறதா? ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் ‘ஆமாம் சாமி’ என்று கூறப் போகிறார்களா?
நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவு – விஞ்ஞானத்துக்கும் சற்றாவது பொருந்துகிறதா? “நம் நாட்டுப் படிப்பு என்பது வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசன்ஸ்” என்று தந்தை பெரியார் கூறியது – இதைப்போல ஆசாமிகளை மனதில் வைத்துதான்.
ராகு, கேது என்ற பாம்பு சந்திரனை விழுங்குகிறதாம்!
இந்த சந்திரன் குரு பத்தினியைக் கற்பழித்தானாம்! குருவின் சாபத்தினால் தான் வளர்பிறை, தேய்பிறை என்பதும் புராணக் குப்பை மேட்டுக் கழிசடைத்தனத்தின் பிரசவம் அல்லாமல் வேறு என்னவாம்?
இஸ்ரோ தலைவராக இருக்கக்கூடியவர் இன்றைக்குக் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனைகள் எல்லாம் வேத, புராண குப்பை மேடுகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக வெட்கமின்றிக் கூறுகிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) சரத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் எத்தகையை கடமையை வலியுறுத்துகிறது?
“அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு உணர்வை வளர்ப்பது” என்று கூறுகிறது.
ஒவ்வொரு குடிமகனின் கடமை ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரோ என்ற உயர்மட்ட விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் தலைவராக இருக்கக்கூடிய ஒருவரின் மூளை இப்படிப்பட்ட வேத, புராண சகதிகளால் நிரப்பப்பட்டு இருப்பதை எண்ணினால் நம்மை அறியாமலேயே நம் தலைகள் கீழே தொங்கத்தான் செய்யும்.மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் நோய்கள் தீரும் என்று அய்.அய்.டி. இயக்குநராக இருக்கக்கூடிய ……… சாம்பிராணிகள் பிதற்றவில்லையா?
‘பாரத ரத்னா’ விருது பெற்ற அறிவியல் ஆய்வாளர் சி.என்.ஆர்.ராவ் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டுக்கு (9.1.2016) அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
கேள்வி: நீங்கள் புராணங்களில் கூறப்படும் அறிவியல் காரணங்களை நம்புகிறீர்களா?
பதில்: இல்லை, நான் இதுபோன்ற கட்டுக் கதைகளை நம்புவதில்லை. நம் நாடு மதத்தின் பெயரால் பல்வேறு மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளது. இங்கு மூடநம்பிக்கையைக் கூட அறிவியலாக்கி விட்டனர். அதையே மதநம்பிக்கை என்ற பெயரில் மக்களும் நம்பி வருகின்றனர். அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகளை மக்கள் நம்ப வேண்டும். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் நவீன அறிவியலையும், புராணங்களுடன் தொடர்புபடுத்துபவர்களுக்கு எதிரானவன் நான். அறிவியல் மீது நம்பிக்கை வையுங்கள் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
மதம் மற்றும் அறிவியல் இரண்டும் வேறு வேறு ஆகும். மதத்தை அறிவியலில் புகுத்தக்கூடாது. நவீன உலகில் வளர்ச்சியின் வேகத்தை மதம் மந்தப்படுத்திவிடும். மக்களிடையே மதம் வேறு, அறிவியல் வேறு என்று பிரித்துப் பார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்
பாரத ரத்னா சி.என்.ஆர்.ராவ்.
2009இல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ரமணன் ராமகிருஷ்ணன், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், அறிவியல் பற்றிய கருத்தரங்கில் குறிப்பிட்ட கருத்து மிகவும் முக்கியமானது.
“அரசியல் சாசனத்திலேயே அறிவியல் மனோபாவத்தை வளர்ப்பதைப் பற்றிக் குறிப்பிடும் ஒரே நாடு இந்தியாதான்” என்று வெங்கட்ரமணன் குறிப்பிட்டார்.
ஆங்காங்கே நடப்பவைகளில் உள்ள ஒற்றுமைகளைப் பொதுமைப்படுத்தி, அதை நம்பும் மனதின் விளைவுதான் ஜோதிடம், ஒருவர் பிறந்த தேதிக்கும், கோள்களின் இயக்கத்திற்கும், அவர் வாழ்க்கையில் நடப்பவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனால் இது போன்ற நம்பிக்கை ஒருவரிடம் வேரூன்றி விட்டால் அவற்றை மாற்றுவது கடினம். அறிவியல் அறிவும், பகுத்தறிவும் சார்ந்து இயங்கும் ஒரு சமூகத்தைவிட, மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு கலாச்சாரம் மோசமான விளைவுகளையே சந்திக்கும்..
ஜோதிடம் பழங்காலத்திலேயே பிடிவாதமாக நிற்க, வானியல் துறை வேகமாக முன்னேறி கருந்துளை வெடி நட்சத்திரம் என்று ஆராயத் தொடங்கிவிட்டது” என்றார் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (‘தினமலர்’, 7.1.2016, பக். 13).
இத்தகைய விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே நேரத்தில் இஸ்ரோ என்ற விண்வெளி தொழில்நுட்பத்தின் தலைவராக இருக்கக்கூடிய எஸ்.சோம்நாத் போன்ற பழங்குப்பை களைக் கிளறும் கோழிகளும் இருப்பதுதான் அவமானகரமானது!
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு மேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுவது என்பது உண்மையல்ல; இந்திய செயற்கைக்கோள் மய்ய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பதிலடி!
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு மேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுபவை உண்மையல்ல. இதற்காகவே நாங்கள் நேரடியாக ஆய்வு செய்திருக்கிறோம் என்று இந்திய விண்வெளி செயற்கைக்கோள் மய்ய இயக்குநர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கூறியிருக்கிறார்.
24-11-2015 அன்று சன் தொலைக்காட்சியில் காலையில் 8 – 8:30 மணியளவில் ஒளிபரப்பாகும். “விருந்தினர் பக்கம்” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ‘சந்திரயான்’. ‘மங்கள்யான்’ நாயகன் – அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு அவரின் துறை சார்ந்தும், தாய்மொழியில் படிப்பதின் சிறப்பு என்பதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் ஒரு கேள்வி. “திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு மேலே செயற்கைக்கோள்கள் செல்லும் போது கொஞ்சம் தடுமாறுகிறது என்று சொல்வது உண்மையா?” என்பது. பதில் சொல்ல வந்த அவர் ரத்தினச்சுருக்கமாக, “அது உண்மையல்ல” என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டு அடுத்து, தான் அதை எப்படி மறுக்கிறேன் என்பதையும் விளக்கினார். “கிட்டத்தட்ட பத்து இந்திய செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிக்கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றிரண் டாவது திருநள்ளாறுக்கு மேலே போயாகணும், இது போலவே (புரளியை) பலரும் சொல்கிறார்கள் என்பதற் காக என்னுடைய குழுவினர் மூலமாக அதை ஆய்வு செய்து பார்த்தோம்.அதன் மேலே பறக்கும் போது இந்திய செயற்கைக்கோள்கள் எதற்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை” என்று அழுத்தம் திருத்த மாகச் சொன்னார்.
அறிவியல் அறிஞராகயிருந்தாலும் ஒரு புரளிக்கு வெறுமனே பதில் கொடுத்துவிடக்கூடாது என்று அறிவு நேர்மையுடன் இதற்காகவே ஆய்வு செய்து கூறிய முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சனிப்பெயர்ச்சி நடந்த 16-12-2014 – செவ்வாய்க் கிழமையன்று இதே புரளியை ஆதாரபூர்வமாக மறுக்க, பகுத்தறிவு நாளேடாம் ‘விடுதலை’ சார்பில் செய்தியாளர்கள் குழுவொன்று பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் திருநள்ளாறு கோயிலுக்கே நேரடியாகச் சென்று. செயற்கைக்கோளை வைத்துக்கூட அல்ல, வெறும் செல்பேசியின் அலைவரிசையைக்கூட அது பாதிப்படையச் செய்யவில்லை என்பதை பதிவு செய்து மேற்கண்ட பார்ப்பனியப் புரனியை ஆதாரபூர்வமாகவும், விரிவாகவும் 17-12-2014 புதன்கிழமை – ‘விடுதலை’ நாளிதழில் அம்பலப் படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் கூறுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டு மானாலும் மன்னிக்கலாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறந்ததானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வதென்ன வென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும் அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாய் ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள்ளுகிறேன்‘‘.
– தந்தை பெரியார், (‘விடுதலை’, 4.4.1968)
சி.வி.ராமன் எப்படி?
“முதல் மனிதன் ககாரின் 1962இல் விண்வெளி அகண்ட காஸ்மாசில் (cosmos) சென்றதை விஞ்ஞானியாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி.ராமன் அவர்கள் (1930இல் நோபல் பரிசு பெற்றார் – இவர் கண்டுபிடிப்பு: ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலை நீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இதற்கு இராமன் விளைவு – Raman Effect எனப் பெயராகும்). அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் செய்வதாகும் என்றார்.
அறிஞர் என்ற பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங்கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்களின் நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை, கூறாமலே அது விளங்கும. (ஏ.எஸ்.கே., நூல் – “கடவுள் கற்பனையே – புரட்சிகர மனித வரலாறு” முன்னுரையில்).