தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம்!
சென்னை, ஏப்.2 தமிழ்நாட்டு மீன வர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீண்டும் பெறுவதே என்னும் தீர்மானத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.4.2025) முன்மொழிந்தார்.
தீர்மானம் வருமாறு:
தீர்மானம்
“தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டு மென்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றும் இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டு கிறேன்.