* ஆஸ்திரேலியா கண்டத்தில் தமிழர் தலைவரின் தந்தை பெரியார் கொள்கைப் பிரச்சாரப் பயணம் வெற்றி!
* கழகத் தலைவருடன் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியும் பங்கேற்பு
* அரங்குகளில் உரை, வானொலி, காணொலி பேட்டிகள் !
* தந்தை பெரியார் கொள்கைவழி வாழும் பல்வேறு துறைகளிலும் ஒளிரும் குடும்பங்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் உன்னதமானது!
* மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக்கவிஞரின் தொலைநோக்கு இதோ நம் கண்முன்!
பெரியார் பன்னாட்டமைப்பின் அடுத்த மாநாடு ஆஸ்திரேலியா- மெல்போர்னில்!
ஆஸ்திரேலியாவில் பெரியார் – வரும் நூற்றாண்டுகளுக்கும் அச்சாரம்!
ஈரோட்டுப் பாதையில் எங்கும் ‘முட்டுச்சந்துகள்’ முட்டுச் சாலைகள் இல்லை!
மூன்று வார காலம் ஆஸ்திரேலியாவிற்குப் பெரியார் கொள்கைப் பயணத்தை மேற்கொண்டு, சென்னை திரும்பிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தம் பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், தந்தை பெரியார் கொள்கை எல்லைகளைக் கடந்து பரிணமிப்பது குறித்தும் எழுதியுள்ள படப்பிடிப்பின் ஒரு பகுதி வருமாறு::
பகுத்தறிவுப் பகலவன், திராவிட சமூகத்தின் மூச்சுக் காற்று, நமது மான மீட்பர் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் ‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்ற புரட்சிக்கவிஞரின் ஆழமான கருத்து (‘‘தொழும்’’ என்றால் பின்பற்றுதல் என்று பொருள்) இன்று அது விழைவாக இல்லாமல், வினைத்திட்பமாக மாறி வருகிறது.
20, 21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!
பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘‘இனிவரும் 21, 22 ஆம் நூற்றாண்டு தந்தை பெரியார் நூற்றாண்டே’’ என்று நாம் எழுதினோம்; பேசினோம்.
அன்று ஏளனச் சிரிப்போடு பார்த்தவர்கள் உண்டு! சிலர் அப்படியும் நடக்குமா? என்று அய்யத்தின் வாயிற்பட்டு அலட்சியமாக நம் கூற்றை நம்ப மறுத்தனர்.
ஆனால், இன்று கண்கூடான காட்சி…!
உலகம் பெரியார் மயமாகிவருகிறது; பெரியார் உலகப் பந்தில் தன் பயணத்தைத் தொடரத் தொடங்கி யுள்ளார்! ஆம், அவர் வாழ்ந்த காலத்தில் சில நாடுகள் குறிப்பாக மலேயா, சிங்கப்பூர், இலங்கை, அன்றைய பர்மா இன்றைய மியான்மா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே சென்றார்.
என்றும் தேவைப்படும் பெரியார் எனும் மாமருந்து!
அவரது வாழ்வு முடிந்த நிலையில், அவரது கொள்கை, லட்சியம், தத்துவப் பயணங்கள் – அவர் கண்ட இயக்கத்தின் நூற்றாண்டு, அவரது மானிட உரிமைப் போராட்ட வெற்றியின் நூற்றாண்டைக் குவலயம் குதூகலத்துடன் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்து வருகின்றது.
‘‘என்றும் தேவைப்படும் மாமருந்து’’ போன்ற அவரது மனித உரிமைக் கொள்கை லட்சியங்களும், வன்முறை அற்ற, ரகசியம் இல்லா வெளிப்படையான போராட்ட நெறிமுறைகளும் அன்று எப்படி இந்திய நாட்டின் வடபுலத்துக்கு, பாபா சாகேப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்குப் பயன்பட்டதோ, அதேபோன்று, ஜாதி வெறியும், மதவெறியும், வர்ண பேத வெறியும் மேற்கத்திய மற்றும் பல நாடுகளுக்கு ‘‘ஏற்றுமதி’’ செய்யப்படும் இன்றைய நிலையில், பெரியார் – அம்பேத்கர் என்ற மாமருந்தே அதற்குரிய தடுப்பு ஊசி கள் வரும் நூற்றாண்டுக்கும் உலகம் முழுவதும் தேவை என்பதைக் காலம் மக்களுக்கு உணர்த்தி வருகிறது.
அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா போன்ற நாடுகளில் பெரியார் பன்னாட்டமைப்பு (Periyar International, USA) பல கிளைகளை அமைத்து, செய்யும் பணியே அதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு.
‘‘தந்தை பெரியார் தனி மனிதரல்ல; அவர் ஒரு சகாப்தம் – ஒரு காலகட்டம் – ஒரு திருப்பம்’’ என்றார் அவரது முதன்மைச் சீடர்களில் முக்கியமானவரான அறிஞர் அண்ணா அவர்கள், பொருத்தமாக!
சென்றாண்டு ஜப்பான் பயணம்!
சென்ற ஆண்டு செப்டம்பரில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெரியார் பிறந்த நாள் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டு, பெரியாரைச் ‘சுவாசித்தனர்.’
ஜப்பான் மொழியில் பெரியார் கருத்துகள் மொழி பெயர்க்கப்பட்டு, ஜப்பானிய தூதரக அதிகாரிகள் பெரியார் திடலுக்கு வருகை தந்து பெருமகிழ்ச்சியுடன் பெற்றனர்.
டோக்கியோவில் நாம் கலந்துகொண்ட விழாவில், பல ஜப்பானிய சிந்தனையாளர்களும் பங்கேற்று, தந்தை பெரியார்பற்றி அறிந்து வியந்தனர்!
உழைப்பினால் உயரும் சமூக மக்களான ஜப்பானி யர்கள் – ‘‘பிறப்பினால் உயருவது – ஆதிக்கம் செலுத்து வது என்ற பிற்போக்கு கருத்து ஏற்கத்தக்கதல்ல’’ என்பதை உணர்ந்து, ‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்பதை ஏற்பதும், சமத்துவமும், கண்ணியமும் மிகுந்த மக்களான அவர்களுக்கு மரியாதையும் உரித்தான – மனிதத்தை அடிப்படையாகக் கொண்ட பெரியாரின் தத்துவம் ஏற்கத்தக்கதுதானே!
‘‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்தின் சீர்மிகு ஏற்பாடுகள்!
அதேபோல, ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ள ‘‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம்’’ தோழர் மகிழ்நன் அண்ணாமலை, டாக்டர் ஹாருண் போன்றவர்களால் அங்கே காலங்கருதி எடுக்கப்பட்ட நன்முயற்சியாகும். இது ஆஸ்திரேலிய நாட்டின் கொள்கையாளர்களை ஒரு நல்ல தொகுப்புப் பூங்காவாக்கிக் கொண்டு, எழுந்துள்ளது!
ஆஸ்திரேலியாவிலும் ‘ஆரியம்’ அதன் ஆக்டோபஸ் கொடுங்கரங்களை வழக்கம்போல் புகுத்தி, வர்ணதர்ம பாடங்களைப் போதிப்பது என்று தொடங்கி, அது ஏதோ இந்தியர்களின் பண்பாட்டுப் பாடம் என்பது போல, அங்கே உள்ள பலருக்கும் உண்மை புரியாத வகையில், தங்களது செல்வாக்கினால் நிலை நிறுத்த முயன்றதையொட்டி, வெகுண்டெழுந்த அமைப்புதான் ஆஸ்திரேலிய நாட்டு பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம் (Periyar – Ambedkar Thoughts Circle Australia, PATCA).
சென்ற ஆண்டு நடைபெற்ற அவ்வமைப்பு நிகழ்ச்சி யொன்றில், காணொலிமூலம் நானும், வழக்குரைஞர் அ.அருள்மொழியும், ஆஸ்திரேலியாவின் முற்போக்குச் சிந்தனையாளரும், மேனாள் எம்.பி.,யுமான லீ ரியனான் உரையாற்றினோம்.
அங்கே வந்திருந்த பல மாநிலங்களைச் சேர்ந்த பெருமக்களை, நம் மக்களை, அறிவுச் சான்றோர்களை, சிந்தனையாளர்களைக் கண்டு, கலந்து பேசியும், நமது வழிகாட்டிகளான பெரியார் – அம்பேத்கர் தத்துவ கொள்கைகளின் இன்றைய தேவைகளை விளக்கி னோம்.
ஆஸ்திரேலிய கொள்கைத் தோழர்களின் தொடர் அழைப்புகள்!
‘‘நேரில் எங்களை உற்சாகப்படுத்தி, ஒருங்கி ணைக்கும் அரும்பணி ஆற்ற வாருங்கள்’’ என்று நமது ஆஸ்திரேலிய கொள்கை உறவுகள் அன்பழைப்பு விடுத்து, தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்!
இவ்வாண்டு எனக்கும், நம் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களுக்கும் இந்த அன்புக்கட்டளை ஓயாது ஒலித்தது.
நான் இங்குள்ள பணிகள் காரணமாகவும், தொலை தூரப் பயணத்திற்கு உள்ளம் ஒப்புக்கொண்டாலும், உடல் ஒத்துழைக்குமா என்ற தயக்கம் இருந்த காரணத்தினாலும் ஒப்புதலுக்குத் தயங்கினேன்.
ஆனால், அங்கு ஒரு சிலர் (விரல் விட்டு எண்ணி விடலாம்) சிறு சலசலப்பு, எதிர்ப்பு என்ற பெயரால் சில குழப்பச் செயல்களைச் செய்யவிருப்பதாகச் சில செய்திகள் வந்திருப்பதாக இங்குள்ள நமது கொள்கைத் தோழர்கள் தெரிவித்தனர்.
மெல்போர்னில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றி முடித்தவுடன், அவரது உரைக்குப் பாராட்டு தெரிவிக்கும்முகமாக அனைவரும் எழுந்து நின்ற காட்சி
‘எதிர்ப்பு’ என்றவுடன்தான், என்னவானாலும் கட்டாயம் போயே தீருவது என்று முடிவு செய்து, பயணத்திற்கு ஆயத்தமானோம்.
ஆஸ்திரேலிய நாட்டின் பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்தின் பொறுப்பாளர்களின் சுறுசுறுப்பும், பொறுப்பும் மிகுந்த பணிகள் என்ற ஆலையிட்ட கரும்பானோம் – பெரியார் மாணாக்கர்களான நாங்கள் இருவரும்!
சிட்னியில் வந்திறங்கிய முதல் நாள் மட்டுமே ஓய்வு, விடுதியில்! மற்ற நாள்களில் தொடர், அடர் நிகழ்ச்சிகள், பாசம் பொங்கும் சந்திப்புகள், கொள்கை உறவில் நடைபயிற்சிகளிலும்கூட – இயக்கக் கொள்கை, ‘திராவிட மாடல்‘ அரசின் செயற்பாடுகள் – அங்குள்ள கள நிலவரங்கள்பற்றியெல்லாம், அங்கே பல முக்கிய பணிகளில் உள்ளவர்கள் ஆதலால், ‘Turn Duty’ போட்டுக்கொண்டு எங்களைக் கவனித்தனர்.
பல்வேறு துறைகளிலும் ஒளிவீசும் நமது அருமை கொள்கைத் தோழர்கள்!
ஏற்கெனவே எனது தலைமையில் பல ஆண்டு களுக்கு முன்பு – 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவர்கள் உள்பட பலரது வீட்டிலிருந்து, என் உடல்நலத்திற்கேற்ப எளிய உணவு வகைகளைத் தயாரித்துத் தந்த – வற்றாத கொள்கைக் குடும்பப் பாசமும், கனிவான அன்பும் என்றும் மறக்க முடியாதது! (பட்டியல் பிறகு).
சனி, ஞாயிறு போன்ற வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி, பொது நிகழ்ச்சிகள் ஏற்பாடு, உலக மகளிர் உரிமை நாள், அன்னை மணியம்மையார் நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகள், அரங்கம் வழியும் அளவுக்கு, அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம் வந்ததால், இருக்கைகள் போதாமல், நின்று கொண்டும் கேட்டனர்!
சிட்னி பெருநகரில் அம்மேடையில் முழங்கிய ஆஸ்திரேலியக் கொள்கை வீராங்கனை திருமதி துர்கா, தேவிபாலா (இவர் அமைப்பில் செயற்குழு உறுப்பினர்; முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பேளுக்குறிச்சி ஜி.பி.சோமசுந்தரம் எம்.பி. அவர்களின் உறவினர்) டாக்டர் சசிகுமார்.
முதலில் பூர்வகுடிகள் (Aborigins) உரிமைகள்பற்றிய ஒரு பிரகடனம் – அவர்களது உரிமைக்கு இவ்வமைப்பு ஒத்துழைத்துப் போராடும் என்ற உணர்வுபூர்வ உறுதிமொழியுடன் தொடங்கியது புதுமை (நாங்கள் இருவரும் அப்படியே பேசத் தொடங்கினோம்).
எனது பேச்சு இருமொழி உரையாக இருந்ததை ஆஸ்திரேலிய மேனாள் எம்.பி. (போராளியும்கூட) அவர்களுக்கு, துர்கா அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்ல, பெரியார் கருத்துகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்துபோய், இறுதியில் எனது கைகளைப் பிடித்து மகிழ்ச்சி பொங்கக் குலுக்கிப் பெருமிதமடைந்தார்.
கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழியும், நானும் ஆற்றிய உரை!
அருள்மொழியும், நானும் தலா 40 மணித்துளிகள் பேசினோம். புத்தகங்கள் ஏராளம் வாங்கிச் செல்லப்பட்டன.
ஒருவர்கூட இடையில் எழாமல், மிகுந்த உற்சாகத்துடன் செவிமடுத்து, பேச்சை முடித்தபோது, எழுந்து நின்று பலத்த கைதட்டலும் (Standing Ovation) தந்து மகிழ்ந்தனர்.
அரங்கமே கொள்கை விளக்கப் பாசறையாகி, அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். நிகழ்ச்சிக்கு முன்பாக தோழர் பைந்தளிர் குடும்பத்துடன் எழுச்சிப் பறை இசைத்தார்.
பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்தின் தலைவர் மகிழ்நன் அண்ணாமலை உள்பட முக்கியப் பொறுப்பாளர்களுக்குப் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டுத் தெரிவித்தோம்.
பிரிஸ்பேர்னில் நடைபெற்ற கூட்டத்தில்…
அதுபோலவே அடுத்தடுத்து, குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் பெருநகரத்திலும், மிகச்சிறந்த ஏற்பாடுகளுடன் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 20 குடும்பங்களின் சந்திப்பு, கலந்துரையாடல் (அவர்களது கேள்வி – பதிலுடன் ‘கோல்டு கோஸ்ட்‘ என்ற முக்கிய நகரத்தில், தோழர்கள் பார்த்திபன், தமிழாய்வாளரும், கல்வியாளருமான முகுந்தராஜ் (இவர் தாய்த் தமிழ்ப் பள்ளியை வெகுகாலமாக நடத்திவருகிறார்) பேராசிரியர் பிரதீபன், கவிஞர் ரவிச்சந்திரன், (இவர் சிறைத் துறை அதிகாரியாகப் பணியாற்றினாலும், தமிழ்க் கொள்கைத் தோழர்) கண்ணபிரான் (வேளாண்மைத் துறை நிபுணர், ஓய்வு), கார்த்திகேயன், கார்த்திக்குமார் இப்படி பலர் அந்த ஏற்பாடுகளைச் செய்தனர். (பிறகு ஒரு தனிப் பட்டியல்).
சிட்னியில் சிறந்த கொள்கைத் தோழர் பொன்னுராஜ், வீரச்செல்வி பக்தவத்சலம், இனியரசன்- ேரகா இணையர், கோகுல்ராஜ், டாக்டர் சசிகுமார், தேவிபாலா, தாமோதரன்,
தலைநகர் கேன்பெர்ராவில் அமைப்பின் செயலாளர் பண்பும் கொள்கை வழியும் வந்த திருமதி சுமதி விஜயகுமார் (ஆஸ்திரேலிய அரசுப் பணியாற்றுபவர், சிறந்த கொள்கையாளர்), வ.அறிவுமணி (மறைந்த கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் பேரன்), புரவலர் அண்ணாமலை அருணாசலம் ஆகியோர் மிகுந்த அன்புடன் உபசரித்தனர்.
சிட்னியில் எஸ்.பி.எஸ். தமிழ் ஒலிபரப்பிற்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
மெல்போர்னில் கொள்கைப் பாசறைத் தோழர்கள்!
மெல்போர்ன் நிகழ்ச்சியை அடுத்து, ‘பெரியார்’ ஆஸ்திரேலியாவில் வலுவாக வேரூன்றி வருகிறார்.
மெல்போர்ன் ஒரு முக்கிய பெருநகர் – அங்கு, கொள்கைப் பாசறைபோல் தோழர் மூர்த்தி அவர்கள் தலைமையில், தாயுமானவன், சுரேஷ்பாபு, சரவணன்இளங்கோ, வசந்தன், நந்தகுமார், திருமலை நம்பி, தோழர் சுப்பு ஆகியோர் நிகழ்ச்சிகளை மிகச் சிறப்புடன் திட்டமிட்டனர். அடுத்துத் தொடர் செயல்பாடுகளைப்பற்றித் திட்டமிடுதல் எல்லாம் பற்றி பிறகு எழுதுவோம்!
பிரிஸ்பேர்ன் விமான நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வரவேற்பு…
வானொலிப் பேட்டிகள்!
இதற்கிடையில், ஆஸ்திரேலிய சிறப்பு வானொலி (வெளிநாட்டவர்களை வரவேற்று, உரையாடல், பேட்டி நடத்துவதற்காகவே ஆஸ்திரேலிய அரசின் சார்பாக நடைபெறும் SBS என்ற Special Broadcasting Service வானொலியில் மூத்த செய்தி ஆசிரியர் டாக்டர் ரேமண்ட் செல்வராஜ் பிஎச்.டி., பிலிப்பைன்ஸ் வானொலியில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவருடன், செய்தி ஆசிரியர் குலசேகரம் சஞ்சயன் மற்றும் தமிழ் ஒளி வானொலி சிவாகைலாசம் சுந்தரதாஸ் என்ற ஈழத்தோழர் 40 ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் என்னைப் பேட்டி கண்டு எழுதிய, அன்றைய இலங்கை ‘தினகரன்’ செய்தியாளர் (இப்போது Freelance செய்தியாளர்), ஆஸ்திரேலிய தமிழ் தொலைக்காட்சிக்காக திருமதி ராதிகா, (இவர் அமைப்பின் மெல்போர்ன் பொறுப்பாளர்களில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் – கொள்கை உணர்வாளர்) ஒரு மணிநேரம் உலக நிலவரம் தொடங்கி உள்ளூர் அமைப்பு வரை அருமையான கேள்விகள் கேட்டு, பதில் பெற்றார். ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்காக, தோழர் நந்தகுமார் எடுத்த மற்றொரு பேட்டி –இப்படிப் பலபல. (பின்னர் விரிவாக).
மெல்போர்ன் விமான நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வரவேற்பு…
ஆஸ்திரேலியாவில் பற்பல பகுதிகளிலும், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் தகத்தகாய ஒளியுடன், இருபால் குடும்ப உறவுகள், தோழர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, அன்பால் எங்களைத் திணற அடித்தனர் – தொடர் நிகழ்வுகள் – தனியே அடுத்து எழுதுகிறேன்.
மகளிர் பலரும் பங்கேற்று கலந்து நடத்திய ‘தொண்டறத்தாய்’ அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் – தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கரின் வெற்றி முகங்களின் வீரத் திருஉலாவாகும்.
அடுத்த பெரியார் பன்னாட்டமைப்பு மாநாடு மெல்போர்னில்!
அடுத்து பெரியார் பன்னாட்டு அமைப்பு – பேராளர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்குத் திட்டமிடுகிறார்கள்!
ஆஸ்திரேலியாவில் நடந்த இதற்கெல்லாம் மூலதனம் உழைப்பு! அந்தப் பொறுப்பாளர்களின் அலுப்பு சலிப்பில்லாத உழைப்பு – இப்பெரு வெற்றிக்கு அடித்தளமிட்டுள்ளது. குறிப்பாக, தலைவர் மகிழ்நன் அண்ணாமலை, அவரது வாழ்விணையர் வாஞ்சைமிகு இராணி முதலியவர்களின் ஈடு இணையற்ற உழைப்பு முக்கியமானது.
ஆஸ்திரேலிய தமிழ் தொலைக்காட்சியின் திருமதி ராதிகா, தமிழர் தலைவருடன் நேர்காணல்!
உலகம் பெரியார் மயம்!
‘ஆஸ்திரேலியாவில் பெரியார்’ என்பது வரும் நூற்றாண்டுகளுக்கு அச்சாரமிடும் அரும்பணியின் முன்னோட்டம்!
பயணங்கள் முடிவதில்லை –
ஈரோட்டுப் பாதைகளில் என்றும் முட்டுச் சந்துகள் – முட்டுச சாலைகள் இல்லை!
எனவே,
‘‘பெரியார் உலக மயம் –
உலகம் பெரியார் மயம்!’’
ஆங்கே உழைக்கும் எமது உறவுகளே,
நன்றி! நன்றி!! நன்றி!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.4.2025