சென்னை, ஏப்.1 கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
சொத்து வரி
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி செலுத்த வேண்டும். இதில், கடந்த 2023-2024 நிதியாண்டில் ரூ.1,750 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், 2024-2025 நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை எட்டுவதற்காக, கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் வீடு வீடாக சென்று வரி வசூல் செய்து வந்தனர்.
விடுமுறையிலும் வரி வசூல்
குடியிருப்பு சங்கங்கள் உதவியுடன் சிறப்பு வரி வசூல் முகாம்களையும் மாநகராட்சி நடத்தி வந்தது. கடந்த மார்ச் 29 முதல் 31-ஆம் தேதி வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும், சொத்து வரி வசூல் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
நேற்று (31.3.2025) நள்ளிரவு 12 மணி வரை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாநகர வருவாய் அலுவலர் பானுசந்திரன் தலைமையில் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.2025 கோடி
அதன்படி, நேற்று இரவு 8 மணி வரை கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்குமேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகமாகும். இதேபோன்று தொழில் வரி ரூ.570 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட ரூ.38 கோடி அதிகமாகும்.
இன்றுமுதல் செலுத்தப்படும் முந்தைய நிதியாண்டுகளுக்கான சொத்துவரிக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இன்றுமுதல் ஏப்.30-ஆம் தேதிக்குள் செலுத்தினால், அதில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில்
போலி மருந்து உற்பத்தி இல்லை
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்
சென்னை, ஏப்.1 தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போலி மருந்து உற்பத்தி இல்லை என்று மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
தமிழ்நாட்டில்விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, மாவட்டம் தோறும் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் நடத்தி வருகிறது. மருந்துக் கடைகள், மருந்து விநியோக நிறுவனங்கள், கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. அங்கிருந்து பெறப்படும் மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. உரிய விகிதத்தில் மூலப் பொருள்கள் இல்லாத மருந்துகளும், உரிய தர நிலையில் இல்லாத மருந்துகளும் உட்கொள்ள தகுதியற்றவையாக அறிவிக்கப்படுகிறது. அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போலி மருந்து
இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்குதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதர் கூறுகையில், “மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில் முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக கண்டறியவில்லை. கடந்த ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்ட ஒரு போலி மருந்தும், வேறு மாநிலத்தில் தயாரிக்கப்பட்டதாகும். தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன. அதனை உற்பத்தி செய்த 74 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.