டாக்டர் நா.மோகன்தாஸ்
(இந்திய மருத்துவ சங்க
தமிழ்நாடு கிளை மேனாள் தலைவர்)
இடைவிடாது இருபத்திநான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டிருப்பது நமது சிறுநீரகங்கள். பெயர்தான் சிறுநீரகமே தவிர, பெரும் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் உறுப்பு இது. கோடையில் சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நிச்சயம் வரும். அவை தாங்க முடியாத தொல்லைகளைத் தரலாம். இருந்தபோதும், முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
வெப்பவாதம்
நமது உடல் சராசரியாக 97.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக் கூடியது. இது 104 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லலாம். வெயில் காலங்களில் வியர்வை அதிகம் வெளியேறும். அப்போது உடம்பில் இருந்து தண்ணீருடன், உப்புச் சத்துக்களும் வெளியாகின்றன. இதனால் உடம்பில் தசைகளில் பிடிப்பு உண்டாகும். சோர்வு ஏற்படும். வெப்ப வாதமும் வரும். சிலருக்கு மயக்கம்
ஏற்படும் வாய்ப்பு உண்டு. இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு இந்த காலகட்டத்தில் இரத்தக்குழாய் அதிகம் விரிவடைவதால் இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படும்.
இரத்த அழுத்த நோய்உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூளைக்குழாய் பாதிப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் இவர்களுக்கு வர வாய்ப்பு உண்டு.
ஏற்கெனவே எரிச்சல்பட வைக்கும் இந்த வெயிலில், சிறுநீர் எரிச்சலும் சேர்ந்து விட்டால்… கேட்கவே வேண்டாம், எரிச்சலின் உச்சத்திற்கே சென்று விடுவோம். மேலும் ஆண்களைவிட பெண்களுக்கு இது ஒரு இக்கட்டான காலகட்டம். சிறுநீர் கடுப்பு, எரிச்சல், சிறுநீர் தொற்று, இரு பாலருக்கும் வரலாம். ஆனால் பெண்கள், குழந்தைகளுக்கு அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் உடல் அமைப்பு இயற்கை யிலேயே அவ்வாறு அமைந்துள்ளது. மேலும் உள்ளாடைகள் அணிதல் போன்ற பிரச்சினைகளால் அவர்களுக்கு உடல் வெப்பம் குறையாது.
உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக மாறி வெளியேறி விடுவதால் சிறுநீர் அதிக அடர்த்தியுடன் குறைந்த அளவில் சிறுநீர்ப் பைக்கு வரும். இதன் காரணமாக சிறுநீர் வெளியேறும் அளவில் மாற்றமேற்பட்டு குறைவாக வெளியேறும். சிறுநீர் அடர்த்தி அதிகரித்து அளவில் குறைவாக இருப்பதால் சிறுநீர் வெளியேறும் போது சிரமமாகவும் எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்தும். சிறுநீர் கல் உள்ளவர்களுக்கும், அல்லது அதற்கான வாய்ப்புள்ள
வர்களுக்கும் சிவந்த நிறத்தில் சிறுநீர்
வெளியேறுவதுடன் விலாப் புறத்தில் கடும் வலியும் ஏற்படும்.
தோல் வியாதிகள்
மேலும் கோடையில் தோல்வியாதிகள், கை,கால் இடுக்குகளில் நோய் தொற்று ஏற்பட்டு சிறுசிறு கொப்புளங்கள் தோன்றும். கோடையில் அம்மைநோய் வரும். சுகாதாரமற்ற குளிர்ந்த தண்ணீர், அய்ஸ் அருந்துவதால் தொண்டைப்புண் ஏற்படும். இவற்றின் விளைவாக சிறுநீரகத்தில் அழற்சி ஏற்பட்டு கை, கால்களில் வீக்கம், மூச்சுத் திணறல், இரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு ஏற்பட்டு. சில சமயங்களில் நினைவு இழக்கும் நிலை ஏற்படும்.
ஆகவே வெய்யில் காலங்களில் இரண்டு வேளையும் குளித்து அல்லது தண்ணீர் விட்டுகழுவி தோலை மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதார மற்ற தண்ணீர், அய்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தோல்வியாதி,தொண்டைப்புண்னை அலட்சியப் படுத்தக்கூடாது. உடல் நிலை மற்றும் சிறுநீரில் மாறுதல் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
‘லுபஸ் நெப்ரைடிஸ்” என்ற நோய் பெரும்பாலும் பெண்களுக்கு அதிகம் வரும். வெயிலில் சென்றால் முகங்கள் கருத்து வண்ணத்துபூச்சி போன்ற வடிவில் மூக்கை சுற்றி காணப்படும். அதன் அறிகுறியாக காய்ச்சல், மூட்டுவலி, சிறுநீர் சிவப்பாக போதல் போன்ற சிறுநீர் பாதிப்பு ஏற்படும். பரிசோதனையில் லுபஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என அறிந்தால் அவர்கள், வெய்யிலை தவிர்ப்பது நலம். அல்லது வெயில் படாமல் கருப்பு நிற குடையை பயன்படுத்தவேண்டும். அதுபோன்றே ஒவ்வாமையை ஏற்படுத்தாத லோஷன் மற்றும் கிரீம்களை முகத்தில் தடவிக் கொள்ளலாம்.
வயிற்றுப்போக்கு
தாகத்திற்கு தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். ஆனால் அது சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்படும். வயிற்றுப்போக்கு எல்லாம் தானாகவே சரியாகி விடும் என்று இருந்து விட்டால், சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டுவிடும். எனவே வயிற்றுப்போக்கு, வாந்தி இருந்தால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை சமன்செய்ய சர்க்கரை, உப்பு கலந்த நீர் கரைசலை அடிக்கடி அருந்தவேண்டும். மோரில் அல்லது கஞ்சியில் உப்பு போட்டும் குடிக்கலாம்.
அதேபோன்று வெயில் காலம் என்பதால் காற்றைத் தேடி கிராமத்தில் உள்ளவர்கள் திறந்த வெளியில் படுப்பார்கள். இந்த வெயிலின் பாதிப்பால் பாம்புகளும் வெளியேவரும். குறிப்பாக கண்ணாடி விரியன், கட்டு வீரியன் போன்ற பாம்புகள் தஞ்சை பகுதிகளில் அதிகம். பெரியவர்களைவிட குழந்தைகளும் பாம்புக் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் மூலமும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?
நிறைய, அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.
மோர், இளநீர் சாப்பிடலாம்
சிறுநீரைத் தங்கவிடாமல், அடக்கி வைக்காமால் வெளியேற்ற வேண்டும்
அதிக காரம், மது, புகை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் சிலர் நீர் மாத்திரைகள் சாப்பிடுவர்; அது தவறு – இதனால் கை, கால் இழுப்பு வரும்.
புரோட்டீன் சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக ஆகின்றது.
எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.
நாமும், குழந்தைகளும் சுத்தமான தண்ணீரையே பருக வேண்டும்.
சிறுநீரகம் சம்பந்தமாக சிறு பிரச்சினைகள் வந்தாலும் மருத்துவரின் ஆலோசனையை உடனே பெறுவது அவசியம்.
இதயத்தில் இருந்து வெளிப்படும் ரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு முதலில் சிறுநீரகத்திற்கு தான் செல்கிறது. அங்கே ஒவ்வொரு சிறுநீரகத்துக்கு உள்ளும் ரத்த சுத்திகரிப்புக்கு தேவையான அடிப்படைச் செயலாக்க கூறுகள் உள்ளன. இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்து சிறுநீரகத்தைக் காப்பது நம் சீரிய வாழ்வுக்கு நல்லது.