இந்தியா – இலங்கை மீனவப் பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்

Viduthalai
2 Min Read

கொழும்பு, மார்ச் 31- இந்தியா-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை
இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள், அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர். அப்போது, மீனவப் பிரதிநிதி சகாயம் தலைமையிலானோர், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர்.

மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களுக்குப் பதில் அளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக் கூட்டம் விரைவில் நடைபெறும். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை பொது மருத்துவமனையில்
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு
முழு உடல் கதிர்வீச்சு சிகிச்சை

தமிழ்நாடு
சென்னை, மார்ச் 31- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது‑ மருத்துவமனையில் முதல்முறையாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முழு உடல் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோய் துறையில் முதல் முறையாக முழு உடல் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையானது, ரத்த புற்றுநோய் (லுகேமியா)நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு முன்பு செய்யப்படுவதாகும்.
இந்த சிகிச்சை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் முழு உடல் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும் நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் விஜயசிறீ, அருணா, கிரிதரன் ஆகியோரை மருத்துவமனை டீன் தேரணிராஜன் பாராட்டினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய வழக்கு
சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவுசென்னை, மார்ச் 31- தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கட்டண நிர்ணயக் குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த வழக்குரைஞர் அய்சக் மோகன்லால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் முன்மொழிந்த அளவுருக்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட கட்டணக் கட்டமைப்பை நிர்ணயிப்பதற்கு அவசியமான பரந்த அளவுருக்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் கட்டண நிர்ணயக் குழுவிற்கு உத்தரவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் சங்கத்தின் சார்பாக மூத்த வழக்குரைஞர் அய்சக் மோகன்லால் ஆஜரானார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *