18.3.2025 தேதியிட்ட ‘விடுதலை’ இதழில் ‘சமஸ்கிருதத்தின் ஊடுருவல்’ என்ற தலைப்பில் வந்த செய்தியைப் படித்த பார்ப்பனர்கள், ‘ஆமாம்! சரிதான். ஒத்துக் கொள்கிறோம்’ என்று கூறுவார்கள் என்று நம்பலாமா?
இரண்டு செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒன்று, பேராசிரியர், சான்றுகளுடன் வைத்த செய்திகள் – சமஸ்கிருத சவப்பெட்டிக்கு மேல் அடிக்கப்பட்ட மற்றொரு ஆணி.
இந்த பேராசிரியர், தாம்பரம் சென்னை கிறித் தவக் கல்லூரியில் பணியாற்றியவர். 1951ஆம் ஆண்டு, நான் அக்கல்லூரியில் மாணவனாக இருந்தபோது, தமிழ்ப் பாட வகுப்பில், மு.வ.வின் ‘தமிழ் நெஞ்சம்’ என்ற நூலின் பாடம் நடக்கும் போது பேராசிரியர் பூ. ஆலால சுந்தரனார் பாடத்தையொட்டி ஒரு கருத்தைக் கூறினார். தணியாத தமிழ் உணர்வின் மேலீட்டால், தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அந்த மரபு காக்கப்பட வேண்டும் என்ற ’தமிழ் நெஞ்சத்தால் அங்கு பணியாற்றிய பேராசிரியர் சூரிய நாராயணன் சாஸ்திரி, பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். இது ‘தமிழ் நெஞ்சம்’ என்று சுவைப்பட எடுத்துரைத்தது இன்னும் பசுமையாக உள்ளது.
இரண்டு; அண்மையில் ‘தி இந்து’ குழுமம் ஆவணக் காப்பக வெளியீடாக விவேகானந்தரைப் பற்றிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விவே கானந்தர், அமெரிக்காவில் சிகாகோ நகரில் 11.9.1893இல் உலக மதங்களின் கருத்தரங்கு மாநாட்டில் பேசியது.
‘புத்தரிடம், பார்ப்பன சீடர்களும் இருந்தனர். புத்தர் பரப்புரை செய்து வந்த காலத்தில் சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இருக்கவில்லை. படித்தவர்களிடம் புத்தகங்களாகத்தான் இருந்தன. புத்தருடைய சில பார்ப்பன சீடர்கள், புத்தருடைய உரையை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தெழுத விரும்பினர். ஆனால் புத்தர் அவர்களிடம் தெளிவுபட, ‘நான் ஏழைகள் பக்கம் உள்ளவன். மக்கள் பக்கம் உள்ளவன் நான் – அவர்கள் மொழியில்தான் பேசுவேன்’’ (I am for the poor, for the people, let me speak in the tongue of the People) எனவே பெரும்பாலான புத்தரின் உரைகள் இந்தியாவில் இருந்த மக்கள் மொழியில் இருந்தது.
புத்தரின் புத்தி வந்திடாதோ ஹிந்தியை புகுத்துவோருக்கு.
– மு.வி. சோமசுந்தரம்
பகுத்தறிவாளன், கோயம்புத்தூர்