நேப்பிடா, மார்ச் 30- மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் (28.3.2025) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது.
அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக் கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மய்யம் கொண்டிருந்தது. மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த 6 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டி ருக்கிறது.
மியான்மர் பூகம்பத்தில் இது வரை 1,600-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர்; 3,400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.
காணவில்லை
மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் சமீபத்திய செய்திக் குறிப்பில், ‘நிலநடுக்கத் தால் இதுவரை 1,644 பேர் உயி ரிழந்துள்ளனர். 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவ மனைகள், மருத்துவ முகாம் களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேரை இதுவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் தேவை
இதற்கிடையே, மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் பன்னாட்டு ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன. ‘ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும். சுமார் 2 கோடிக்கும் மேற்பட் டோருக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது.
தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் பகுதிகளுக்கு மட்டுமே பன்னாட்டு மீட்புப் படை வீரர்கள் சென்றுள்ளனர். ‘அரக்கான்’ படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. அந்த படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இது வரை எந்த தகவலும் வெளி யாகவில்லை’ என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல், ஆயிரக்கணக் கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என மியான்மரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள், பணியாளர்கள் கருதுகின்றனர். பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்ததாலும், தொலைத்தொடர்பு துண்டிக்கப் பட்டதாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் மியான்மர் ராணுவ நிர்வாகம் திணறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கலாம்
இதனிடையே, மியான் மரில் நிலநடுக்கத்தால் காயம டைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான போதுமான மருந்துகள் அங்கு இல்லாததால் பாதிப்பு மிகவும் மோசமடையக் கூடும் என அய்.நா அச்சம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில், மியான்மரில் பூகம்ப பலி எண்ணிக்கை மென் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.