ஹிந்தி மொழி ஆதிக்க உணர்வின் அப்பட்டமான வெளிப்பாடு!

Viduthalai
4 Min Read

கடந்த சில நாள்களாக முகநூலில் பதிவிடப்பட்டுள்ள ஒரு காட்சி வைரலாக அனைவரின் பார்வைக்கும் வந்துள்ளது.
தமிழ்நாட்டில், ஒரு வங்கிக் கிளையில் – அந்த பொதுத் துறை வங்கிக் கிளைக்குள் ஒருவர் நுழைகிறார். அவர் அந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளரா என்பது பற்றிய செய்தியினை முகநூலின் காட்சி வழி அறிய முடியவில்லை. வந்தவர் வாடிக்கையாளர் அணுகும் கவுன்ட்டரில் உள்ள வங்கிப் பணியாளரிடம் ஹிந்தியில் சிலவற்றைக் கேட்கிறார்.

அதற்கு அவர் தனக்கு ஹிந்தி மொழி தெரியாது என பதிலளித்துக் கொண்டிருந்த பொழுதே வந்தவர் தனக்குத் தெரிந்த தமிழில், ‘எப்படி நீங்கள் ஹிந்தி தெரியாமல் இருக்கலாம்? நான் ஹிந்தியில்தான் பேசுவேன்; நீங்கள் ஹிந்தியிலேயே பதில் சொல்ல வேண்டும்’ என கூச்சல் போடுகிறார். வாக்குவாதம் வளர்ந்த வேளையில் வெளியில் வங்கிக் கிளை வாசலில் காவலில் இருந்தவர் (மேனாள் ராணுவ வீரராக இருக்க முடியும்) தான் ராணுவப் பணியின் பொழுது கற்றுக்கொண்ட ஹிந்தியில் வந்தவரிடம் பேசி அனுப்புவதாக அந்தக் காட்சி மூலம் தெரிய வருகிறது.

வங்கி நிறுவனம் என்பது வங்கிச் சேவையை வாடிக்கையாளருக்கும், வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கும் வழங்கி வருகிறது. வங்கியில் எழுத்தர் பணியில் இருப்போர் (பெரும்பாலும் கவுன்ட்டரில் சேவையினை வழங்கக் கூடியவர்கள், பணியில் சேரும்பொழுது அந்தந்த மாநில மொழிகளில் பேசிடவும், படித்திடவுமான நடைமுறை அறிவு இருந்தால் போதும் என்பதுதான் விதி. அப்படிப்பட்ட பணியாளர்களுக்கு அதே பணியில் மாநிலப் பகுதியைத் தாண்டி பணியிட மாறுதல் இருக்காது.

பிற மாநிலங்களுக்கு மாறுதலாம் அலுவலகராகப் தொடக்க பணியில் சேருபவர்களாகட்டும், அலுவலகராகப் பணி உயர்வு பெறுபவர்களாகட்டும், எவருக்கும் ஹிந்தி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை எந்த வங்கியிலும் இல்லை. இந்த நிலையில் வங்கியில் பணியாற்றிடும் எவரையும் ஹிந்தியில்தான் வங்கிக்கு வருபவரிடம் பேச வேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது. தெரியாத மொழியில் உரையாட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது நடைமுறையில் எப்படி சாத்தியம்? வங்கிக்கு வருபவர், தனக்குத் தெரிந்த மொழியில் தனது தேவையைச் சொன்னால், அதை ஏதேனும் ஒரு வகையில் புரிந்துகொண்டு வங்கியில் பணிபுரிவோர் தமது சேவையை அளித்து வருகின்றனர். இந்த வழமையை கண்கூடாக வங்கிக்குச் செல்பவர்கள் பார்த்திருக்கக் கூடும்.

ஆனால், ‘ஹிந்தி மொழியில்தான் நான் பேசுவேன்; ஹிந்தி மொழியில்தான் வங்கியில் எனக்கு பதிலளிக்க வேண்டும்’ என்பது வந்தவரின் நோக்கம். அவர் சேவையைப் பெற வந்ததாகத் தெரிய வில்லை. ஹிந்தி மொழி ஆதிக்கத்தை, அனைவரும் கட்டாயம் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடாகவே முகநூலில் பரவிவரும் காட்சி புலப்படுத்துகிறது. எந்த மாநிலத்தில் உள்ள வங்கிக் கிளைகளிலும் அந்த மாநில மொழி சாராத மொழிகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற பணிநிலை சேர்ப்பு விதிமுறைகள் ஏதும் இல்லை. அந்ததந்த மாநில மொழியினை, நடைமுறைப் பயன்பாட்டிற்கு மட்டும் கற்றுக் கொண்டு பணியாற்றுவது பணியாளருக்கு வசதியாக இருக்கும். அவ்வளவே.

அந்த மாநில மொழி, ஹிந்தி அல்லாத பிற மாநில மொழி தெரிந்தவர்கள் யாரும் ‘காட்சியில்’ உள்ளவரைப் போல தான் பேசும் மாநில மொழியினை வங்கியில் பணியாற்றுவோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்திடுவார்களா?
காட்சியில் உள்ளவருக்கு கொஞ்சம் கொஞ்சம் நடைமுறைப் பேச்சுத் தமிழ் தெரிந்த நிலையிலும் “ஹிந்தியில்தான் பேசுவேன்; வங்கியில் இருப்பேர் ஹிந்தி யில்தான் பதிலளிக்க வேண்டும்” என்று கட்டாயப்படுத்திடுவது தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் இன்றைய தேவையை அழுத்தமாகக் காட்டுகிறது.
ஒன்றிய அரசு கடைப்பிடித்து வரும் ஹிந்தி திணிப்பு நடைவடிக்கைகளில், ஒரு தனி நபரே ஹிந்தியை வலியுறுத்தி பேசுவது ஒன்றைக் காட்டுகிறது.

ஹிந்தி மொழி இந்த மண்ணைப் பொறுத்த அளவில் மற்ற மொழிகளைப் போன்ற ஒரு மொழி அல்ல; ஹிந்தி என்பது மொழி மட்டும் அல்ல; அது மற்ற மொழிப் பேசும் மக்களின் மீதான ஆதிக்கம் செலுத்துவதே. முகநூல் காட்சியைப் பார்க்கும் எவரும் இந்த முடிவுக்குத்தான் வர முடியும். 1926இல் தந்தை பெரியாரால் ‘ஹிந்தி ரகசியம்’ என ‘குடிஅரசில்’ வெளியிடப்பட்டு 1938இல் கட்டாயப் பாடமாக ஹிந்தி திணிக்கப்பட்ட பொழுது எழுந்த எழுச்சி, போராட்டம் தொடங்கி, ‘ஹிந்தி மொழி ஹிந்தி பேசாத மக்களிடம் திணிக்கப்படாது’ என டில்லியிலிருந்து ஆளுபவர்களால் அறிவித்த உறுதி மொழிகளும், மக்கள் மன்றத்தில் வாக்கு மூலங்களும் அளிக்கப்பட்டாலும், ஹிந்தி மொழியின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மனதில் – பெரும்பாலானவர்களிடம் மற்ற மொழி பேசுபவர் மீதான ஆதிக்க நிலை ஆணவத்துடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்பொழுது முகநூலில் பதிவிடப்பட்டு பரவி வரும் ஒரு காணொலிக் காட்சியும் அத்தகைய நிலையினைக் காட்டுவதாக உள்ளது.

– வீ.குமரேசன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *