வல்லம், மார்ச் 29- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் 22.03.2025 முதல் 28.03.2025 வரை தஞ்சாவூர் ஒன்றியம் திருவேங்கட உடையான்பட்டி, அய்யாசாமிபட்டி, செல்லப்பன்பேட்டை ஆகிய கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமின் துவக்கவிழா 22.03.2025 அன்று திருவேங்கடஉடையான்பட்டியில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமின் துவக்க விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் வாயிலாக மாணவர்கள் சமுதாயத் தொண்டினையும், சேவை மனப்பான்மையும் கிடைக்கப் பெற்று தங்களின் ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ளலாம் என்று கூறிய அவர் சமுதாயத்தில் மாணவர்கள் அனைவரும் சிறந்த மனிதர்களாக வாழ இயலும் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் வாழ்க்கை கல்வியை பெறுவதற்கு இச்சிறப்பு முகாம் ஒரு நல்வாய்ப்பாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர். மாலதி; சிறப்பு முகாமை துவக்கி வைத்து உரையாற்றும் போது நமது இளைஞர்களான மாணவர்கள் தங்கள் உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதுகாத்து நமது இந்தியா வலிமையான நாடாகவும் வல்லரசாகவும் சிறந்து விளங்கிட பாடுபட வேண்டும் என்று கூறிய அவர் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் சேவை மனப்பான்மை வாயிலாக சமுதாய மேம்பாட்டிற்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நாட்டு நலப்பணித்திட்ட ஆர்வலர் செல்வன் க.ஹரிபிரசாத் சிறப்பு முகாம் பணிவிளக்கம் அளித்தார்.
முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆர்.மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர். ப.முத்துக்குமாரபதி நன்றியுரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஞா.செங்கொடி சிறப்பு முகாம் இணைப்புரை வழங்கினார்.