தமிழ்நாடு உலகத்திற்கே நாகரிகத்தை பகிர்ந்த இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் உலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் – அவர்களுக்கு தகுந்த வாய்ப்பு கிடைத்தால்.
திராவிட மாடல் அரசின் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு வகையில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் பணிகளைச் செய்துகொண்டு இருக்கிறது.
இதனால் பள்ளிக் குழந்தைகளுக்காக மட்டுமே காலை மாலை என்று இரண்டு நேரம் செல்லும் குக்கிராமங்களின் பிள்ளைகளின் கைவண்ணம் உலகமே வியக்கும் வகையில் வெளிக்கொண்டுவரப்படுகிறது.
கல்வித்துறை முன்னெடுப்பு
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பின்படி மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் 2022ஆம் ஆண்டு முதலே நடத்தப்பட்டு வருகின்றன.
நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புறக் கலைகள், நவீன கலை வடிவங்கள் எனப் பலவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதில் தேர்வான பிள்ளைகள் பாடல் இசை மற்றும் நாட்டியங்களில் மிளிர்கின்றனர். இதுவரை தமிழ்நாடு என்றாலே அலங்காரப் பதுமை பரத நாட்டியம் ஆடுவதுபோன்ற ஒன்றைக் காட்டினர். இது தமிழ்நாட்டின் பறையிசையும் கரகமும், மயிலாட்டமும், என்ற அடையாளமாக இப்போது மாறிவிட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா ஆஸ்திரேலியா இங்கிலாந்து, போன்ற நாடுகளில் நடக்கும் தமிழ்நாடு தொடர்பான நிகழ்ச்சிகளில் பறையிசை ஒலித்து துவக்கிவைக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று தங்கள் திறமைகளைக் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் கிராமத்து வாழ்க்கையின் பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பெற்றோர்கள் படும் இன்னல் மிகுந்த வாழ்க்கையைப் படமாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இது கல்வியின் மீதான பிள்ளைகளின் அக்கறைகளை மேலும் ஊக்கம் கொடுக்கும் வழியாக இருந்தது.
தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒளிப்படக் கலை, அரங்கக் கலை, நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது.
ஒளிப்படக் கலை பயிற்சி
இதன்படி மாணவர்களின் கைகளில் ஒளிப்படக் கருவியைக் கொடுத்து பெற்றோரின் வாழ்வியலைப் படம் பிடிக்க கற்றுக்கொடுத்தனர்.
அந்த சின்னக் கைகளின் வழியாக தங்களின் பெற்றோர் தங்களுக்காக என்ன என்ன துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை காமிராவிற்குள் பதித்தனர்.
இதன் மூலம் இதர மாணவர்களும் பெற்றோர்கள் படும் பாடுகள் அதனை நீக்கும் வழி கல்வி அதை எப்படியும் பெற்றுவிடு என்று ஊக்கமளிக்கும் வகையில் படங்கள் அமைந்துள்ளது
“மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன ஒளிப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம்.
உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர். அதை ஆவணப் படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்தான்.
ஒளிப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, ‘உழைக்கும் மக்கள்’ எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த ஒளிப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த ஒளிப்படங்களையும் எடுத்துள்ளனர்.
இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். அன்றாடம் கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர்.
அவர்களின் வாழ்க்கையில் உள்ள துயரங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த ஒளிப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, “தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;” என்பது இந்த ஒளிப்படங்களை பார்க்கும்போது புரிகிறது.
துப்புரவுப் பணி, கட்டுமானத் தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை கேமரா வாயிலாக ஒளிப்படம் எடுத்துள்ளனர்.
வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் ஒளிப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்தப் படங்களில் பிரதிபலிக்கிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத் தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார்.
“நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும்.
மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை ஒளிப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன்.
ஒரேயொரு ஒளிப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது ஒவ்வொரு நாளுக்குமான செயல்பாடு.”
“அம்மா முதலில் அவரை ஒளிப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், ‘சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ’ன்னு சொன்னார். ஒளிப்படத்தைக் காண்பித்ததும் ‘நல்லா இருக்குன்னு’ சொன்னாங்க.”
“செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே ஒளிப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது.
ஒளிப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்.” என்கிறார் ஜெயராஜ்.
மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார்.
“அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார்.
டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.
நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்.” என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி. அவரை பொறுத்தவரை இந்த ஒளிப்படங்களில் அவருடைய அப்பா ‘ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்.”
• • • • •
கல்குவாரியில் துண்டை மட்டுமே நிழலுக்காக பாவித்து காலி அட்டைப் பெட்டிகள் விரித்து தூங்கும் தந்தை.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார். “ஒளிப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன்.
அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்.” என்கிறார் முகேஷ். அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் ‘டிரில்லிங்’ வேலைகளை பார்க்கிறார்
“அவர் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். உடல் எங்கும் தூசி வியர்வையில் இறுகி உடலோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் குளிக்க நேரம் இருக்காது அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது.”
• • • • •
தனி ஒருவராக குடும்பத்தை காப்பாற்றும் அம்மாவை படம் பிடித்த மாணவி
தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
“அப்பா மாற்றுத்திறனாளி. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை ஒளிப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்.” என்கிறார் கீர்த்தி.
“அம்மா வேலை செய்வதை கேமரா வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. தொழில்முறை (புரொபஷனல்) கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, எல்லாம் தெரியும்.”
• • • • •
ஈரோட்டில் மஞ்சள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் தனது தாயின் பாதங்களை படம் பிடித்துள்ளார் ஒரு மாணவி.
படம் பார்க்கும் போது கொலுசு அணிந்து கால் முழுவதும் வளையங்களை அணிந்து கொண்டு இருக்கும் அழகான ஒரு படமாகத் தெரியும் ஆனால் அந்தப் படங்களுக்குப் பின்னால் பாதங்கள் மஞ்சள் பிடித்து அது நிரந்தரமான ஒன்றாக போய்விடுகிறது.
இதனால் தோல் அரிப்பு, பாதங்கள் மென்மையாகிப் போகுதல் இதனால் சிறு கல் குத்தினால் கூட ரத்தம் வரும் மேலும் மஞ்சள் வாசத்தோடு இருப்பதால் வீட்டிலும் உணவு சரிவர எடுத்துகொள்ளாத சூழல் ஏற்படும், உணவுப் பொருட்களில் சூடு குறைந்தால் சாப்பிட முடியாது, என பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் தனது மகளின் எதிர்கால வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டு இருக்கும் அம்மாவில் கால்களை உலகிற்குக் காண்பிக்கிறார்.
மஞ்சள் மருந்து, அதன் அருமை பெருமைகள் எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் அங்கு பணி புரியும் பெண்களின் நிலைகுறித்து ஒருமாணவி உலகிற்கு கொண்டுவந்து நாம் வாங்கும் மஞ்சளை பதப்படுத்தும் பெண்களின் நிலையை முதல்முதலாக உலகம் பார்க்கிறது.