கோழிக்கோடு, மார்ச் 28- கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் 9.3.2025 அன்று நாளந்தா கலை அரங்கத்தில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் மேனாள் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் யூ. கலாநாதன் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. கருத்தரங்கம்,நூல் வெளியீடுகள் மற்றும் யூ.கலாநாதன் நினைவுக் கட்டடம் கட்டுவதற்கான அறக்கட்டளை உருவாக்கம்,பொது அரங்கம் போன்ற –நிகழ்ச்சிகள் தொடர்ச் சியாக நடைபெற்றன.
காலை 9.30 மணிக்கு வரவேற்புக் குழுவின் சார்பாக தோழர் பிரகாஷ் கருத்தடாத் அனைவரையும் வர வேற்றார். முதல் அமர்வு அறிவியல் வேளாண்மையும் நவீன இந்தியாவும் என்ற தலைப்பில் டாக்டர் கே.எம்.சிறீகுமார் உரையாற்றினார்.ஆசிரியர் எல்சா ஒருங்கிணைப்பு செய்தார். 2ஆம் அமர்வாக புருஷ சுக்தா என்னும் தலைப்பில் டாக்டர் டி.எஸ்.சியாம்குமார், சமஸ்கிருத மொழியியல் பேராசிரியர் வருணம் பற்றியும், ஆரியத்தின் சூழ்ச்சிகள் பற்றியும் வெகு சிறப்பாக உரையாற்றினார்.
மூடநம்பிக்கைகள் ஒழிப்பு
வழக்குரைஞர் கே.டி.உஷா ஒருங் கிணைப்பு செய்தார். இஸ்லாம் மதத்தில் ஆண் பெண் சமத்துவம் என்னும் தலைப்பில் மூன்றாம் அமர்வு நடைபெற்றது. வழக்குரைஞர் சி.சுக்கூர் சிறப்புரையாற்றினார்.வழக்குரைஞர் ராஜகோபால் இதனை ஒருங்கிணைத்தார். அடுத்த அமர்வு மூட நம்பிக்கைகள் ஒழிப்பு-இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் என்று நடைபெற்றது.வழக்குரைஞர் கே.என்.அணில்குமார்-மேனாள் மாநிலச்செயலாளர் உரையாற்றினார். சி.எஸ்.எலிசபெத் ஒருங்கிணைத்தார்.
முனைவர் வா.நேரு சிறப்புரை
மதியம் 3 மணியளவில் யூ கலாநாதன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பாமாகியது.தோழர் ரவீந்திரன் யூ.கலாநாதன் பற்றிய கவிதை பாடினார்.கவிதை பிரேம் செய்யப்பட்டு யு.கலாநாதனின் இணையர் சோபனா கலாநாதன் மற்றும் அவரது மகன் சமீர் கலாநாதனிடம் முன்னாள் அமைச்சர் பினாய் விஜயம் அவர்களால் வழங்கப்படட்து.அனைவரையும் வரவேற்று இருங்கல் கிருஷ்ணன் உரையாற்றினார்.தொடர்ந்து கேயுச மாநிலத்தலைவர் கங்கன் அழிக்கோடு,மாநிலச்செயலாளர் பி.கே.சக்திதரன் உரையாற்றினர்.தொடர்ந்து தொடக்க உரையை முன்னாள் அமைச்சர் சிபிஅய் மாநிலச்செயலாளர் தோழர் பினாய் விஜயம் உரையாற்றினார்.தொடர்ந்து தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
மனிதநேய இயக்கங்கள்
தனது உரையில் 2000 ஆம் ஆண்டுமுதல் யு.கலாநாதனை இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் வழியாக அறிவேன் என்றும்,மதுரையில் 2006இல் நடைபெற்ற இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் நேரடியாக கலாநாதன்,சுகுமாறன் போன்ற தோழர்கள் கலந்து கொண்டதையும், கோவை, மங்களூர், நாக்பூர், விஜயவாடா, சென்னை, திருச்சி போன்ற பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்திய நாத்திக மாநாடுகளில்,இந்திய நாத்திக செயற்குழு கூட்டங்களில் கலந்து கொண்டபோது தோழர் கலாநாதனோடு நேரடியாக பலவிதங்களில் உரையாடியதையும் குறிப்பிட்டார்.
திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பலமுறை அழைத்து கேரள யுக்திவாதி சங்கம் நிகழ்ச்சிகள் நடத்தியதையும்,அதைப்போல சு.அறிவுக்கரசு, இன்றைய திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதையும் தான் தொடுபுழாவில் கலந்து கொண்டதையும் குறிப்பிட்டு, இன்றைய காலகட்டத்தில் நாத்திக இயக்கங்கள், மனித நேய இயக்கங்கள் இந்தியா முழுவதும் இணையவேண்டிய தேவை இருப்பதையும் அதற்குத் தந்தை பெரியாரின் கருத்துகள் மிக உதவியாக இருப்பதையும் குறிப்பிட்டார்.
அறிவியல் மனப்பான்மையுடன் போராட வேண்டும்
தந்தை பெரியாரின் கருத்துகள் உலகம் முழுவதும் இருக்கும் முற்போக்குவாதிகளால் கொண்டா டப்படுகிறது.என்பதையும் 92 வயதாகும் தங்கள் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவில் பரப்புரை செய்வது பற்றியும் குறிப்பிட்டார். யு.கலாநாதன் பெயரில் கோழிக்கோடு நகரத்தில் அமைய இருக்கும் நினைவுக் கட்டடம் மற்றும் அறக்கட்டளைக்கு திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும்,இந்தியா முழுவதும் இருக்கும் நாத்திக, மனித நேய இயக்கத்தில் இருப்போர் அனைவரும் எழுத வேண்டும்,எழுதுகோலை பாசிச சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு அறிவியலுக்குப் புறம்பாக நடைபெறும் பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டு,அறிவியல் மனப்பான்மை அடிப்படையில் நாம் போராட வேண்டிய,எழுத வேண்டிய தேவை இருக்கிறது.அதில் யு.கலாநாதன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது,பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
நினைவுகள் பகிர்வு
தொடர்ந்து யு.கலாநாதன் அறக்கட்டளையின் தலைவர் முல்லைவேட்டி மொய்தீன், தனுவச்சபுரம் சுகுமாறன், கேரள முற்போக்கு கலை இலக்கிய அமைப்பின் தலைவர் டாக்டர் ஹேமந்த்குமார், IPTA வின் டி.வி.பாலன் ஆகியோர் யு.கலாநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவாக கோழிக் கோடு மாவட்டச்செயலாளர் பி.பி.உன்னி நன்றி கூறினார்.
கேரளா யுக்திவாதி சங்கத்தின் மாநிலச் செயலாளர் சக்திதரன் மற்றும் பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் அணில்குமார், தோழர் இருங்கல் கிருஷ்ணன், தோழர் தனுச்சுவரம் சுகுமாரன், தோழர் ஆழப்புழா அகிலேஷ் உள்ளிட்ட பலர் திராவிடர் கழகம் பற்றியும் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நலம் பற்றியும் விசாரித்து மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டனர்.