சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் 4 பிரதிநிதிகள் பதவி நீக்கம் விதிகளை மீறி செயல்பட்டதால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 28 விதிகளை மீறி செயல்பட்டதால் உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் என 4 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை பதவிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

4 பேர் பதவி நீக்கம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட் சிகள், நகராட்சிகள், பேரூராட் சிகள் ஆகியவை 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன் விதிகளை மீறும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலை வர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இதன்படி விதிகளை மீறி செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் 4 பேரின் பதவி களை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கவுன்சிலர்

அதன்படி சென்னை மாநகராட்சியில் 5-ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் (திமுக), 189-ஆவது வார்டு கவுன்சிலர் வ.பாபு (திமுக), தாம்பரம் மாநகராட்சி 40-ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் 3-ஆவது மண்டலக்குழு தலைவர் ச.ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி, 11-ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் நகர்மன்ற தலைவர் க.சகுந்தலா ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிக்கரணை பகுதியில் 4800 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிக்கு இடையூறு செய்ததால் இதுவரை 180 இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இணைப்பு வழங்கும் ஒப்பந்த தாரர்களை கவுன்சிலர் பாபு மிரட்டி, விரட்டியுள்ளார்.பகுதி பொறியாளரை தாக்கியுள்ளார். குடிநீர் இணைப்பு சேவை இணையதள பாஸ்வேர்டை கேட்டும் மிரட்டி யுள்ளார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் அரசிடம் கோரியிருந்தார்.சென்னை மாநகராட்சி 5-ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார். மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருந்துள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது. அதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் அரசை கோரியிருந்தார்.

உசிலம்பட்டி நகரமன்ற தலைவர்:

உசிலம்பட்டி நகரமன்ற தலைவர் க.சகுந்தலா, நகரமன்ற மாண்பை குறைக்கும் வகையில், நகரமன்ற கூட்டத்தை மன்ற கூடத்தில் நடத்தாமல், நகரமன்றத் தலைவர் அறையில் நடத்தியுள்ளார். அப்போது மகன் மற்றும் உறவினர்கள் நகரமன்ற தலைவர் அனுமதியோடு கூட்ட அறையில் நின்று கொண்டு, மன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும்போது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறி திடக்கழிவு மேலாண்மை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார் என இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசிடம் கோரியிருந்தார்.

தாம்பரம் கவுன்சிலர்

தாம்பரம் மாநகராட்சி, 3-ஆவது மண்டலக்குழு தலைவர் ச.ஜெயபிரதீப், மன்ற உறுப்பினர்களை கலந்தா லோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, 8 மாதங்களாக தொடர்ச்சியாக எந்த கூட் டத்தையும் கூட்டாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அதனால் இவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசிடம் கோரியிருந்தார். இந்த 4 பேரிடம் உரிய விளக்கம் கோரப்பட்டது. அந்த விளக்கங்கள் திருப்தி அளிக்காத நிலையில், இவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு கவனமுடன் பரிசீலித்து இவர்களை பதவி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *