சேலம் காடையாம்பட்டியில் ஜாதி பிரச்சினை களத்தில் இறங்கியது திராவிடர் கழகம்

viduthalai
4 Min Read

சேலம், மார்ச் 28- சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி பெரிய வடுகம்பட்டி பகுதியில் ஒரு சிறுவனை, உயர் ஜாதியினர் வசிக்கும் பகுதியில் காலில் செருப்பு அணிந்து நடந்ததற்காகவும், கோயில் அருகில் சென்றதற்காகவும், கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதுகுறித்து, 22.03.2025 சனிக்கிழமை மதியம் 2:00 மணிக்கு சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி பூபதி, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா. பாலு, சேலம் மாவட்ட ப.க செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ்குமார், மேட்டூர் மாவட்ட ப. க தலைவர் கோவி அன்புமதி, மேட்டூர் நகர தலைவர் இரா கலையரசன், மேட்டூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறீதர் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தனர். அதன் விபரம் வருமாறு….

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் உள்ள பெரிய வடுகம்பட்டி அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர்கள் இ.தங்கமணி – அம்மு வாழ்விணையர் தங்கமணி பட்டமேல் படிப்பு வரை படித்துவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்கும் பணியை செய்து வருகிறார். அம்மு வீட்டுப் பொறுப்பை கவனித்துக் கொள்கிறார்.

இவர்களுக்கு, ஆறாம் வகுப்பு படித்து வரும் யோவான், ஒன்றாம் வகுப்பு படித்து வரும் அஸ்வின் பரமு என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
யோவான் பெரிய வடகம் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்.

இப்பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சார்ந்த நான்காயிரம் குடும்பங்களும், தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்த 100 குடும்பங் களும் உள்ளன.
இந்த நூறு குடும்பத்தினரும் ஆதிக்க ஜாதியினரின் காடுகளிலும் வயல்களிலும் வேலை செய்து வந்திருக் கின்றனர்.

இப்போது ஆதிக்க ஜாதியினருக்கு பெரிய அளவில் காடுகளோ வயல்களோ இல்லை. தாழ்த்தப்பட்டவர்களும் வேறு பணிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களில், ஒரு பத்துப் பேர் தான் படித்து ஆசிரியர், பொறியாளர், காவலர் என உருவாகியிருக்கிறார்கள்.
அவர்களும் இப்போது இந்த ஊரில் வசிக்க வில்லை. வேறு ஊர்களுக்கு சென்று விட்டார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி தீண்டாமை கண்ணோட்டத்தோடு பார்க்கப்படு கிறது.

இதே பகுதியை சேர்ந்தவர்கள்தான் ஆதிக்க ஜாதியை சேர்ந்த அங்காயி, அங்காயியின் மகள் லட்சுமி ( வயது 40 க்கு மேல்) லட்சுமிக்கு திருமணம் ஆகவில்லை. காய்கறி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

அம்பேத்கர் நகரில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கோயில் உள்ளது.

பாராட்டத்தக்க நடவடிக்கை

ஜாதி – தீண்டாமைப் பாம்பு தலை தூக்கும் இடங்களில் சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தினர்
மேற்கொண்ட உடனடி நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதனை மற்ற பகுதிகளிலும், இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது கழகத் தோழர்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

05.03.2025 அன்று யோவான் பள்ளிக்கு செல்லும்போது, (ஜாதி பெயரை சொல்லி) ஒரு .பையன் செருப்பு அணிந்து போவதா? கோயில் அருகில் வருவதா? என்று மிரட்டி மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர் லட்சுமி மற்றும் அங்காயி.

இந்த தாக்குதலில் சிறுவனின் சீருடைகளும் கிழிந்து விட்டன. சிறுவனுக்கு கன்னம் மற்றும் ஆணுறுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
யோவான் வீடு திரும்பிய பிறகுதான் பெற் றோருக்கு செய்தி தெரிந்து இருக்கிறது. சிறுவனை விசாரிக்கும் போது தான் இதற்கு முன்பும் இது மாதிரி தாக்கியுள்ளனர், சிறுவன் பயந்து கொண்டு பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

யோவானின் தாயார் அம்மு, பாட்டி பூங்கொடி இருவரும் தாக்கியவர்களிடம் சென்று ஏன் அடித்தீர்கள் என்று கேட்டதற்கு, ஜாதி பெயரை சொல்லி மிகவும் ஆபாசமாக திட்டி, அவமானப்படுத்தி துரத்தியுள்ளனர். இருவரும் பயந்து கொண்டு வந்து விட்டனர்.

காவல்துறையினருக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்ததற்கு, நேரில் வந்து புகார் கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

காவல்துறையினர் மருத்துவமனையில் வந்து விசாரித்தாலும் முதல் தகவல் அறிக்கை பதியவிலலை.

ஊடகங்களில் செய்தி பரவியதாலும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததாலும், 10.03.2025 அன்று முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர்.
08.03.2025 அன்று தாக்குதல் நடத்திய இருவரில் லட்சுமியை மட்டும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
அங்காயி வயதானவர் என்பதால் கைது செய்யவில்லை.

சிறுவன் மருத்துவமனையில், ஜாதி என்றால் என்னம்மா? ஏன் என்னை அடித்தார்கள்? என்று கேட்டதாகவும், இரவில் தூங்காமல் பயத்தில் உளறியதாகவும் பெற்றோர் தெரிவித்தபோது மனம் கனத்தது.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை, ஆதிக்க ஜாதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, பெரும் கும்பலாக திரண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் மீதும், வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தியதாக சிறுவனின் தந்தை தங்கமணி தெரிவித்தார்.

தற்போது சிறுவன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

சிறுவனை பள்ளிக்கு அனுப்புங்கள் சிறுவனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று மாவட்ட நிர்வாகம் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்து, சிறுவன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்.

கழகத் தோழர்கள் சென்றபோது சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டபடியால், சிறுவனை சந்திக்க முடியவில்லை.
வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று, தெருவில் போகும்போதும், வரும்போதும் மறைமுகமாக, ஜாடையாக ஆதிக்க ஜாதியினர் மிரட்டல் விடுப்பதாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

மொத்தத்தில் ஒருவித அச்ச உணர்வுடன்தான், சிறுவனின் பெற்றோர் இருக்கின்றனர்.

திராவிடர் கழகம் களத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றதும், ஆறுதல் கூறியதும் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு மன நிறைவையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

சிறுவனுக்கு சீருடை வாங்குவதற்காக நான்காயிரம் ரூபாய், திராவிடர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
திராவிடர் கழக பொறுப்பாளர்களின் தொலைப்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, பாதிப்புக்குள்ளான தோழர்களின் தொலைப்பேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள் என்று சொல்லிவிட்டு கனத்த மனத்தோடு விடை பெற்றனர் கழகத் தோழர்கள்.

தகவல்: சி.பூபதி,
சேலம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *