மொழிப் போராட்டம் (12): தமிழகமே! எவ்வளவு தாங்குவாய்!

Viduthalai
4 Min Read

நாவலர் இரா. நெடுஞ்செழியன்

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 100-க்கு 88 பேர் தற்குறிகள்; எழுத்து வாசனை அற்றவர்கள்; ஏடெடுத்து அறியாதவர்கள். அவர்களுக்கு வேண்டியது அடிப்படைக் கல்வி; மொழிப் பிரச்சினையல்ல. ஆட்சிப்பீடம் ஏறியிருப்போர் “அரசாங்கம்” என்பதற்கு நல்ல பொருளையும், நம்பிக்கையையும் கொடுக்க வேண்டுமானால், பல ஆண்டுகளாக சுதந்திரம் என்று கூறியதற்கு அர்த்தமிருக்குமானால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்வையும், உயிரையும் பலி கொடுத்ததற்குப் பலனிருக்குமானால், ஏழை எளியவர் அனைவர்க்கும் கல்வி புகட்டுவதை முதல் வேலையாகக் கொள்ளவேண்டும்.

பிடிவாதம் வேண்டாம்
அதைவிட நல்ல ஒளியை, நம்பிக்கையை, புது வாழ்வை, விடுதலையை நாட்டுக்கு எவராலும் தர இயலாது. பசியால் துடித்து இறக்குந் தறுவாயிலிருக்கும் ஏழையின்முன் “டில்லி தர்பாரையும்” “பம்பாய் ஜிலேபியையும்” கண்ணாடிக் குவளையில் அடைத்துக் காட்டுவதில் பயனில்லை. அதனால் அவனுக்குப் பசியும் நீங்காது; இவர்களுக்கு வியாபாரமும் நடக்காது. அவசியமற்ற முறையில் இரண்டு மொழிகளுக்குமேல் மூன்றாவதாக, இந்தியைக் கொண்டுவரும் பிடிவாதத்தை விட்டு, இந்திப் பிரச்சாரத்திற்குச் செலவிடப்படும் இலட்சக்கணக்கான பொருளை, முதியோர் கல்வித் திட்டத்தில், சிறிய தொழிற்சாலை அமைப்பதில், பள்ளிக்கூடங்கள் கட்டுவதில் செலவு செய்தல் நலம் எனத் தோன்றுகிறது; அரசாங்கத்திற்கும் பெருமையை அளிக்கும்.

தாய்மொழிப் பயிற்சி
ஆரம்ப நிலையில் தாய்மொழிப் பயிற்சி மட்டும் போதும். பின் உயர்தரக்கல்வி முறையில் தாய் மொழியை அடுத்து, முன்னர் காட்டிய காரணங்கள் படி இப்பொழுதுள்ள முறையைத் தொடர்ந்து ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்படவேண்டும். இவைகளைத் தாண்டியதும், இந்தி போன்று ஒன்றல்ல பத்துப் பதினைந்து மொழிகளை வேண்டுமானாலும் தன் விருப்பப்படி கற்று மொழிநூல் வல்லுநனாகவோ, இலக்கியப் பேராசிரியனாகவோ ஒருவன் ஆவதில் தடையேதும் கிடையாது.
ஒரு மொழியின்மீது ஒருவருக்கு ஏற்படும் விருப்பு – வெறுப்பை, அவரிடத்தில் அன்பு கொண்டிருக்கிறோம் என்ற காரணத்திற்காக மொழிப் பிரச்சினையின் அடிப்படையாக ஆக்கக் கூடாது. அந்த மொழி அவசியமா என்பதுதான் உரைகல்லாக இருக்கவேண்டும். நமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆரம்பக் கல்வியில் தாய் மொழியும் பின் ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்தும் தருவதுதான் முறை – ஒழுங்கு – தேவையான திட்டமுமாகும்.

காலப்போக்கில்
உள்ளத்தில் எழும் எண்ணங்களை வெளியிடு வதற்கே சொற்கள்; அவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் மொழியாகின்றன. மக்களினம் முழுவதற்கும் ஒரே மொழி உண்டாகி மற்ற மொழிகள் அழிந்து போவதென்றால் அதற்குத் தடை இல்லை. அத்தகைய நிலை உடனே உண்டாகி விடாது. காலப்போக்கில் வந்தால் வரட்டும். இப்பொழுதுள்ள நிலையில், எல்லா மொழிகளையும், கலாச்சாரங்களையும் மனதில் வைத்துக்கொண்டு திட்டங்களை வகுக்கவேண்டும்.
இந்த வேற்றுமைகளை உடனே கட்டாய முறையில் அழிக்க நினைப்பது பாஸிச அழிவு வேலையின்பாற்பட்டதாகும். ஜனநாயகம் என்று தெளிவுடையோர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆங்காங்கு காணப்படும் தவறுகளையும், குறைபாடுகளையும் திருத்திக்கொள்ள வசதி தர வேண்டும். அதை விடுத்து ஒரு நிலைபெற்ற கலாச்சாரத்தை அலட்சியப்படுத்திவிட்டு, வேற்றுக் கலாச்சாரத்தைத் திணிக்க முயலுவது வரலாற்றை எதிர்த்து நிற்பதாகும். அது முடியாது; கூடாத செயலுமாகும்.

அடக்குமுறை

இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு மொழிகளும், கலாச்சாரங்களும் இருக்கவேண்டும்; இவைகளிடை ஒற்றுமை உணர்ச்சியை வளர்க்க முயல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கம் ஒற்றுமை என்ற சொல்லின் கீழ் ‘ஒரே விதம்’ என்று கொண்டு, அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறது. தென்னாட்டுக்கும் வடநாட்டுக்குமுள்ள கலாச்சார, வரலாற்றுப் பொருளாதார, அரசியல் வேற்றுமைகளை மதித்து, அந்தக் குறைபாடுகளை நீக்கி, தென்னாட்டின் பொருளாதாரத்தை வடநாடு கொள்ளையடிப்பதை நிறுத்தி, தென்னாட்டின் சுதந்திர உணர்ச்சியை அடக்காமல் எங்கும் அமைதியை நிலைநாட்ட விரும்புவது ஒற்றுமைக் கொள்கையாகும். வடநாட்டு ஏகாதிபத்தியத்தின் சந்தைக் கூடமாகத் தென்னாட்டை ஆக்கி, வடநாட்டு மொழிகளுக்கு அடிமையாகத் தென்னாட்டு திராவிட மொழிகளை ஆக்க விரும்புவது ஒருதலைப் பட்சமாகச் செய்ய விரும்பும் பாஸிச முறையாகும் என்று மீண்டும் மீண்டும், வற்புறுத்துகிறோம்.
காங்கிரஸ் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாத வரையில், மொழிச்சண்டையோ, கலாச்சாரப் போராட்டமோ நீங்காது. மற்றொரு பிரிவினைத் திட்டம் விரைவில் தீட்டப்படவேண்டிய கட்டம் வரை சென்று நிற்கும்.

கடைசி மூச்சு வரை எதிர்ப்பு
இன்றைய நிலையில் தமிழக மக்களுக்கு – திராவிடருக்கு அவசியமுள்ள மொழிகள் இரண்டு தாம்: ஒன்று, அடிப்படை அறிவுபெற; அது தமிழ். மற்றொன்று, உலகியல் அறிவுபெற: அது ஆங்கிலம். இதற்கு மாறாக மற்றொரு வேண்டாத மொழியைப் புகுத்தும் மந்திரிசபையின் திட்டத்தை முழுமூச்சுடன் மக்கள் எதிர்த்து நிற்கவேண்டும் – கடைசி மூச்சு உள்ளவரையில் எதிர்த்து நிற்க வேண்டும் – எடுபடும்வரை எதிர்த்து நிற்கவேண்டும்.
சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரி சபை ஏற்பட்டதிலிருந்து நன்மை எதுவும் விளைந்ததாகத் தெரியவில்லை. பிரகாசம் மந்திரிசபை போய், ஓமாந்தூரார் மந்திரிசபை வந்தாலும் ஆட்களில் மாறுதல் இருந்ததே தவிர, ஆட்சி முறையில் மாறுதலில்லை. பாஸிச முறையில் அது வளர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அது நாட்டுமக்களை மேட்டுக் குடியினரிடம் காட்டிக் கொடுத்தே வாழ்கிறது.

சிறைவாசம்
கனதனவான்களுக்குப் பக்க பலமாய், ஜமீன் தாரர்களுக்கு உற்ற நண்பனாய், இனாம்தாரர்களுக்கு ஏற்றப் பாதுகாவலனாய் இருந்து வருகிறது. கடைசியாக மன்னர் ஒருவரையே ‘ஆசை மணாளனாக’த் தேர்ந்தெடுத்துக் கொண்டது. நாட்டுமக்களோ புழுப்போல் துடிக்கிறார்கள். எங்கெங்கு நோக்கினாலும் அடக்குமுறை. எப்பக்கம் திரும்பினாலும் ஏக்கம்! தொழிற்சங்கங்களுக்கு அடக்குமுறை! எதிர்க் கட்சிகளுக்கு அவசரச்சட்டம்! கட்சிப் பத்திரிகைகளுக்கு ஜாமீன்! காவியங்களுக்கும் நாடகங்களுக்குந் தடை! எதிர்த்துப் பேசினால் அபராதம்! ஏனென்று கேட்டால் சிறைத் தண்டனை கூடிச்சென்றால் தடியடி! கூட்டம் போட்டால் கண்ணீர்ப்புகை! கலைய மறுத்தால் துப்பாக்கிப் பிரயோகம்! இவை ஒரு பக்கம். மற்றொரு பக்கத்தில் அறியாமை, ஏழ்மை, உணவுப் பஞ்சம், விலையேற்றம், கூலிக்குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினிச்சாவு போன்ற பயங்கர நிலைகள். ஒரு புறத்தில் வேட்டுச்சத்தம்! மறு பக்கத்தில் வேதனையின் குரல்! சிந்துகிற இரத்தம், வழிகிற கண்ணீர், சென்னை மாகாணத்தில் இவ்வளவும் போதாதென்று மறைமுகமாக இந்திக் கட்டாயம் வேறு!

தாங்குமா தமிழ்நாடு

திராவிடத்தில் – தமிழகத்தில் எவ்வளவு இடர்கள்! தொத்து நோய், ஏழ்மை, பட்டினிக் கொடுமை, பணக்காரர் தொல்லை தொடர்ந்தடிக்கும் சூறையிலே இந்தியோ இந்தி! ஏ தமிழகமே! நீ எவ்வளவு தொல்லைகளைத்தான் தாங்குவாய்!
– முற்றும்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *