கடலூர், மார்ச் 26- கடலூர் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 23.3.2025 ஞாயிறு காலை 11:00 மணி முதல் 12 .30 மணி வரை தோழர் ஆக்டிவ் சங்கர் ஒருங்கிணைப்பில் 40க்கும் மேற்பட்ட இளம் தோழர்கள் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை கேட்க வேண்டும் எனும் பேரார்வத்தோடு கூடியிருந்தனர்.
புதிய வரவுகளுடன் கொள்கை உறவாடல் நிகழ்வாக நிகழ்ச்சி அமைந் தது. மாவட்ட கழக தலைவர் சொ. தண்டபாணி தலைமையில் மாவட்ட செயலாளர் க எழில் ஏந்தி முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் புதிய வரவுகள் புரிந்து கொள்ளும் வண்ணம் அய்யாவின் கொள்கையை இயக்கத்தின் ஜாதி ஒழிப்பு பங்கு பணிகளை சமூக நீதிக்கான தொண்டினை விளக்கி உரையாற்றினார். மற்றும் கவிஞர் அன்பன் சிவா, சமூகப் பணியாளர் இராச. வேலுமணி, மாவட்ட துணைத் தலைவர் சி. மணிவேல், ஆகியோரும் சிறப்பாக கருத்துகளை எடுத்துப் பேசினார் கள்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் வடக்குத்து பெரியார் படிப்பக நூலகர் கண்ணன், சொக்கு என்கிற சொக்கலிங்கம் , தேவி சங்கர்ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலியா பயணம் முடித்து தமிழ்நாட்டுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை தந்த உடன் அனைவரும் நேரில் சென்று தலைவரை சந்திப்பது என்று முடிவு அறிவித்த போது அனைவரும் பலத்த கை ஒலி எழுப்பி வரவேற்றனர். கடலூரில் பிறந்து வளர்ந்து இன்று கழகத்தின் காவல் அரணாய் தந்தை பெரியார் கொள்கையை உலக மயப்படுத்தி உலகத்தை பெரியார் மயப்படுத்தி செயலாற்றி வரும் தலைவரை சந்திக்கவும் அவருடன் உரையாடவும் தோழர்கள் பேரார்வம் கொண்டுள்ளனர்.