இடிமேல் இடி தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 26- சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரண்டு கட்டங்களாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதல்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

அதன்படி சென்னையை அடுத்துள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகள், சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம் – திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி, பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது.

இதில் ஒவ்வொரு வகை வாகனங்களுக்கும் ஏற்ப ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப் படவுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடி களில் இரண்டாம் கட்டமாக வரும் செப்.1-ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது.

சுழற்சிப் பொருளாதாரத் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது!

சென்னை, மார்ச் 26- நீடித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் சார்ந்த மாற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

இந்த முயற்சியை மேலும் ஆதரிக்கும் வகையில், அய்ரோப்பிய ஒன்றியம் – இந்தியா வளம் சார்ந்த திறன் – சுழற்சிப் பொருளாதார முன்முயற்சி திட்டம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பயிலரங்கத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் சுற்றுச்சூழல் – சுகாதார பாதிப்புகளைத் தணிப்பது மட்டுமல்லாமல், சுழற்சிப் பொருளாதார தீர்வுகள் மூலம் புதிய பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புகளையும் – குறிப்பாக தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக – உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ‘பிளாஸ்டிக்கில் வளம் சார்ந்த திறன், சுழற்சிப் பொருளாதாரம் – பல்துறை பங்குதாரர் பயிலரங்கில்’ அய்.ஓ. இந்தியாவுக்கான அய்ரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஹெர்வ் டெல்பினால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழாவில், ஜி.அய்.இசட். இந்தியாவின் காலநிலை மாற்றம், சுழற்சிப் பொருளாதாரப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரச்னா அரோரா, தமிழ்நாட்டில் அய்.ஓ.-அய் ஆர்.இ.சி.இ.அய். திட்டம் செயல்படுத்துதலுக்கான நோக்கங்கள், செயல்திட்டத்தை வழங்கினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்-வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு அய்ஏஎஸ் கூறுகையில், “சுழற்சிப் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய துணிப் பைகளைப் பயன்படுத்தும் நடைமுறையை மீண்டும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட தமிழக அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்’ பற்றி அவர் எடுத்துரைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *