சென்னை, மார்ச் 26- அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான ‘டெட்’ தகுதித் தேர்வையும், உயர்கல்வித்துறைக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான ‘செட்’ தகுதித் தேர்வையும் நடத்தி வருகிறது.
மேலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான நியமன போட்டித் தேர்வுகளையும் டி.ஆர்.பி. நடத்துகிறது.
வாரியம் அறிவிப்பு
அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடப்பாண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் மொத்தம் 7 ஆயிரத்து 535 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு 232 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதற்கான போட்டித் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) நடை பெறுகிறது. இதற்கான அறிவிப்பு, ஏற்கெனவே வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், சட்டப்படிப்பில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு 132 இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு மே மாதம் நடத்தப்படுகிறது.
4 ஆயிரம் உதவி பேராசிரியர்
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே, இதற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 1,915 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. இதற்கான போட்டித் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பணியில் 1,205 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும்.
வட்டார கல்வி அலுவலர் பணியில் 51 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் நடைபெற உள்ளது. மொத்தம், 7 ஆயிரத்து 535 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான அறிவிப்பு வருகிற ஜூன் மாதம் வெளியாகிறது. 180 மாணவர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.