பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்த மத ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது!

Viduthalai
4 Min Read

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

புதுடில்லி, மார்ச் 25 திருப்பரங்குன்றம் மலை யில் பல்வேறு கோவில்களை முன்னிறுத்தி, கலவரத்தைத் தூண்டும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முறியடித்தது. இதன் தொடர்ச்சி யாக சென்னை ஏகாம்பரநாதர் கோவிலிலிருந்து பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்தார். அதன்மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின்மீது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மதுரை மாவட்டத்தில் இருக்கக் கூடிய திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை, அதனை இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருவதை எதிர்த்து அந்த மலையை காக்க வேண்டும்’’ என்ற கோரிக்கை யுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை பிப்ரவரி 18 ஆம் தேதி ‘வேல் பேரணி’ நடத்த அனுமதியளிக்க காவல்துறை உத்தர விடவேண்டும்’’ என கேட்டிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்தி ரையன் முன் விசாரணைக்கு வந்தது.

ஊக்குவிக்கக் கூடாது!
அப்போது, அரசு தரப்பில் மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘ஏற்கெனவே திருப்பரங்குன்றம் உரிமை குறித்து பிரி வியூகவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழிப்பாதை, நெல்லித் தோப்பு இஸ்லாமியர்களுக்குச் சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, மீண்டும் அது குறித்த பிரச்சினை எழுப்புவது சரியல்ல. பேரணி பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுமின்றி, வேறு எந்த இடத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும், அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சினைகளை உருவாக்கும். ஏற்கெனவே மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மீண்டும் அதே பிரச்சினைக்காக பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்கக் கூடாது’’ என்றார். ‘‘சென்னையில் மட்டுமல்ல வேறு எங்கும் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது’’ என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, ‘‘இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த போராட்டக்காரர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒரு மைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்த முடியாது’’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘‘மதுரையில் நடந்த போராட்டத்தின் போது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதற்காக இரண்டு வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இரு பிரிவினருக்கிடையே விரோ தத்தை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தி, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது’’ என உத்தரவில் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது அமைதிக்குப் பாதிப்பு
‘‘திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மதத்தினருக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் முன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்பட்டது.இது தொடர்பான தீர்மானத்தை மதுரை ஆட்சியரும் ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால், அது மற்ற மதத்தினரை மீண்டும் தூண்டச் செய்து பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘‘பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது. மத ரீதியிலான பதட்டங்க ளைத் தணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது ஒழுங்கையும், மத நல்லி ணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

தள்ளுபடி
‘‘திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை இந்து, முஸ்லீம் மற்றும் ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வந்துள்ளனர். ‘‘ஒற்று மையில் வேற்றுமை’’ தான் நம் நாட்டின் பலம். அதனால் அனைத்து மத மற்றும் சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை அரசு பேண வேண்டும். மத நம்பிக்கைகளும், உணர்வுகளும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அமைதி மற்றும் மத நல்லிணக்கம் பாதிக்கும் வகையில், எவரையும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக கூடாது’’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ‘‘கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த எந்தத் தடையும் இல்லையென்றும்’’ உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து யுவராஜ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தி ருந்தார். அந்த வழக்கு நேற்று (24.3.2025) நீதிபதிகள் பீலா திரிவேதி மற்றும் பிரசன்னா வார்லே ஆகியோர் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ’’உயர்நீதிமன்றத்தினுடைய உத்தரவு சரியாக பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவில் தலையிட முடியாது’’ எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *