டான்சில் மற்றும் அடிநாய்டு என்பது நிணநீர் சுரப்பி (GLAND) எல்லா குழந்தைகளுக்கும் இருக்கக் கூடியது. இது வியாதி அல்ல.
மனித உறுப்புகளான கண், மூக்கு, காதுகளில் வியாதி வருவதைப் போன்று டான்சிலிலும், அடிநாய்டிலும் சில பிரச்சினைகள் வரலாம்.
குறிப்பாக அலர்ஜியினாலோ, அல்லது தொடர் தொற்றுக்களாலோ வீக்கமடைந்து விடலாம். இதனால் மூச்சுப் போகும் பாதை தடைபடலாம். இது தூங்கும்போது குறட்டை சத்தமாக வரலாம். மற்றும் வாயினால் மூச்சு விடலாம்.
அதோடு மூச்சுப் போகும் பாதை முழுவதுமாக தடைபட்டால் தூக்கத்தில் இருந்து திடீரென விழிப்பு வரலாம். இதற்கு (APNOEA) என்று பெயர். இது மிகவும் ஆபத்தானது. இதோடு அடிநாய்டு கிளாண்ட் காதுக்கு மூச்சுப் போகும் பகுதியையும் அடைப்பதால் காதுக்கு காற்றுப் போகாமல் நீர் கோத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது. இது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அறிகுறி.
குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் குறைந்தால் கற்கும் திறன் பாதிக்கப்படும். இந்த இரண்டு அறிகுறிகள் இருந்தால் அடிநாய்டு மற்றும் டான்சில் சுரப்பிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
குழந்தைகள் சரியாக சாப்பிடாததற்கு டான்சில்தான் காரணமா?
குழந்தைகள் சரியாகச் சாப்பிடவில்லை என்பது குழந்தைகள் சாப்பிட விரும்பாதபோது சாப்பிடப் பிடிக்காத உணவை கட்டாயப்படுத்தி ஊட்டும்போது குழந்தைகள் சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது வாந்தி எடுக்கலாம். இந்தச் செயல் நீங்கள் கட்டாய்ப்படுத்தியதன் விளைவாக ஏற்படுவது. குழந்தைகள் சாப்பிடாமல் இருப்பதற்கு 99 சதவீதம் டான்சில் காரணமாக இருக்காது. குழந்தைகள் விருப்பப்பட்ட உணவை சாப்பிட பழக்கப்படுத்துவோம். உணவு என்பது தானாக விரும்பி சாப்பிடுவது. அதன் மேல் கட்டாயப்படுத்தினால் வெறுப்புதான் ஏற்படும்.
சைனஸ் என்பது பிரச்சினையா?
சைனஸ் என்பது இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கின்ற உறுப்பு. அது மூக்கின் வழியாக காற்று சென்றுவரக் கூடிய காற்றடைத்த பை. தும்மல் தொடர்ச்சியாக வருபவர்கள் எனக்கு சைனஸ் இருக்கிறது என்று கூறுவார்கள். அது தவறு.
அடுக்குத் தும்மல் வந்தால் அது அலர்ஜியாக இருக்கலாம். அலர்ஜி என்பது 99 சதவீதம் நாம் சுவாசிக்கும் காற்றில் சாதாரணமாகவே இருக்கும். நுண் திட பொருள்களால் ஒவ்வாமை வரலாம். அதற்கு தடுப்பு முறைகளையோ, அல்லது தொடர் சிகிச்சையோ எடுத்துக்கொள்ள வேண்டும்.
அலர்ஜிக்கும், சாப்பிடுகிற பொருளுக்கும் குளிர்ந்த பொருளுக்கும் இருக்கிற தொடர்பு மிக மிக குறைவு. அதனால் குளிர்ந்த பொருள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால்தான் அலர்ஜி வருகிறது என்று நினைத்துக் கொண்டு எல்லா சாப்பாட்டு பொருள்களையும் பொதுவாக தவிர்ப்பது தேவையற்றது.
குழந்தைகள் குறட்டை விடுவது ஆபத்தானதா?
குழந்தைகள் குறட்டை விடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று அதிக உடல் பருமன் ( OBESITY). மற்றொன்று (ADINOID) சுரப்பி வீக்கம். குழந்தைகள் தொடர்ச்சியாக குறட்டை விடுவது (SIMPLE SNORING) கவனிக்கப்பட வேண்டியது.
அதிலும் குறட்டை திடுமென (APNOEA) நின்று தூக்கத்தில் இருந்து எழுந்து புரண்டுபடுத்து மீண்டும் மெதுவாக குறட்டை விட ஆரம்பித்தால் அது ஆபத்திற்கான அறிகுறி. அதற்காக மருத்துவ ஆலோசனை பெற்று உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.