சென்னை, மார்ச்.23- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் அவதூறு வார்த்தைகளால் பேசி இருந்தார்.
இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குநர் அண்ணாநகர் துணை காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் வழக்குரைஞர் சார்லஸ் அலெக்சாண்டர் புகார் செய்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த மார்ச் 6ஆம் தேதி தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மறு ஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில், சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும், கண்ணியத்துடன் பேசவேண்டும்.
ஆனால் அவருடைய பேச்சு அரசமைப்புச் சட்டவிரோத பேச்சாக உள்ளது. எனவே, இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவை ரத்துசெய்து அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
நீர் மேலாண்மை
தமிழ்நாடு அரசுக்கு 3 விருதுகள் – ஒன்றிய அரசு வழங்கியது
புதுடில்லி, மார்ச் 23- தமிழ்நாடு முழுவதும் நீர்ப்பாசன உள்கட்டமைப்பை நவீன மயமாக்குதல், நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு கடந்த 2017ஆம் ஆண்டு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3,249.12 கோடியில் 2,626 நீர்த்தேக்க நிலைகள், 347 அணைக்கட்டுகள், 4,981 கிலோ மீட்டர் நீள வினியோக வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் புனரமைக்கப்பட்டுள்ளது.
78 செயற்கைமுறை நீரேற்று கிணறுகள், 107 கிலோமீட்டர் நீள பாசன வாய்க்கால் கரை உள்ளிட்ட 1,17,290 ஹெக்டேர் பரப்பளவில் பாசனப் பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 34 மாவட்டங்களில் உள்ள 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நீர்வள மேலாண்மை மற்றும் வேளாண் உற்பத்தியில் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மைக்காக 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை விருதுக்கு தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பங்கேற்பு பாசன மேலாண்மை மற்றும் சிறந்த நீர்வள ஆதார திட்ட விருதும் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ளது.
டில்லியில் நடந்த விழாவில் இந்த 3 விருதுகளை தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குநரும், கூடுதல் தலைமை செயலாளருமான ஜவகர், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மன்மதன், நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் (மேல் காவிரி வடிநில வட்டம்) சிவக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை
மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, மார்ச் 23- அரசின் சொத்துகளை பணமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ், இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாா்பில் நிா்வகிக்கப்பட்டு வரும் புவனேசுவரம், வாரணாசி, அமிருதசரஸ், சென்னை, திருச்சி, மதுரை, இந்தூா், ராய்பூா், கோழிக்கோடு, கோவை, நாகபுரி, பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூா், விஜயவாடா, வதோத்ரா, போபால், திருப்பதி, ஹுப்பள்ளி, இம்பால், அகா்தலா, உதய்பூா், டேராடூன், ராஜமந்திரி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், அரசு-தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் குத்தகைக்கு விட ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு தொடா் எதிா்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், இதுதொடா்பான கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹோல் மாநிலங்களவையில் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூா் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிா்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு – தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா். தற்போது நாடு முழுவதும் 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.