தெரிந்து கொள்வீர் பார்ப்பனர்களை! பகவத் கீதையின் மொழி பெயர்ப்பாம் திருக்குறள்! சொல்லுகிறார் சங்கராச்சாரியார்

viduthalai
6 Min Read

அறிவியல் மொழியாக தமிழ் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தந்தை பெரியார் அக்கறையோடு சொன்ன ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் திசை திருப்பும் வகையில் திரிக்கும் திரிநூல் கூட்டம் உண்மையில் தமிழ் மீது பற்றோ, அக்கறையோ உடையதல்ல.

உலகம் போற்றும் திருக்குறளையே எவ்வளவுக் கொச்சைப்படுத்துகிறார்கள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள், பிறப்பின் அடிப்படையில் வருணம் பேசும் கீதையின் மொழிபெயர்ப்பு என்று ஒரு சங்கராச்சாரியார் சொல்கிறார் என்றால், அவர்களின் புத்தி எதைச் சேர்ந்தது?

பதிலடிப் பக்கம்

பார்ப்பனர்களின் இந்தப் போக்கைக் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகப் படம் பிடித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்டபோதிலும், தமிழ்மொழி மூலம் படித்து வந்தாலும் தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மெழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகும் சமஸ்கிருதத்தின் மீதுதான்”. (‘திராவிட நாடு’, 2.11.1947, பக்கம் 18).

– – – – –

தனிததமிழ் கேட்டால் மொழிவளம் குன்றும் என்பர்; தமிழ் இசை கேட்டால் சங்கீதக் கலை க்ஷீணமடையும் என்று கூறுவர்.

தமிழர் அதிகாரம் வேண்டும் என்று கேட்டால், ஆட்சியிலே திறமை குறையுமே என்று கூறுவர். தமிழருக்குச் சம உரிமை வேண்டும் என்று கேட்டால், பழங்காலப் பக்குவம் பாழாகுமே என்று பகருவர். தமிழனுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டால், பாரத மாதா பிரலாபிப்பாளே என்று பரப்புவர். இது அவர்களின் ஆரியர்களின் பழைய பல்லவி! இது இனி பலிக்காது”. (“தமிழரின் மறுமலர்ச்சி”, பக். 35).

என்று அறிஞர் அண்ணா கூறிய கருத்து பார்ப்பனர்களைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

பார்ப்பனர்களின் அன்றாடம் போக்கையும், செயல்பாட்டையும் கவனிப்பவர்களுக்கு இது கட்டாயம் தெரியாமல் போகாது.

ஊர் ஊராய்ச் சென்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை வலுப்படுத்தி வந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி மதுரைக்க்கும் சென்றார். தொழிலதிபர் சீதாராமனாம். அவருக்குக் கைங்கரிய சிரோமணி விருது வழங்கினார்.
அந்த விழாவில் பேசவும் செய்தார்.

என்னதான் பேசினார்?

பதிலடிப் பக்கம்

“நல்லவர்களை வாழ்த்தும் பழக்கம் வெகு காலமாக இருந்து வருகிறது. சீதாராமன் தமிழுக்கும் திருக்குறளுக்கும் சேவை செய்து வருகிறார். அவருக்கு இந்த விருது வழங்குவது பொருததமானது.

“திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும். வாழ்வின் வழி முறைகளும் குறிக்கோளும் அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். (‘தினத்தந்தி’, 15.4.2004)

பார்ப்பனர்களைத் தவிர அவர்களின் தலைவரான சங்கராச்சாரியார் தவிர வேறு யாரும் இவ்வாறு பேசி இருக்க மாட்டார்கள்.

பாம்பும் பழுதும் ஒன்று: ஓநாயும் மானும் ஒன்று; அமுதும் நஞ்சும் ஒன்று: பாலும் பாஷாணமும் ஒன்று என்று சொல்லுகிறவர்களைப் பொதுவாக என்ன சொல்லுவார்கள்? பைத்தியக்காரர்கள் என்பதைவிட விஷமக்காரர்கள் என்று தான் கருதுவார்கள்!

ஆனால் இவர் லோகக் குருவாயிற்றே! அப்படியெல்லாம் சொல்ல முடியாது தான்.

நான்கு வகை வருணத்தையும் நானே படைத்தேன் என்கிறார் கிருஷ்ணன்.

சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் – குணகர்ம விபாகா.

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தயகர்த்தார – மன்யம்
(‘கீதை’ அத்தியாயம் 4 சுலோகம் 31)
பிறப்பின் அடிப்படையில் வர்ணம் கூறி பேரம் வளர்க்கும் கீதை எங்கே?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் என்ற திருக்குறன் எங்கே? (குறள் 972)
பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் சமமானவையே!
என்கிறது குறள்.

கீதையும், திருக்குறளும் ஒன்றாக இருக்க முடியுமா?
இது இரண்டும் முரண்பாடான எதிர் நிலையில் உள்ளவையில்லையா?
இந்த நிலையில் கீதையின் தமிழாக்கமே திருக்குறள் என்று சொல்லுபவர் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் அல்ல!
பெண்களும், வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்
மாம்ஹி பார்த்த வ்யாச்ரித்ய
யேது ஸ்டி பாப யோணம
ஸத்ரியோ வைச்யாஸ்
– ததா சூத்ரான் தேறு
பியாந்தி பராஸ்கதிம்
(கீதை அத்யாயம் 9 சுலோகம் 32)

மனித குலத்தை மட்டரக மான புத்தியால் அபிஷேகம் செய்யும் இந்தக் கீதை எங்கே?
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (குறள் 53)

மனைவியானவள்: நற்பண்புடையவரானால் வாழ்க்கையில் ஒருவனுக்கு இல்லாதது எது என்று பெண்ணுக்குரிய உயர்ந்த இடத்தைத் தருகிறார் வள்ளுவர்.
அந்தப் பெண்ணைப் பார்த்து பாவ யோனியில் பிறந்தவள் என்று கூறுகிறது பகவத் கீதை.

தன் தாயும் ஒரு பெண் என்பதை மறந்த ஜெயேந்திரர் கீதையைத் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? தர்மம் என்ன?
கீதை மட்டுமல்ல – மனு தர்மமும் பெண்களை இழிவுபடுத்துகிறது – அதன் காரணமாகத்தான் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் ‘மடத்’ தலைவரான சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி, ‘சோ’ போன்ற பேர் வழிகளும் சரி, பெண்களைக் கேவலமாகவே கூறி வந்திருக்கிறார்கள். சங்கரமடத்துக்குச் சென்று ‘ஆசி’ பெறத் துடிக்கும் பெண்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.

விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டவர் ஜெயேந்திர சரஸ்வதி. வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன ‘உத்தமபுத்திரனும்’ (?) சாட்சாத் இவரே தான்.

இவர் கீதையைத் தூக்கி தலையில் வைத்து ஆடாமல் என்ன செய்வார்?

கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவது நல்லது என்றார் சங்பரிவார்க் கூட்டம் போற்றும் விவேகானந்தர்.

இந்த யோக்கியதையில் உள்ள பகவத் கீதையைப் பார்ப்பனர்கள் போற்றுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
திருக்குறள் இன்றைக்கு உலகமே போற்றும் நூலாகி விட்டது. பல மொழிகளிலும் மொழி பெயர்க்கவும் பட்டுள்ளது.

பொறுக்குமா பூதேவர்களுக்கு?

பொறாமைத் தீயில் வெந்து மடிகிறார்கள்.

இந்த ஜெயேந்திரரின் குரு என்று ஒருவர் இருந்தார். அவர் பெயர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பார்.
அவர் திருக்குறளுக்கு என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?

ஆண்டாளின் திருப்பாவைப் பாடல் ஒன்று:

நெய் உண்ணோம்;
பால் உண்ணோம்
நாட்காலை நீர் ஆடி
மையிட்டு எழுதோம்;
மலர் இட்டு தாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்று ஓதோம்;
அப்பமும் பிச்சையும்
ஆம்தனையும் காட்டி
உய்யுமாறு எண்ணி
உகந்தவோர் எம்பாவாய்!
– என்பது திருப்பாவையின் இரண்டாம் பாடலாகும்.
இப்பாடலில் வரும் ஒரு அடி,
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்று ஓதோம்
– என்பதாகும்.

இந்த தீக்குறளைச் சென்று ஓதோம் என்ற வரிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பார் என்ன பொருள் கூறினார்?
தீய திருக்குறனை ஓத மாட்டோம் என்று கூறினார்.
உண்மையில் அதன் பொருள் என்ன?

மதுரைத் தமிழ்ப் பேரகராதி என்ன கூறுகிறது?

குறளை – குள்ளம், கோட் சொல், குற்றம் என்று பொருளைக் கூறுகிறது.

தீக்குறளைச் சென்று ஓதோம் என்றால் தீமை விளைக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதுதான் உரிய பொருள் – உண்மைப் பொருள்.
ஆனால் ‘ஜெகத்குருவின்’ அறிவு என்ன சொல்லுகிறது? குறளை என்பதற்கு – திருக்குறளை என்று அர்த்தம் செய்யச் சொல்லுகிறது.
தமிழ் மீதும், குறள் மீதும் உள்ளத்தில் வழிந்தோடும் ‘ஆல கால விஷம்’ தானே வெளியில் வரும்.

எவ்வளவுக் காழ்ப்புணர்ச்சி இருந்தால், தமிழ்மீது எவ்வளவுத் தூரம் துவேஷம் இருந்தால் இப்படிப் பொருள் கூறி இருப்பார் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தமிழை நீசப் பாஷை என்று சொன்ன ‘பெரிய மனிதரும்’ இவர்தான். இவருடைய வாரிசு அல்லவா ஜெயேந்திரர்! இவர் புத்தி எப்படி இருக்கும்? அந்த வழியில்தான் பகவத் கீதையிலிருந்து திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்கிறார்.

புரிந்து கொள்ளுங்கள் பார்ப்பனர்களை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *