தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

viduthalai
7 Min Read

சென்னை, மார்ச் 23– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் ‘‘நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இன்னும் 25 ஆண்டு களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (22.3.2025) நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த

5.3.2025 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதி களைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங் களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களிலுள்ள முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், மேனாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடந்த 7.3.2025 அன்று கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்பது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்றும், கூட்டாட்சி கொள்கையை இது வெகுவாக பாதிக்கும் என்பதால், இப்பிரச்சினையின் அரச மைப்பு ரீதியான, சட்ட மற்றும் அரசியல் ரீதியான பரிமாணங்களை பாதிப்புக் குள்ளாகும் மாநிலங்கள் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதி நிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் உரிய தீர்வுகளை இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

கூட்டு நடவடிக்கைக் குழு

மேலும், தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களின் முறையான ஒப்புதலை அளிக்க வேண்டுமென்றும்; கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலக் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், மேனாள் முதலமைச்சர்களுக்கும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதோடு, மாநிலங்களின் பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்து, அதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக சென்னையில் நடைபெறும் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்றிடுமாறும் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விடுத்திருந்த அழைப்பினை ஏற்று, நேற்று (22.-3-.2025) சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
* வரலாற்று முக்கியத்துவம் மிக்கக் கூட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் நியாயமான மறுசீரமைப்பிற்காக 7–மாநிலங்கள், 14– கட்சிகள் அடங்கிய குழுவிற்கு தி.மு.க. தலைவர் தலைமை தாங்கினார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கருநாடகா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்கள் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்கவும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பு செயல்முறையைக் கோரியும் ஒன்றிணைந்துள்ளன.
நேற்று (22.3.2025) சென்னையில் நடைபெற்ற முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முக்கியமான நிகழ்வு –- – சமமான பிரதிநிதித்துவத்திற்கான போராட்டத்தில் மிக முக்கியத் தருணம் ஆகும்; நாடாளுமன்றத்தில் தங்களின் குரலை பலவீனப்படுத்தும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல மாநிலங்கள் ஒன்றுபட்டுள்ளன.

மார்ச் 5, 2025 அன்று தமிழ்நாட்டில் 58 அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க, பல மாநில முதலமைச்சர்களையும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்துள்ளார். இதன் மூலம் இந்த முக்கியமான பிரச்சி னையை குறித்து ஒன்றிய அளவில் ஒருமித்த கருத்தை தி.மு.க. தலைவர் உருவாக்கியுள்ளார்.

கலந்து கொண்டவர்கள்

இந்தக் கூட்டத்தில் ஆறு மாநிலங் களிலிருந்து 14 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநிலமுதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப்மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார்தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர்பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளகட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய்விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகரசோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்தியமஜ்லிஸ்–இ–இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின்இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசியகாங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரளா காங்கிரஸ்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ்ஆகியோர் உள்ளிட்ட மேனாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

விவாதம்

மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகர மாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில், ஏற்படுத் தும் பாதகத்தை கூட்டு நடவடிக்கைக் குழு விவாதித்தது. அனைத்து மாநிலங்களும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவேண்டும், நாட்டின் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்க வேண்டும்; வெளிப் படையான, சமத்துவமான அணுகு முறையைக் கைகொள்ள வேண்டும் என கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியது.

துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும்பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதிகனிமொழி அவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டியதீர்மானங்களை முன்மொழிந்தார்.
இந்த முக்கியமான அம்சங்களையும் விவாதங்களையும் கவனத்தில் கொண்டு, கூட்டு நடவடிக்கைக் குழு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியது.

தீர்மானங்கள்

மாநில அரசுகளின் அரசியல் மற்றும் சமூக, பொருளாதார, உரிமைகளை பேணிக்காப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் எடுத்து வருகிற இந்த மாபெரும் முயற்சிகளுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கூட்டு நடவடிக்கைக் குழு 7 மாநில முதலமைச்சர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கொண்ட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் – ஏகமனதாக இன்றைய கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவெடுத்த தீர்மானங்கள் வருமாறு:
எந்தவொரு நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தெளிவுடனும் – எல்லா மாநிலங்களின் அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு 1971–ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதால் நாடாளுமன்றத்தில் இப்போது 543 இடங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் 25 ஆண்டுகளுக்கு அதே நிலையில் இருக்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
அரசியல் சாசனத் திருத்தம் 42, 84, 87 ஆகிய சட்டத் திருத்தங்களின் படி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நன்றாகச் செயல்படும் மாநிலங்களை ஊக்கப்படுத்தவும் அந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இருக்குமென்று சொல்லப்பட்டிருந்தது.
தேசிய அளவில் கொள்கையான மக்கள் தொகை சீராக இருக்கும் நிலை இன்னும் எட்டப்படாததால் தற்பொழுதுள்ள நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கை, 1971 – மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இன்னும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டுமென்றுஇக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பிரதிநிதித்துவம்
ஒரு போதும் குறையக்கூடாது!

நன்றாக மக்கள் தொகையைக் கட்டுப் படுத்திய மாநிலங்களுக்கு அவர்களின் பிரதிநிதித்துவம் ஒரு போதும் குறையக் கூடாது. இதற்கான வேண்டிய அரசிய லமைப்புச் சட்டத்திருத்தங்கள் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய முக்கியக் குழு (Core Committee) மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எப்படி அணுக வேண்டுமென்ற யுக்திகளை ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
இந்த முக்கிய குழு (Core Committee) பிரதமர் அவர்களுக்கு ஒரு முக்கியக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை இந்தக் கூட்டத்திலேயே அளிப்பார்கள்.

மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் கொண்டுவர முடிவு!

இன்று கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட மாநிலங்கள் அவர்களது சட்டமன்றங்களில் தொகுதி மறு சீரமைப்புப் பிரச்சினை குறித்து தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இந்தக்கூட்டு நடவடிக்கைக்குழு நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பு பற்றிய எல்லா தகவல்களையும் ஒன்று சேர்த்து மக்களிடம் இதை எடுத்துச் செல்வார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *