நல்லாட்சி தரும் ‘திராவிட மாடலு’க்கு எதிராக நயவஞ்சகர் நடத்தும் சதி நாடகம் பாரீர்!

viduthalai
9 Min Read

தமிழ் வேள்வி’
தி. செந்தில்வேல்
ஊடகவியலாளர்

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதன் மக்கள் நலத்திட்டங்களால் மக்களின் மனங்களை வெல்லும்போதெல்லாம் திமுக விற்கு எதிராக மக்கள் மனங்களில் நஞ்சை விதைக்கும் விதமாக ஆரியம் பல்வேறு சதிகளைச் செய்து வந்திருக்கிறது.
3 ஆவது முறையாக இமாலய வெற்றியைப் பெறலாம் என்று நம்பிக் கொண்டிருந்த நரேந்திர மோடிக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அதன் விளைவு ஒன்றியத்தில் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு பாஜக இன்று தள்ளப்பட்டுள்ளது. சந்திரபாபு அவர்களும், நிதிஷ்குமார் அவர்களும் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறும் சூழல் ஏற்பட்டால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்பதுதான் தற்போதைய சூழல். இப்படியான ஒரு சூழலை உருவாக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பழிவாங்க திட்டமிட்டுள்ளது ஆரிய பாசிச பாஜக.
அதுவும் இன்னும் ஓராண்டில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில், மீண்டும் திமுக இமாலய வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி வரும் நிலையில், பாஜக தன் சதியை வேகப்படுத்தத் தொடங்கியுள்ளது.

பாஜகவிற்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிட முடியாது. அதனால்தான் 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தற்போது வரை தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார் தி.மு.க. தலைவர். வரும் 2026 சட்டபேரவை தேர்தலிலும் 200 தொகுதிகளை தி.மு.க. தலைவர் தலைமையில் நாம் வெல்லப்போவது உறுதி . 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நல்லாட்சியை தமிழ்நாடு ஒருபோதும் இழக்க விரும்பாது.

அதன் ஒரு பகுதிதான் டாஸ்மாக் நிறுவனத்தை மய்யப்படுத்தி பாஜக கட்டி எழுப்பியுள்ள ஊழல் திரைக்கதை. இதில் உண்மையிலேயே நடப்பது என்ன என்பதை தி.மு.க. உடன்பிறப்புகள் அறிந்து கொள்வதோடு அதை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லி பாசிச பாஜக வின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டிய மாபெரும் கடமையும் நமக்கிருக்கிறது.

பாஜக வின் பாசிச சதி வலையை விவரிப்பதே இந்த கட்டுரை.

கடந்த 6ஆம் தேதி (06-03-2025 ) அன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக வினர் அவர்களின் சமூகவலைத்தள அடிவருடிகளின் மூலம் இதில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக செய்தியை கசிய விட்டனர். தொடர்ந்து தமிழக ஊடகங்களுக்கு இது குறித்து ஏன் விவாதிக்கவில்லை என்று சமூக வலைதளங்களின் மூலமும் இன்னபிற வழிகளிலும் அழுத்தம் கொடுத்தது பாஜக . அடுத்த ஓரிரு நாட்களில் ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் என்ற புது கதையை ஒரே மாதிரி எல்லோரையும் சொல்ல வைத்தது. கடந்த 17 ஆம் தேதி பாஜக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. இதன் உண்மைப் பின்னணியை அறிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

ஆம் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கும் சேர்த்து தற்போது திமுக வின் மீது சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கிறது பாஜக. டாஸ்மாக் சில்லறை விற்பனை மய்யங்களில் ஏதும் முறைகேடுகள் நடக்கிறதா என மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்துவது வாடிக்கை. அவ்வாறு மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தியதன் அடிப்படையில் மொத்தம் 41 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த 41 வழக்குகளில் 34 வழக்குகள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் சோதனை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள். 2021இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு அமைந்த பிறகு மாநில லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் டாஸ்மாக் மய்யங்களில் நடத்திய சோதனைகளின் அடிப்படையில் 7 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகளின் அடிப்படையில்தான் ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறை தற்போது டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
இதில் நமக்கு எழக்கூடிய சில அடிப்படையிலான கேள்விகள்.

1. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட 34 வழக்குகளையும் சேர்த்து தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது ஏன் ?

2. அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்களோடு கூட்டணியில் இருந்த பாஜக அப்போது ஏன் இந்த சோதனையை நடத்தவில்லை.?
இந்த இரண்டு கேள்விகள் போதும் பாஜக வின் பொய் முகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கு.

திட்டமிட்டே பாஜக இந்த சதி வேலையைச் செய்வது புலனாகிறது. பாஜக ஏன் இந்த சதி வேலையைச் செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதும் மிக மிக அவசியம். பாஜக உடன் மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் அரசியல் ரீதியிலான சண்டையை மட்டுமே செய்து வரும் நிலையில் பாஜக உடன் சித்தாந்த மோதலையும் செய்து வரும் ஒரே தலைவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மண்ணைப் போட்டு மூடிய கீழடியை மீண்டும் அகழாய்வு செய்ததோடு நில்லாமல் தமிழர் நாகரீகமே தொன்மையானது என்பதை நிறுவும் வண்ணம் கீழடியில் ஒரு அருங்காட்சியகத்தைத் திறந்தார் நம் முதலமைச்சர்.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட நெல் மணியை நவீன கரிம ஆய்வுக்கு உட்படுத்தி அதன் ஆயுட்காலம் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை சட்டப்பேரவையில் உரக்கச்சொல்லி மகிழ்ந்தார். ஆரியர்கள்தான் இரும்பை பயன்படுத்தும் அறிவைப் பெற்றிருந்தனர் என்ற புனைவை உடைத்து இரும்பின் காலம் தமிழ் நாட்டில் இருந்துதான் தொடங்கியது என்பதை தரவுகளுடன் நிறுவி ஆரியத்தின் ஆணி வேரை அசைத்தார்.

சிந்துச் சமவெளி நாகரீகமும் தமிழர் நாகரீகமே என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் பதிவு செய்தார். இப்படி தொடர்ந்து ஆரிய வேத நாகரீகத்தைப் பற்றிய புனைச் சுருட்டுகளை உடைத்து தமிழர் நாகரீகத்தை உயர்த்திப் பிடித்து வரும் நம் முதலமைச்சரை ஆரியம் வீழ்த்த நினைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதனால்தான் சிந்துச் சமவெளி நாகரீகமும் தமிழர் நாகரீகமே என்று நாம் சொல்லத் தொடங்கியதும், ஆளுநர் ஆர்.என்.ரவி. சிந்துச் சமவெளி நாகரீகம் என்று சொல்லக் கூடாது சிந்து சரஸ்வதி நாகரீகம் எனச் சொல்ல வேண்டும் என்று சொன்னது இந்த சித்தாந்த மோதலின் வெளிப்பாடே.
மற்ற மாநிலங்கள் எல்லாம் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நிலையில், நம் முதலமைச்சர் அதை தீரத்துடன் எதிர்க்கிறார். மற்ற மாநிலங்கள் அமலாக்கத்துறையைக் கண்டு அஞ்சிக் கொண்டிருந்த போது, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே மாநில லஞ்ச ஒழிப்பு காவல் துறையை வைத்து சோதனை நடத்தினார்.

பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியைக் குறித்தும் மாநில உரிமைகள் குறித்தும் ஆளுமையுடன் கேள்வி எழுப்பினார். வரியை மட்டும் பெற்றுக்கொண்டு நிதியை தர மறுத்தால் , தமிழ்நாடு, ஒன்றிய அரசிற்கு வரி தர மறுக்கும் நிலை உருவாகும் என்று எச்சரித்தார்.
அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்து வார்த்தைகளைத் தவிர்த்த போது. சட்டப் பேரவை விதிகளின் படி ஆளுநருக்கு வகுப்பெடுத்தார்.

ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்போம் எனும் அண்ணாவின் கொள்கையில் உறுதிபட நிற்கிறார். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது ரூபாயைக் குறிக்கும் வண்ணம் அதுவரை இடம்பெற்றிருந்த தேவநஹரி எழுத்திற்கு மாற்றாக ‘ரூ’ – வை பயன்படுத்தி பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

தமிழ்நாட்டோடு நின்றாலும் பரவாயில்லை, தொகுதி மறுவரையறை குறித்து பாஜக சிந்திக்கத் தொடங்கி யதும், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.

திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு போய் என்ன செய்யப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடிய நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் மோடியை, அமித்ஷாவை, நிர்மலா சீதாராமனை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்க அவர்கள் அவையை விட்டு அஞ்சி ஓடும் நிலையை உருவாக்கினார்.

நல்லாட்சி திட்டங்களால் மட்டுமல்ல சித்தாந்தப் போரிலும் பாஜக வை ஓட ஓட விரட்டுவதால் தி.மு.க. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தத் துடிக்கிறது பாஜக.
ஊழல்வாதிகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்து அவர்களை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி தங்கள் கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ இணைத்து முதலமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராகவோ மாற்றுவதுதான் பாஜக வின் வாடிக்கை.

அந்த வகையில் ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல் குற்றச்சாட்டை அஜித் பவாரின் மீது சொன்ன பாஜக அவர் பாஜக கூட்டணியில் இணைந்ததும் அந்த வழக்கை நிறுத்தி வைத்ததோடு அவரை மகராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக்கியுள்ளது.

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில், பாஜக வால் குற்றம் சாட்டப்பட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா பாஜக வில் இணைந்ததும் அவரை அசாம் மாநில முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்தது பாஜக.

அரசியல்வாதிகளை மட்டுமல்ல ஏழை, எளிய மக்களையும் அமலாக்கத்துறையை வைத்து கூச்சமின்றி மிரட்டுகிறது பாஜக. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் , கிருஷ்ணன் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு அவர்களின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு நோட்டிஸ் அனுப்பி மிரட்டிய பெருமை பாஜகவை மட்டுமே சேரும்.

லோக்பால் அமைத்தே தீருவோம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக தற்போது வரை லோக்பாலை அமைக்கவும் இல்லை அதற்காக போராடிய அன்னா ஹசாரேக்களையும் காணவில்லை.

சிஏஜி அறிக்கையை வைத்து திமுக வின் மீது 2 ஜி ஊழல் குற்றச்சாட்டை அபாண்டமாக சுமத்தியது பாஜக. ஆனால், சட்டத்தின் துணை கொண்டு அந்த சதியை முறியடித்தது திமுக. தற்போது அதே சிஏஜி பாஜக வின் மீது ஏழரை லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி யுள்ளது. இது குறித்து பாஜக விடம் எந்த பதிலும் இல்லை.

உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்திற்காக அமெரிக்க மதுபானத்திற்கு 150 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக வரியைக் குறைத்ததைத் தவிர கடந்த 11 ஆண்டுகளில் எந்த விலைவாசியையும் குறைக்கவில்லை.

இவை குறித்தெல்லாம் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும், அதை திசை மாற்ற, பாசிச பாஜக அரசின் தோல்விகளை மடைமாற்ற வழக்கம் போல் திமுக வின் மீது ஊழல் சேற்றை வாரி இறைத்து தன் வஞ்சக சதியை தொடங்கியுள்ளது பாஜக. இன்னும் ஓராண்டில் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக தன் சதி வேலைகளை இன்னும் வேகப்படுத்தக் கூடும்.

பாஜகவிற்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிட முடியாது. அதனால்தான் 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தற்போது வரை தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார் தி.மு.க. தலைவர். வரும் 2026 சட்டபேரவை தேர்தலிலும் 200 தொகுதிகளை தி.மு.க. தலைவர் தலைமையில் நாம் வெல்லப்போவது உறுதி.

10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நல்லாட்சியை தமிழ் நாடு ஒருபோதும் இழக்க விரும்பாது.

ஆயினும் தி.மு.க. தோழர்கள், ஜனநாயக சக்திகள், புத்தி ஜீவிகள், பாஜக வின் இந்த சதி வேலைகளை மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வோம்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
பாசிசம் வீழட்டும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.

நன்றி: ‘முரசொலி’ 20.3.2025 பக்கம் 3)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *