மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை : 18 பேர் உயிரிழப்பு

Viduthalai
3 Min Read

அரசியல்

கொல்கத்தா, ஜூலை 9  மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (8.7.2023)  நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். 

மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள் ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, ஊரகப் பகுதிகளில் 73,887 இடங்களில் வாக்குப்பதிவு நடந் தது. 22 மாவட்டங்களில் 928 உறுப் பினர்கள், 9,730 பஞ்சாயத்து சமிதிகள், 63,229 கிராம ஊராட்சி உறுப்பினர் களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில், 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 2018-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியின்றி வென்றது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த உள் ளாட்சித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உள் ளாட்சி நிர்வாகத்தைக் கைப்பற்ற ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இந்திய மதச் சார்பற்ற முன்னணி (அய்எஸ்எஃப்) ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலையொட்டி 65,000 ஒன்றிய பாதுகாப்புப் படை வீரர்களும், மாநில காவலர்கள் 70 ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், வாக்குப் பதிவு தொடங்கியது முதல், மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் வன்முறைச் சம்பவங்கள் நடந் தன. பிர்பும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறை யாடப்பட்டு, வாக்குப் பெட்டிகளும் சேதப்படுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன் றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசியதில் 62 வயது முதியவர் உயிரி ழந்தார். முர்சிதாபாத் வாக்குச் சாவடி யில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் ஏற் பட்டதால், வாக்குப் பதிவு நிறுத்தப் பட்டது. சிந்த்ராணியில் உள்ள வாக்குச் சாவடியில், வாக்குப் பெட்டிக்குள் சிலர் தண்ணீரை ஊற்றினர். மால்டா மாவட்டம் இங்கிலிஷ் பஜார் பகுதியில் உள்ள இரு வாக்குச் சாவடிகள் மீது கற்கள் வீசப்பட்டன. 

வன்முறை காரணமாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 6 பேர், பாஜக, கம் யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் அய்எஸ்எஃப் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த மற்றொரு நபர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உயிரி ழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்தனர். மாநில ஆளுநர் அனந்த போஸ், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு, காயமடைந்தவர்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்துப் பேசினார். குண்டு வீச்சில் காயமடைந்து முர்சிதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த மாதம் 8ஆ-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பல இடங்களில் வன்முறைச் சம்ப வங்கள் நேரிட்டன. இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 17 பேர் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் பிரச்சாரத்தை முதலமைச்சர் மம்தா   கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக்  வழி நடத்தினர். தேர்தல் வன்முறை, பிரச்சி னைகள் மற்றும் மக்கள் புகார் களுக்கு தீர்வுகாண ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக ‘அமைதி இல்லம்’ திறக்கப் பட்டிருந்தது. வன் முறை காரணமாக நேற்று பிற்பகல் ஒரு மணி வரை 36.66 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 

குடியரசுத் தலைவர் ஆட்சி 

வன்முறை குறித்து மேற்கு வங்க எதிர்க் கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் காட் டாட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் மம்தா   அவரது நெருங்கிய உறவினர் ஆகியோர், மாநில காவல்துறையுடன் இணைந்து நடத்தும் செயல்களால் மேற்கு வங்கம் கலவர பூமியாக மாறியுள்ளது. எனவே, இங்கு குடியரசுத் தலை வர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 355-ஆவது சட்டப் பிரிவை அமல்படுத்துவது முக்கியம். மேற்கு வங்கத்துக்கு அழைத்து வரப்பட்ட ஒன்றிய காவல் படைகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

உண்மையில் இது தேர்தல் அல்ல, கொள்ளை. திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள், மாநில காவல்துறையினருடன்  இணைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளதால், இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *