சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.1,087.33 கோடிக்கு நிர்வாக ஒப்புதலுடன், வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அடிப்படை வசதி
சட்டப்பேரவையில் மார்ச் 14-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட நிதி நிலை அறிக்கை அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெறும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நோக்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-இன் கீழ், வரும் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022 முதல் 2025-2026 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 2025-2026-ஆம் ஆண்டில் 2,338 கிராம ஊராட்சிகளில் ரூ.1,091.38 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் அனுப்பிய கடிதத்தில், முந்தைய ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 கிராமங்கள், புதுக்கோட்டை, நாமக்கல்லில் தலா ஒரு கிராமம் என 9 கிராமங்கள் தவிர்த்து 2,329 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,087.33 கோடி ஒதுக்கும்படி கோரினார். இதை ஏற்ற தமிழ்நாடு அரசு, நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
குழு முடிவு செய்யும்
கடந்த 4 ஆண்டுகளில் திட்டத்தின்கீழ் பெற்ற அனுபவம் அடிப்படையில் குளங்கள், ஊரணிகள் புனரமைப்பு, பொது பயன்பாட்டுக் கட்டடங்கள், சமத்துவ சுடுகாடு, இடுகாடுகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள், தெருக்கள், வீதிகள் மேம்பாடு, தெருவிளக்குகள், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகள் ஆகிய 6 பிரிவுகளுக்கு இடையில் ஒதுக்கீட்டை வட்டார அளவில், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும்.
இந்த ஒதுக்கீட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.