சென்னை, மார்ச் 21- சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது குறுக்கிட்டு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2.63 இலட்சம் கோடி வந்திருந்தால் நம் கடன் சுமை குறைந்திருக்கும் என்று புள்ளி விவரங்களுடன் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் பேச்சுக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்று உறுப்பினர் அவர்கள் சொல்லிக்கொண்டு வந்தார்கள். ஒன்றிய வரிகளால், நம்முடைய மாநில அரசுக்கு, அவர்கள் சொன்ன பகிர்வில் எவ்வளவு நிதி வருகிறது என்று சொன்னார்கள். நிதிப் பகிர்வைப் பொறுத்தவரை, அடுத்தடுத்து வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு நிதிக் குழுவும் தொடர்ந்து நமக்கான பங்களிப்பைக் குறைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. ஒன்பதாவது நிதிக் குழுவில் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பகிர்வு விகிதம் 7 சதவிகிதமாக இருந்தது என்று சொன்னால், தற்போது பதினைந்தாவது நிதிக்குழுவில் நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய சதவிகிதம் என்பது வெறும் 4.079 சதவிகிதமாக உள்ளது. அது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பகிர்வில் நமக்கு வர வேண்டிய தொகையில், அதாவது நமக்கு சட்டபூர்வமாக எவ்வளவு வரவேண்டுமோ அது குறைக்கப்பட்டிருக்கக்கூடிய காரணத்தால், நமது கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ள காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2.63 இலட்சம் கோடி ரூபாய் இதுவரை நமக்கு வராமல் நிதியிழப்பு ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய மாநில அரசு வாங்கக்கூடிய கடன்தொகையில் இந்தத் தொகை மட்டும் சுமார் 32 சதவிகிதமாகும். அதாவது, 2.63 இலட்சம் கோடி ரூபாய். நிதிக்குழு நமக்கு இதனைக் கொடுத்திருந்தால், பகிர்வு, நமக்கு கடன் அதிகமாக வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. நீங்கள் அங்கேயே அதனைத் தரவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் 6.1 சதவிகிதத்தைக் கொண்டி ருக்கக்கூடிய தமிழ்நாட்டுக்கு 4.07 சதவிகிதம் மட்டுமே கொடுக்கிறீர்கள்.
நிதிப் பங்கீட்டினைக் குறைவாகப் பெறக்கூடிய மாநிலங்களில், நாம் மூன்றாவது இடத்தில், மிகக் குறைவான இடத்தில் இருக்கிறோம். நீங்கள் ஒன்றிய அரசிடமிருந்து வரக்கூடிய நிதிப் பகிர்வையும் குறைக்கிறீர்கள்; இன்னொரு பக்கம், நம்முடைய ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களில் மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய ஒன்றிய அரசின் பங்களிப்பையும் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகிறீர்கள்.
உதாரணத்திற்கு, 2015–2016 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டிபி-இல் 1.6 சதவிகிதமாக இருந்த ஒன்றிய அரசின் உதவி மானியங்கள், 2024–2025 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் 0.66 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இவ்வாறு நிதியைக் குறைத்துக் கொடுத்த ஒரே காரணத்தால், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு வரக்கூடிய இனங்களில் நீங்கள் குறைத்திருப்பதன் காரணமாக, 2015–2016 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைநமது மாநிலத்திற்கான நிதி இழப்பு மட்டும் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய்.
அதுபோலவே, நான் ஏற்கெனவே சொன்னதுபோல, சம்கிர சிக்ஸா அபியான் திட்டத்தில் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3,796 கோடி ரூபாய் கொடுக்கவில்லை. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ஏறத்தாழ மூவாயிரம் கோடி ரூபாயை இன்றுவரை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருக்கிறது. அந்தத் திட்டத்தைத் தொடர்ச்சியாக செயல்படுத்துவதற்கு மாநில அரசு தற்போது தனது சொந்த நிதியை அளித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, உங்களுடைய நிதியை, அதாவது, எந்தெந்தத் திட்டங்களுக் கெல்லாம் உங்களுடைய நிதி அளிக்கப்பட்டு வருகிறதோ, அந்தந்தத் திட்டங்களுக்கான உங்களுடைய நிதியையெல்லாம் நீங்கள் மாநில அரசுகள்மீது தொடர்ச்சியாக சுமத்திக் கொண்டே வருகிறீர்கள்.
ஒன்றிய அரசின்
பங்களிப்பு குறைவு!
பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம், PMAY–G கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய rural housing scheme என எல்லா திட்டங்களிலும் உங்களுடைய பங்களிப்பை நீங்கள் குறைத்துக்கொண்டே வருகிறீர்கள். என்னிடத்தில் நிறைய புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நீங்கள் கொடுத்து வரும் நிதியைக் குறைத்துக்கொண்டே வருகிறீர்கள் என்பதை நான் உங்க ளுக்கு எடுத்துக்காட்டுகளுடன் கூற விரும்புகிறேன். 2021–-2022 ஆம் ஆண்டு உங்களுடைய பங்களிப்பு 46 சதவிகிதம்; மாநில அரசின் பங்களிப்பு 54 சதவிகித மாக இருந்தது. 2022–-2023 ஆம் ஆண்டு உங்களுடைய பங்களிப்பை 44 சத விகிதமாகக் குறைத்தீர்கள்; மாநில அரசின் பங்களிப்பை 56 சதவிகிதமாக உயர்த்தினீர்கள். 2023–-2024 ஆம் ஆண்டு உங்களுடைய பங்களிப்பை 41 சதவிகிதமாகக் குறைத்தீர்கள்; மாநில அரசின் பங்களிப்பு 59 சதவிகிதமாக உயர்த்தினீர்கள். தற்போது, நீங்கள் Budget Estimate–-இல், உங்களுடைய பங்களிப்பை 43 சதவிகிதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு 57 சதவிகிதமாகவும் உள்ளது. உங்களுடைய பங்களிப்பு தொடர்ச்சியாகக் குறைந்துவருவதை இந்தபுள்ளிவிவரம் காட்டுகிறது.
அதேபோன்று, ஒன்றிய அரசின் மானியங்கள் குறித்து பார்த்தீர்க ளென்றால், தமிழ்நாட்டிற்கு Cess and surcharges-அய் பொறுத்தவரையில், உங்களுக்கே தெரியும், ஒரு பக்கம் GST right, Cess and surcharges வாங்குகிறீர்கள். அதில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்திற்குமேல் எடுத்துக்கொள்கிறீர்கள. தற்போது தமிழ்நாட்டிற்கு 23,834 கோடி ரூபாய் கொடுக்கிறீர்கள். SSA funds நீங்கள் கொடுப்பது என்று நாங்கள் எடுத்துக்கொண்டாலும்கூட, 23,834 கோடி ரூபாய் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், உத்தரப்பிரதேசத்திற்கு 87,915 கோடி ரூபாயும், பீகாருக்கு 54,525 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அவர்களே, கடந்த ஜூன் மாதம், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ஒன்றிய அரசுஏறத்தாழ 3 இலட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதேபோன்று, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் அவர்கள், நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்தைப் பற்றி 6 முறை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் என்பதையும், தமிழ்நாட்டின் பெயரை ஒருமுறைகூட அவர் குறிப்பிட்டுப் பேசவில்லை என்பதையும் நான் உங்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இப்படி நான் தொடர்ச்சியாக சொல்லி க்கொண்டே போகலாம்.
ரயில்வே நிதிநிலை அறிக்கையை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டிற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 19,068 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு ஒரேயொரு ஆண்டில் எவ்வளவு ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள் தெரியுமா? 19,858 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள், ரயில்வே திட்டங்களுக்காக, மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்குக் கொடுத்திருப்பது 19,068 கோடி ரூபாய் என்றால், உத்தரப்பிரதேசத்திற்கு ஒரே ஆண்டில் மட்டும் 19,858 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறீர்கள்.
உறவுக்கு கை கொடுப்போம்!
உரிமைக்கு குரல் கொடுப்போம்!
தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்திற்கு, தமிழ்நாட்டிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு 22,460 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், உத்தரப்பிரதேசத்திற்கு 2023–2024 ஆம் ஆண்டில் மட்டும் 28,114 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. 80 சதவீதத்தை ஒரே சமயத்தில் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். நிறைய விவரங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. எனவே, நிறைய திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது. நாங்கள் அதுகுறித்து கேட்டால், நீங்கள் இணக்கமாக இல்லை என்று சொல்கிறீர்கள். எங்களுடையகொள்கையே, உறவுக்குக் கை கொடுப்போம்; ஆனால், உரிமைக்கு நிச்சயமாகக் குரல் கொடுப்போம் என்பதாகும். (மேசையைத் தட்டும் ஒலி) எங்களுடைய உரிமையையும், எங்களுடைய மொழி உரிமையையும், எங்களுடைய மொழிக் கொள்கையையும் விட்டுக்கொடுத்து விட்டுத்தான், சமரசம் செய்து கொண்டுதான் இந்தத் தொகையை நாங்கள் பெற வேண்டுமென்றால், முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் இருக்கின்ற இந்த அரசு அதற்கு ஒருபோதும் தயாராக இருக்காது. இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விபரங்களுடன் பதிலளித்தார்.