பழனி முருகன் கோயிலில்
உயிரிழந்த பக்தர்
பழனி, மார்ச் 20 பழனி முருகன் கோவிலில் வழிபாட்டிற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர். அப்போது, செல்வமணி என்பவர் வழிபாட்டிற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். பிறகு, செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாட்டிற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ராமேஸ்வரம், மார்ச் 20 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 18.3.2025 அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றதாம். இதைக் காண ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியைச் சேர்ந்த ராஜ்தாஸ் (59) என்பவர் ரூ.50 கட்டணம் செலுத்தி வரிசையில் நின்றார்.
அம்பாள் நுழைவு மண்டபம் பகுதியில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவரை கோயில் ஊழியர்கள் மீட்டு, கோயிலில் உள்ள முதலுதவி மய்யத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ராஜ்தாஸ் உயிரிழந்தது தெரிய வந்தது. தனிப்பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்ததில், தனியாக வந்த ராஜ்தாஸ் திருச்செந்தூரில் வழிபாடு செய்துவிட்டு ராமேஸ்வரம் வந்தது தெரிய வந்தது.