தந்தை பெரியார் பெயரைக் கேட்டாலே எதிரிகளின் குலை நடுங்குகிறதே!

Viduthalai
3 Min Read

‘உன் இனத்தில் யார் பெயரைச் சொன்னால் எதிரியின் குலை நடுங்குகிறதோ, அவரே உன் தலைவன் ‘ என்றார் போராளி சேகுவேரா. இந்த கூற்று யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அறிவுஆசான் தந்தை பெரியார் அவர்களுக்கு உறுதியாக பொருந்தும்.
இந்த சிந்தனை வரிகளை மெய்யாக்கிய நிகழ்வு, ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களையே சாரும்.
தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர், அவரை வழிபடுகிறார்கள் என்று, அய்யா பெரியார் அவர்களை பற்றி அவதூறாக ஏசியுள்ளார். மக்களவையில்.

ஒரு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து ‘அறிவு இருக்கா’, ‘காட்டுமிராண்டிகளா நீங்கள் ‘என்று மாணவர்களை பார்த்து திட்டினால் , அது மாணவர்களுக்கான எதிர்வினை சொல் அல்ல .
மாணவர்களின் மதி நுட்பத்தை மேலும் பெருக்குவதற்கு தானே தவிர, மாணவர்கள் வாழ்வில் ஒழிந்து போக அல்ல.
அது போன்று தான் , தந்தை பெரியார் அவர்கள் எங்கள் இனத்தின் ஆசிரியர்,
இனத்தின் மக்கள் மான உணர்ச்சி பெறுவதற்காக , காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்.
தந்தை பெரியார் அவர்கள் அப்படி இடித்துரைத்ததால் தான் தமிழன் எழுச்சி பெற்றான்.
சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது, ஒரு சிறுவன் ஓடி வருகிறான் , வரும் பொழுது கல் தடுக்கி கீழே விழுகிறான், அப்போது அங்கு உள்ள பெரியவர் அந்த சிறுவனை தூக்கி விடாமல் , கீழே விழுந்த அந்த சிறுவனை பார்த்து எழுந்து வேகமாக ஓடி வா என்றார்.
சிறுவனோ கீழே விழுந்தது கூட தெரியாமல் வேகமாக ஓடி வந்தான்.

சிறுவன் விழுந்தது தெரியாமல் எழுந்து ஓடிவந்தான் என்பதற்கு அந்த பெரியவர் தந்த ஊக்கம் என்ற முயற்சி தான் காரணம்.
இப்படி இந்த பெரியவர் போன்று தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் ஊக்கம் என்ற பயிற்சியை தந்தார். இந்த இனத்தின் மக்களை கடிந்து கொண்டார்.தம் இன மக்கள் எழுச்சி பெறுவதற்காக இந்த சொற்களை பயன்படுத்தினார்.
சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும், கல்வியை கொடுக்காதே என்று சொன்னது இந்து மதம். சூத்திர இனம் கல்வியறிவு பெறக் கூடாது என்பது தான் பார்ப்பனர்கள் செய்த நரித்தந்திரம். அந்தவகையில் தான் தமிழ் நாட்டில் மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவை என்று இருந்ததை நீதிக்கட்சி ஆட்சி தான் ஒழித்து வரலாறு படைத்தது.
முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில் தான். இப்படி சமூக நீதிக்காகவும், பெண் இனத்திற்காகவும் சாதனைகள் படைத்தது திராவிட இயக்கம்.
சூத்திர இனத்தில் பிறந்து அந்த கொடுமைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு தான் தெரியும், தந்தை பெரியார் அவர்களின் தொண்டுகளை பற்றி, அவரின் செயல்களை பற்றி.

பார்ப்பன இனத்தை சார்ந்த, ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களுக்கு , தந்தை பெரியார் அவர்களின் பெயரை சொல்ல கூச்சமாகத் தான் இருக்கும்.
ஆனால் சூத்திர இனத்தை சார்ந்த, வரலாற்றில் உச்சம் தொட்டவர்கள் எவரும் தந்தை பெரியார் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் இருந்தது இல்லை.அது ஒன்றே போதும் அய்யா அவர்களின் பெருமைக்கு சான்று.
தந்தை பெரியார் அவர்களை வழிபடுகிறார்கள்’’ – என்று ஒன்றிய அமைச்சர் திராவிட இயக்கத்தை பற்றி கூறியுள்ளார்.
தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்கு வழி காட்டி தானே தவிர வழிபாடு செய்வதற்கு அல்ல.
தந்தை பெரியார் அவர்களின் பெயரை ஒன்றிய அமைச்சர் அவர்கள் உச்சரிக்க வில்லை என்று சொல்வதற்கு பதிலாக, தந்தை பெரியார் அவர்களின் பெயரை சொல்ல அச்சம் கொண்டு உள்ளார் என்பதே மெய்.
தந்தை பெரியார் அவர்களும், அவரின் கொள்கை களும், அவரின் கொள்கை வாரிசுகளும், எதிரிகளுக்கு என்றும் அச்சம் தரும் வகையில் சிம்ம சொப்பனமாகத் தான் திகழ்வார்கள்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இம்மண்ணில் தந்தை பெரியார் என்ற ஆணி வேர் உறுதியாகத் தான் இருக்கும்.அதை அகற்ற எவராலும் முடியாது.தந்தை பெரியார் அவர்கள் விதைத்த விதை இன்று பயிர் விட்டு வளர்ந்து செழித்துள்ளது.
பயிர்கள் இடையே உள்ள களையை அகற்றுவது தான் தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்கு தந்த பணி.
தந்தை பெரியார் அவர்கள்
என்றும் எங்களுக்கு உரியார்
அறியா உங்களுக்கு புரிதல்
என்பதே எங்கள் பெரியார்
தேவை என்றும் பெரியார்
சேவை வென்றும் பெரியார்.

மு.சு.அன்புமணி,

மதுரை–625020

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *