உத்தமர் காந்தி – பெருந்தலைவர் காமராசர் – துஷார் காந்தி வரை தொடரும் தாக்குதல்களும் வெறிச்செயல்களும்

Viduthalai
4 Min Read

பேராசிரியர் மு.நாகநாதன்

கேரள மாநிலத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் புரட்சித் துறவி நாராயண குருவும் – உத்தமர் காந்தியும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் ஒரு விழா நடந்தது.
இந்த நிகழ்வில் காந்தியாரின் கொள்ளுப் பெயரன் துஷார் காந்தி கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது “ஆர்.எஸ்.எஸ் நாட்டின் உயிர் மேல் உள்ள கேன்சர் நோய்” என்று உண்மையைக் குறிப்பிட்டுள்ளார்.”
(R.S.S a cancer on the nation’s soul- The Hindu March 14- 2025 -page 11).

ஆர்.எஸ்.எஸ்., பாஜக சங்கிகள் கும்பல் ஒன்று இக் கூட்டத்தில் கலகக் குரலை எழுப்பியுள்ளது.
இந்த அராஜகப் போக்கிற்குக் கேரள முதலமைச்சர் பினராயி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சத்தீசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடில்லியில் 1966 ஆம் ஆண்டு அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் காமராசர் இருந்த போது, அவரின் இல்லத்தின்மீது இந்து பாசிசக் கும்பல் தாக்குதல் நடத்தியது பற்றிய செய்தியை ஆங்கில இந்து நாளிதழ் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
உண்மையில் நடந்தது என்ன என்பதை, இந்நிகழ்வு நடந்த சில மணிநேரங்கள் கழித்துப் புதுடில்லியில் ஒன்றிய அரசின் கல்வி ஆலோசகராகப் பணியாற்றிய மறைந்த கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தர வடிவேலு “நினைவு அலைகள்” – என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.(மூன்றாம் தொகுப்பு)
இந்தக் காலக்கட்டத்திலும் மட்டுமல்ல எக்காலத் திலும் நினைவுகூரத்தக்கப் பல செய்திகள் இந்நூலில் உள்ளன.
பகுதி 67 இன் தலைப்பு “நிலை குலையாத காமராசர்” 1966 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின் பலத்தோடு பசு வதை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று சங்பரிவாரங்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தை முற்றுகை இட்டனர்.

கொலைவெறி தாக்குதல்

அவ்வழியில் காமராசர் தங்கியிருந்த இல்லத்தைக் கொலைவெறி கொண்டு தாக்குதல் நடத்தினர். காம ராசர் அப்போது மதிய உணவு முடித்து உறங்கிக் கொண் டிருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக காமராசரின் டெல்லி உதவியாளர் பின்பக்க வழியில் அழைத்துச் சென்று விட்டார். தமிழ்நாடு இல்லத்தில் காமராசர் தங்க வைக்கப்பட்டார். அப்போது நெ.து.சுவும் அவரது துணைவியார் திருமதி.காந்தம்மாளும் புதுடில்லியில் இருந்தார்கள்.
நெ.து.சு நூலில் உள்ள பகுதி:
“ஒரு மாலைப்பொழுது புதுடில்லி அலுவலகத்தி லிருந்து வீடு திரும்பினேன்.”
வீட்டிற்குள் நுழையும்போதே, தொலைபேசி அலறியது.
” நெ.து.சு வா பேசுகிறது?
கேள்விப்பட்டீர்களா? ஒரு செய்தியை?
பெருந்தலைவர் காமராசர் இல்லத்தை நிர்வாண சாமியார்கள் முற்றுகையிட்டு இருக்கிறார்களாமே !
அது உண்மையா என்று தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார்.”.
இதற்குப் பிறகு காமராசரைச் சந்திக்கத் தமிழ் நாடு இல்லத்திற்குச் செல்கிறார் நெ.து.சு. தனது துணைவி யாருடன்.
அங்கே வருகிறார் காமராசர்.

“என் மனைவியைப் பார்த்து விட்டு
என்ன நீங்கள் கூட வந்து இருக்கிறீர்கள்? என்று வியப்போடு கேட்டுக் கொண்டே வரவேற்பு அறையை நோக்கி நடந்தார்.”
வரவேற்பு அறையில் எல்லோரையும் உட்காரச் சொல்கிறார்.
“என்ன உங்கள் வீட்டைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு நிர்வாணச் சாமியார்கள் கலாட்டா செய்ததாகக் கேள்விப் ,படுகிறோமே?”
கேட்டவர் ஆம்பூர் காங்கிரஸ் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசகோபால் நாயுடு.
“ஆமாங்கறேன்.இன்று மத்தியானம்
என் வீட்டைச் சுற்றி கலாட்டா செய்தார்களாம்.
எனக்கு ஒன்றும் தெரியாது.நான் வழக்கம் போல் பகலுணவு உண்டதும் போய் உறங்கிவிட்டேன்.
“அம்பி வந்து என்னை எழுப்பி ஒன்றும் சொல்லாமல், நேரே பின்பக்க நுழைவாயில் வழியாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி இங்குக் கொண்டு வந்து இருக்கிறான்.”
“வருகிற வழியில், சாமியார்கள் என் வீட்டை முற்றுகையிட்டார்கள்.
தீ மூட்ட முயன்றார்கள் என்று கேள்விப்பட்டேன்.
அவ்வளவே எனக்குத் தெரியும்.”

“வெறிப் பயல்கள்; சுற்றி இருந்தால் என்ன செய்து இருப்பார்களோ சொல்ல முடியாது என்று கலகலப்பாகவே காமராசர் பதில் கூறினார்.”
எத்தனை ஆண்டுகள் பொறுப்பது?
1948 இல் தொடங்கிய, காந்தியாரைச் சுட்ட கொலை வெறி அடங்கி விட்டதா!
2003–ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து ஆதிகுடி மக்களிடம் தொண்டு செய்த பாதிரியார் கிராகம் ஸ்டார்ட் ஸ்டேனஸ், தனது மகன்களான பிலிப் (10 வயது), டிமோத்தி (வயது 8) ஆகியோருடன் சிறிய வேனில் உறங்கிக் கொண்டிருந்த போது உயிரோடு கொளுத்திக் கொன்றார்களே!

இந்தக் கொடூரமான படுகொலையைச் செய்தது பஜ்ரங் தள் என்ற மத வெறி கும்பலின் தலைவன் தானே!
ஒடிசாவில் சில மாதங்களுக்கு முன்பு பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆயுள் தண்டனை பெற்ற இக்கொலை யாளியை விடுதலை செய்துள்ளனர்.
இந்து மத வெறியர்கள் – கேரள கோட்சேக்கள் இன்று காந்தியின் கொள்ளுப் பெயரன் துஷார் காந்தியிடம்,
2025 ஆம் ஆண்டிலும் வன்முறை வாலை ஆட்டி யுள்ளார்கள்.
அன்று காமராசர் சொன்ன சொல்லை மறக்க முடியாதல்லவா?
“வெறிப்பயல்கள்.”
வெறிப்பயல்கள் செயல்களை எத்தனை ஆண்டுகள் பொறுப்பது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *